Saturday, December 2, 2017

தொடர்ந்து ஓடுங்கள்

பல வருடங்களுக்கு முன் கிரீஸ் தேசத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி ஒன்றில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் முக்கிய இடம் பெற்றிருந்தது.
பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்திற்கு இடையில் முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு பதக்கங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.
அப்போது ஒலிபெருக்கியில் இன்னொரு அறிவிப்பும் வந்தது, “இன்னொரு வீரன் கடைசியாக ஓடிவந்து கொண்டிருக்கிறார்” என்பதே! எல்லோருக்கும் ஆச்சரியம். 
வீட்டுக்குப் போக ஆயத்தப்பட்டவர்களெல்லாம் நின்று விட்டார்கள்.  “இனி ஓடி என்ன பிரயோஜனம், நின்றுவிட வேண்டியதுதானே”  என்பது பலரின் கருத்து.  “சரி என்னதான் ஆகுமென்று பார்ப்போம்” என காத்திருந்தனர். 
அந்த கடைசி ஓட்டப்பந்தயவீரர் மைதானத்திற்குள் வந்துவிட்டார்.  பத்திரிக்கையாளர்களும் மீடியாக்களும் அவரை சூழ்ந்து கொண்டனர். 
பார்வையாளர்கள் கண் இமைக்காமல் அவரை பார்த்துக் கொண்டிருக்க, “எல்லாம் முடிந்துவிட்டது.  உங்கள் ஓட்டத்தை நிறுத்தியிருக்கலாமே?”  என ஒருவர் கேட்டார். 
அதற்கு அவர், “என் நாடும் என் மக்களும் என்னை நம்பி அனுப்பியதன் நோக்கம் இடையில் ஓட்டத்தை நிறுத்துவதற்காக அல்ல; என் இலக்கை அடையும்வரை ஓட்டத்தை ஓடி முடிப்பதற்காகவே! அவர்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் உடைக்க எனக்கு உரிமையில்லை.  ஆகவே கடைசிவரை ஓடினேன்” என்றார்.  இதைக் கேட்டவுடன் முழு மைதானமுமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி ஆரவாரித்தனர்.
வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டது... இனி ஒன்றும் செய்யமுடியாது என்று ஓரமாக ஒதுங்கி வாழ்க்கை ஓட்டத்தை நடுவிலேயே நிறுத்திக் கொண்டீர்களா?
உன்னைக் குறித்தும் ஒரு காரியம் உண்டு அதனை நீ செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஒன்று இருக்கிறது என்பதை மறந்து விட்டீர்களா?
உங்கள் ஓட்டத்தை ஆரம்பித்தவர் அதனை முடித்து வைப்பார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து  ஓடி வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.
படைத்த இறைவனின் துணை என்றும் உண்டு என்பதை மறவாதே...

No comments: