Wednesday, January 23, 2019

மனதில் இருக்கட்டும் மகிழ்ச்சி...

நம்மிடையே மகிழ்ச்சி இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதை நாம் முறையாக கையாள்கிறோமா என்பதுதான், முக்கியமான கேள்வி.

அப்படி இருந்தால் எல்லோரிடமும் புன்முறுவல் செய்து கொண்டிருப்போம்.

ஏதோ ஒன்றை இழந்தது போல், நமக்கு நாமே பேசி, மன உளைச்சலுடன் இருப்பதை,பலரின் வாழ்வில் காண முடிகிறது.

குடும்ப பாரம், அலுவலகத்தில் கூடுதல் பணி, யாராவது ஒருவர் நம்மை பற்றி தவறாக பேசி விட்டால், அவர் மீது தொடர் கோபம் என்று, மனதில் போட்டு, குப்பை தொட்டியாக வைத்திருக்கிறோம்.

குப்பை தொட்டியில், குப்பை அகற்றாமல் வைக்கப்பட்டு இருந்தால் என்னவாகும்? துர்நாற்றம் ஏற்பட்டு விடும் அல்லவா.

அதுபோல்தான் நம் மனமும். மனம் எப்போதும், மகிழ்ச்சியைதான் எதிர்பார்க்கிறது.

ஒருவர், உங்களை பாராட்டினாலும்,குறை சொன்னாலும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பாராட்டும்போது பறப்பதும், குறை சொல்லும் போது சோர்வதும் என இருந்தாலும், நம்முடைய வளர்ச்சி வேகத்தடையாய் ஆங்காங்கே நிற்கும்.

யார் என்ன சொன்னால் என்ன? உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியும். அடுத்தவர்களை பற்றி நீங்கள் புறம் பேசி இருந்தால், உங்கள் மனமே உங்களை தண்டித்து விடும்.

அதற்கு தயவு செய்து இடம் கொடுத்து விடாதீர்கள். வீட்டுக்கு சென்றவுடன், செருப்பை கழற்றி வைப்பது போல், சுமந்துக் கொண்டு இருக்கும் பாரத்தையும், வாசலிலேயே இறக்கி வைத்து விடுங்கள்.

அடுத்தவர் பற்றி, உங்களிடம் யாராவது குறை கூற வந்தால், அதை தவிர்த்து விடுங்கள்.

ஒவ்வொருவருக்கு உள்ளும் சாதிக்கும் ஆற்றல் ஏராளமாக உள்ளது.

இதை கண்டுபிடித்து, அதன் வழியில் பயணிக்கும் போது, இன்று கிடைக்கா விட்டாலும், என்றாவது ஒருநாள் வெற்றி கிடைத்தே தீரும்.

ஏனென்றால், உண்மையான உழைப்புக்கு என்றும் தோல்வி இல்லை. வரலாறு கற்றுக் கொடுக்கும் பாடம் இதுதான்.எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், எல்லோருக்கும் உங்களை பிடிக்கும்.

ஆம்.,நண்பர்களே.,

‘மகிழ்ச்சி, அமைதியை தேடி பலரும் வெளியே அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.,

மகிழ்ச்சி, அமைதி உங்களுக்குள்ளேதான் இருக்கிறது..

ஆம்.,நமக்குள்தான் எல்லோமே இருக்கிறது. நமக்குள் எல்லா வற்றையும் வைத்துக் கொண்டு வெளியே தேடி அலைய வேண்டாம்...

No comments: