Friday, October 20, 2017

உங்கள் பார்வையை மாற்றுங்கள் முதலில்...

காலையில் எழுந்ததும் சிறுநீர் கழிக்கவோ மலம் கழிக்கவோ நீங்கள் கழிவறை நோக்கி விரைகிறீர்கள் என்றால் உடல் கழிவுகளை அகற்றச் சொல்லி மூளை கட்டளையிடும்.அதன்பின்பு கழிவறைக்குப் போகிறோம். ஆனால் எந்த கட்டளையையும் மூளை இடாமலே வெளியேறுவதுதான் மாதவிடாய்.
மாதத்தில் இந்த சில நாட்களில் மாதவிடாய் வரும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தாலும் எந்த நேரத்தில் வரும் என்பது யாருக்குமே தெரியாது. சிலருக்கெல்லாம் சொல்லி வைத்தாற் போல் மாதம் தோறும் சரியான நாட்களிலும் வந்துவிடுவதில்லை. ஒரு வாரம் முன்பின் கூட ஆகலாம்.
முன்பெல்லாம் பெண்கள் பெரும்பாலும் வீட்டைவிட்டுச் செல்லாதவர்களாக இருந்தார்கள். எந்த நேரத்துக்கும் துணியை அடைத்தாவது தங்களை ஓரளவிற்காவது கறையில் இருந்து தப்பிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது எப்போதும் வீட்டைத் தாண்டி வெளியில் பயணிக்கும் சூழல் பெரும்பாலான பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. எப்போதும் ஹேண்ட்பேகில் நாப்கின் வைத்திருக்க வேண்டியிருக்கிறது.நமக்கு இல்லாவிட்டாலும்  நம் சகதோழி காதில் வந்து ரகசியமாய் சொல்லிவிட்டுப் போகும் போது கொடுக்கவாவது எப்போதும்
இருப்பொன்று தேவையாக இருக்கிறது.
சரி... இதெல்லாம் முன்னேற்பாடுகள் தான். நாப்கின் இல்லாத சூழல் ஒன்றில் தன்னையும் அறியாமல் ஆடையில் குருதி படிந்துவிட்டால் அதென்ன உலகமகா குற்றமா என்ன? சில நேரங்களில் நாப்கினே வைத்தாலும் அதிகப்படியான உதிரப்போக்கால் கறைபடிவதென்பது சாதாரண நிகழ்வுதான். ஆனால் ப்ளூ இன்கை நாப்கினில் கொட்டிக் காட்டும் விளம்பரங்கள் எல்லாம் கறைபடிவதை அவமானத்தின் அடையாளமாகத்தானே சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.
'செக்... செக்.. செக்' என பகிரங்கமாகவே சின்னத்திரையில் வரும் நாப்கின் விளம்பரத்தில் வகுப்பில் இருக்கும் பெண் பிள்ளைகள் தங்களின் பின்புறத்தை பார்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் தயாரிப்பு நாப்கினை வாங்கினால் ஆடையின் பின்புறத்தை அடிக்கடி சரிபார்க்க வேண்டாமாம். இதில் 8 மணி நேரத்துக்கு மேலாக தாக்குப்பிடிக்குமென்று இன்னொரு தகவலையும் பரப்புகிறார்கள். ஒரு உயிர் திரவம் சிறிய நாப்கினில் 8 மணி நேரம் தேங்கிக் கிடந்தால் பெண்ணுறுப்பு எவ்வளவு பாதிக்கப்படும் என்பதை யோசிக்கிறோமா?
நாப்கின் இருந்தால் குதிரையில் சவாரி செய்யலாம். ஓட்டப்பந்தயத்தில் ஓடலாம்.. வெற்றிக் கோப்பையோடு வீடு திரும்பலாம் என்கிற போலி கற்பிதங்களைத்தான் கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம்.
விளம்பரங்கள் மாதவிடாயை பெண்ணுக்கான பெரும்பாவமாய் சித்தரித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் பள்ளிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? ''ம்மா.. எதுக்கும் இன்னைக்கு ரெண்டு நாப்கின் வச்சிட்டுப் போயிடுறேன். மிஸ் அடிக்கடி பாத்ரூம் போக விடமாட்டேங்குறாங்க. பாய்ஸ் வேற பேக் ரோவுல இருக்காங்க" என்னும் மகளிடம் எவ்வளவு புரிதலை ஏற்படுத்தினாலும் "மிஸ்...பாய்ஸ்" என இரண்டே வார்த்தைகளில் தயக்கம் காட்டிவிட்டு நழுவிக் கொள்கிறாள். 7 ஆம் வகுப்பிலேயே பெரும்பாலான பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்துவிடுகிறார்கள். அப்படியிருக்க இதுவரை மாதவிடாய் விழிப்புணர்வை இருபாலருக்கும் சொல்லித்தருவதை பள்ளிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளாததால்  தற்கொலை வரையிலும் கூட சத்தமே இல்லாமல் நிகழ்ந்துவிடுகின்றன மாதவிடாய்க் கொலைகள்.
ரோஷினி டாக்டர் ரோஷினியாக தினமும் ஹார்லிக்ஸ் கொடுங்கள் என்னும் விளம்பரத்தில் இருக்கும் அரசியல் உணராத, கஞ்சியை மட்டுமே குடித்துப் படித்த அனிதாக்களின் உயிரிழப்பை பற்றி காசுப் பார்க்கத் துடிக்கும் யாருக்கும் கவலையில்லை.
நீங்கள் சந்திக்கும் சகோதரியோ தோழியோ உங்கள் முன்னால் கறையோடோ இல்லை மெதுவாகவோ நடந்து சென்றால் நீங்கள் உடனடியாக ஓடிச்சென்று நாப்கின் வேண்டுமா என்று கேட்கிறீர்களோ இல்லையோ... பின்னால் இருந்து கிசுகிசுக்காமல் இருப்பது கூட நல்லதுதான்.
எங்களுக்கு பயமெல்லாம் கறை மீது அல்ல...
கரை சேரமுடியாமல் பெண்களுக்கென புதிதுபுதிகாகக் கட்டவிழ்ந்துக் கொண்டிருக்கும் இத்தகைய காரணங்கள் தான்!

No comments: