Thursday, December 14, 2017

மனதை நெருடிய பகிர்வு : முதுமையின் இயலாமை

எனக்கு 77 வயது! அன்பின் நீரூற்றை மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும் ஒருவன்.
இருக்கின்ற மூன்று மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம்.
இப்போது இருப்பது இரண்டாவது மகனிடம். இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது
கடைசி மகனிடம் செல்ல!
இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டு எண்ணிக் கொண்டு இருக்கிறேன் கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக. போன தீபாவளிக்கு இரண்டாவது மருமகள் வாங்கித்தந்த வெள்ளை வேட்டி பழுப்பு நிறமாகி பலநாட்கள் ஆகிவிட்டது.
முதல் மகன் வாங்கித்தந்த கண்ணாடி உடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது.
இப்போது இருக்கும் கோபக்கார மகனிடம் கேட்டால் என்ன சொல்வானோ என்று பயந்து கண்ணாடியை ஒளித்து வைத்துவிட்டு வெறுங்கண்களோடு தடுமாறிக் கொண்டு இருக்கிறேன்.
கடைசி மருமகளிடம் சொல்லி தான் மாற்றிக்கொள்ள வேண்டும். இன்னும் நான்கு நாட்கள் தான் என்பதால் எல்லோரும் வேலைக்கு போனபின்பு என்னுடைய வேட்டி ஜிப்பாக்களை துவைத்து வைத்துக் கொள்ள வேண்டும், துணி துவைக்கும் மிஷின் இருந்தாலும் என்னுடைய துணிகளை தனியாகத்தான் போடவேண்டும் என்று சொல்லி அவர்களின் ஆடையோடு கூட ஒட்டவிடாமல் ஏனோ அந்நியமாக வைத்திருக்கிறார்கள்.
கஷ்டமாக இருந்தாலும் மகனிடம் கூட எதுவும் சொல்வதில்லை, மருமகளும் சொல்ல விடுவதில்லை! இன்னும் நான்கு நாட்கள்தானே என்று ஹாஸ்டலில் இருந்து ஆசையோடு வீட்டுக்கு ஓடும் குழந்தையைப்போல் கடைசி மருமகளின் வீட்டுக்கு போக என்னுடைய உடைகளை நானே ஆர்வமாக துவைத்துக் கொண்டிருக்கிறேன்! கடைசி மகன் மற்றவர்களை போல் கார் சொந்த வீடு என்று வசதியாக இல்லை, வாடகை வீடு தான், இரண்டு பேருக்கும்
இரண்டு ஸ்கூட்டர் இருக்கிறது.
நான் ஊருக்கு போகும் போதெல்லாம் மருமகள் தான் ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு பஸ் ஸ்டேண்டு வருவாள். அந்த ஸ்கூட்டரில் உட்கார்ந்து கொண்டு போவதில் அப்படி என்ன ஆனந்தமோ எனக்கு தெரியாது, என்னென்ன நடந்தது என்று அவள் கேட்டுக் கொண்டே போக நான் பின்னால் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி யாரைப்பற்றியும் எந்த குறையும் சொல்லாமல் நல்லதை மட்டுமே சொல்லிக்கொண்டு போவேன்!
அவள் கெட்டிக்காரி என்பதால் போகும் வழியில் எனக்கு பிடித்த ரோஸ்மில்க் வாங்கி கொடுத்து வேடிக்கை பார்க்கும்போது கண்டுபிடித்து விடுவாள். வீட்டுக்கு போனதும் என்னுடைய கட்டை பையை ஆராய்ச்சி செய்து மருந்து மாத்திரை களாவது சரியாக வாங்கி கொடுத்திருக்கிறார்களா என்று தேடிப்பார்த்து திட்டுவாள்.
அதில் அவளுக்கு பிடித்த பாதுஷா சுவீட்டை நான் வாங்கி வந்திருப்பதை பார்த்து சிரித்துவிடுவாள். இவளை ஏன் எனக்கு மகளாக பெற்றுத் தரவில்லை என்று மீனாட்சியிடம் சண்டை போடக் கூட அவள் அருகில் இல்லாமல் எனக்கு முன்னால் போய் சேர்ந்துவிட்டதில் நிறைய வருத்தம் எனக்கு.
நான்கு நாட்கள் கழித்து பஸ்ஸில் போய் இறங்கினேன், எப்போதும் போல் எனக்கு முன்வந்து
காத்திருந்தாள். ஓடி வந்து பையை வாங்கிக் கொண்டாள், ஸ்கூட்டரில் பத்திரமாக உட்கார
வைத்துக் கொண்டாள், உங்களை ஷேவிங் பண்ண கூட கூட்டிட்டு போக நேரம் இல்லையாமா
அவங்களுக்கு, அவ்ளோ பெரிய ஆளுங்களா ஆயிட்டாங்களா எனும்போதே அதெல்லாம் இல்லம்மா ரெண்டுபேரும்.... என்று ஆரம்பிக்கும் போதே இப்படியே பேசி பேசி அவங்களை
காப்பாத்திட்டு இருக்காதீங்க, பேசாம வாங்க என்று ரோஸ்மில்க் கடைக்கு போவதற்குள் சவரக்கடைக்கு தான் அழைத்து செல்வாள்.
கண்ணாடி என்ன ஆச்சு என்று முறைத்தாள், பெயிலான மார்க் சீட்டை காட்டும் குழந்தையை போல் தயங்கி தயங்கி ஒரு பக்கம் உடைந்த கண்ணாடியை காட்டினேன்! கோபத்தை வெளிக்
காட்டாமல் கண்ணாடி மாற்ற அழைத்து சென்றாள். இதுக்கு தான் உங்களை அனுப்ப மாட்டேன்னு சண்டை போடுறது புரியுதாப்பா... என்று முறைத்தாள்... என்னிடம் பதிலில்லை!
ஊர் உலகத்துல யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னு பெருமைக்கு கூட்டிட்டு போறது அப்புறம் உங்களை கஷ்டப்படுத்தி அனுப்புறது.. இதே வேலையா போச்சி எல்லாருக்கும் என்று முணுமுணுத்துக்கொண்டே கண்ணாடியை மாற்றிக்கொடுத்தாள், துணியெல்லாம் சுத்தமா துவைச்சிருக்கே நீங்கதானே துவைச்சீங்கபொய் சொல்லாம சொல்லுங்க என்று டீச்சரை போல் முறைக்க என்ன செய்வது என்று தெரியாமல் பாதி பற்களோடு சந்தோஷமாய் சிரித்தேன், அவளும் சிரித்துவிட்டாள்!
எனக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி பையை நிரப்பிக் கொண்டு வீட்டுக்கு அழைத்து சென்றாள். ஸ்கூட்டரில் உட்கார்ந்து செல்லும்போது லேசா மயக்கமா இருக்கு
சாஞ்சிக்கிட்டும்மா என்று கேட்டேன், கொஞ்சதூரம் தான்பா போயிடலாம் பத்திரமா சாஞ்சிகொங்க என்று சொல்ல மெதுவாக சாய்ந்து கொண்டேன்.
உண்மையில் எனக்கு மயக்கமெல்லாம் இல்லை, நான் பெறாத மகளின் மீது சாய்ந்து கொள்ள ஆசையாக இருந்தது, அதனால் தான் பொய்சொல்லி சாய்ந்துகொண்டேன்.
இன்னும் ஒரு மாதத்திற்கு அவளின் செல்ல திட்டுகளுக்கு நடுவில் காணாமல் போகும் என் முதுமையின் ஊமைக்காயங்கள்.
முதுமையின் இயலாமையையும், ஏக்கங்களையும், சின்னச்சின்ன அன்புக்குகூட மனம் என்னவாய் தவிக்கும் என்பதையும் கடைசி மருமகள் போல சில மருமகள்கள் பெறாத மகள்களாக இன்னும் இந்த பூமியில் வாழ்கிறார்கள் என்பதை, இந்த மெல்லிய உணர்வின் மூலம் இழைத்து ஒரு சின்னப் பதிவில் ஒரு பெரிய செய்தியை உணர முடிந்தது.
அருமை. எல்லோருக்கும் அந்த ஸ்கூட்டர் மருமகளைப் போல் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்கும் ?

...

No comments: