Thursday, January 24, 2019

பிள்ளைகள் நலனில் அக்கறை உள்ளவர்களுக்கு மட்டும்...

கொஞ்சம் கடுமையான பதிவுதான். பிள்ளைகள் நலனில் அக்கறை உள்ளவர்கள் மட்டும் படிங்க.
.
சில பைக் இருக்கு. ஒரு சேஸிஸ், அதுல ஒரு எஞ்சின், ரெண்டு‌ வீல். மொத்தமே இவ்வளவுதான். பின்னாடி இருக்கையில் ரெண்டாவது ஆளெல்லாம் உட்கார முடியாது. ஓட்டுறவன் முதுகில் தொங்கற பை மட்டும் இருக்கவே இடம் பத்தல.
.
இந்த வண்டியை ஓட்டிட்டு போற அத்தனை பேரும், எமலோகத்தை நோக்கி அவசரமா போற மாதிரியே எனக்குத் தோணுது. வாழ்க்கைல வேகமா முன்னாடி போகனும் அப்படிங்கிற எண்ணத்தைவிட, வாழ்க்கையவே விட்டுட்டு முன்னாடி போய்ச் சேர்ந்துடனும் அப்படிங்கிற எண்ணத்துலதான் இந்த வண்டிய வாங்கி ஓட்டறாங்களோ அப்படிங்கிற எண்ணம்தான் நமக்குத் தோணுது. இவங்க மட்டும் செத்தா பரவாயில்லை. வண்டிகளின் சந்துக்குள்ள வளைஞ்சு நுழைஞ்சு இவங்க ஓட்டுறத பார்த்து பதட்டத்துல, ரோட்டுல போற சின்ன வண்டி ஓட்டுறவங்களும் விழுந்து கையை, காலை உடைச்சுக்கிறாங்க அப்படிங்கிறது கூடுதல் வேதனை.
.
இந்த மாதிரி வண்டிகள், கண்டிப்பாக பந்தய மைதானங்களில் மட்டுமே ஓட்டத் தகுந்தவை. அயல் நாடுகளில் இத்தகைய வண்டிகளை சாலையில் ஓட்ட அனுமதிக்கிறார்கள் என்றால், அங்குள்ள சாலைகளின் நேர்த்தியும் போக்குவரத்து ஒழுங்கும் சிறப்பானவை. ஆனால் போக்குவரத்து நெரிசலாலும், ஒழுங்கீனத்தாலும் பிதுங்கும் இந்திய நகரங்களில் இதைப் போன்ற வண்டிகளை ஓட்ட அனுமதிக்கும் முட்டாள்கள்தான் இங்கே அதிகாரத்தில் இருக்கிறார்கள்.
.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த வண்டியை ஓட்டி விபத்துக்குள்ளான 9 இளைஞர்கள் அதே இடத்தில் மரணமடைந்திருக்கிறார்கள். அனைவருமே 22 வயதுக்கு உட்பட்டவர்கள் என்ற வேதனையான செய்தி.
.
உங்க வீட்டுப் பிள்ளைகள் இந்த மாதிரி வண்டியை வாங்கித் தரச்சொல்லி அடம் பிடித்தால், எக்காரணம் கொண்டும் வாங்கிக் கொடுக்காதிங்க. நடு ரோட்டிலிருந்து உங்க பிள்ளையை வழிச்சு எடுத்துட்டு வரும் மன வலிமை இருக்கவங்க வேணா வாங்கிக் குடுத்துட்டு, பிள்ளையின் சாவு செய்தி எப்போ வரும்னு காத்திட்டு இருங்க.

No comments: