Sunday, January 20, 2019

தமிழ் மொழி வளர்த்த சுப்பிரமணிய சிவா...

பிரித்தானிய வல்லாதிக்க எதிர்ப்பாளர் சுப்பிரமணிய சிவா என்பதை நாமறிவோம். 'வீர முரசு' என்று பட்டம் சூட்டப்பெற்ற சிவாவின் 19ஆண்டு கால பொது வாழ்க்கையில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். மீதமுள்ள ஆண்டுகளில் அவர் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியவை. இந்திய விடுதலை, ஆன்மிகம், தமிழ்மொழி இந்த மூன்றிலும் தடம் பதித்தவர்.

சுப்பிரமணிய சிவா 4.10.1884ஆம் ஆண்டு வத்தலக்குண்டு ஊரில் இராசம் ஐயர் நாகம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

இளம் வயதில் தனது மொழிப்பற்றை வளர்த்துக் கொண்டார் சிவா. மதுரையில் 12வயது வரை  வாழ்ந்து வந்த நிலையில், வறுமையின் காரணமாக திருவனந்தபுரம் சென்று இலவச உறைவிடப் பள்ளியில் தங்கிப் படித்தார். பின்னர் கோவை மைக்கேல்ஸ் கல்லூரியில் மேற்படிப்பை தொடர்ந்தார். 1899ஆம் ஆண்டு மீனாட்சியம்மை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் பார்ப்பன குலத்தில் பிறந்த போதிலும் பார்ப்பன ஆதிக்கத்தை மறுத்த வ.உ.சி.யோடு தோழமை கொண்டார். 1908ஆம் ஆண்டு வ.உ.சி.யோடு இணைந்து இந்திய விடுதலைப் பரப்புரையில் ஈடுபட்டார். இவரின் பேச்சை செய்தி ஏடுகளெல்லாம் உரை என்று எழுதிடாது 'வீர முழக்கம்' , 'வீர கர்ஜனை' என்றும் தான் குறிப்பிட்டு எழுதின. அவர் உரை கேட்ட அக்கால தமிழர்கள் "சிவம் பேசினால் செத்த சவமும் எழும்" என்று தங்களுக்குள்  பேசிக் கொண்டனர்.   வ.உ.சி.யோடு சேர்ந்து வீர முழக்கம் செய்து வந்த காலத்தில் தான் சிவாவிற்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் பிரித்தானிய அரசின் கொடுமைகளுக்கு அஞ்ச மறுத்த சிவா "சிறைவாசம்" என்றொரு சிறப்பான நூலொன்றை எழுதினார்.

அதில், சகோதரர்களே! இப்பரந்த உலகில் சுகமும், துக்கமும், மாறி மாறி வரும் இயல்புள்ளவை. சுதந்திரம் என்ற சத்தியத்திற்காக நாம் அடைபட்டுக் கிடக்கும் சிறைச்சாலை அனைத்தும் தவச்சாலைகளே, மானிடச்சாதியின் சுதந்திரத்தைத் தேடிச் செல்லும் பணிக்காக மேற்கொள்ளும் சிறைத் தண்டனை என்ற துன்பத்தை நாம் கம்பீரமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இதனைப் படிக்கும் போது பொது நலனுக்காக அல்லாமல், தாம் செய்த ஊழலுக்காகக் கூட சிறை தண்டனை ஏற்க மறுக்கும் தற்கால அரசியல்வாதிகள் தான் நம் நினைவில் வந்து தொலைக்கின்றனர்.

வ.உ.சி.யின் தமிழ்ப்பணியை அவர்தம் வாழ்வின் மறுபக்கம் என்பர். சிவாவின் தமிழ்ப்பணியும் அவ்வாறு தான். சிறையை விட்டு வெளியே வந்ததும் தனது தமிழ்ப்பணியை தீவிரப்படுத்தினார். எழுத்துச் சீர்திருத்தத்திற்கும், தூய தமிழ் இயக்கத்திற்கும் 1913இல் "ஞான பானு" எனும் பெயரில் இதழொன்றை தொடங்கினார். "தமிழில்  எழுத்துக்குறை" எனும் தலைப்பில் கட்டுரைப் போர் நடத்தினார். அதில் பாரதியாரும், வ.உ.சியும் பங்கேற்று தமிழுக்கு ஆக்கம் செய்தனர்.

1915இல் சமசுகிருதம் உள்ளிட்ட ஏனைய அந்நிய மொழி கலவாத தனித் தமிழில் கட்டுரை எழுதினால் ஐந்து ரூபாய் பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார். அக்காலத்தில் வெளிவந்த 'சுதேசிமித்திரன்' ஏட்டில் ஆங்கிலச் சொற்கள் கலக்கப்படுவதைக் கடுமையாக கண்டித்தார். கலைச் சொல்லாக்கம் செய்திடும் போது "ஆங்கில வார்த்தைகளுக்குச் சரியாகப் பொருள்படும்படியான தமிழ்ச்சொற்களை உண்டு பண்ணிக் கொள்ளுதல் அவசியமாகுமே தவிர ஆங்கிலப் பதங்களை அப்படியே தமிழ் எழுத்துக்களிலும் எழுதி விடுவது ஸ்வய பாஷையைக் கொலை செய்தது போலாகும்" என்று வேதனையோடு குறிப்பிட்டார்.

திருக்குறள் போன்றதோர் நூல் இவ்வுலகமெங்கும் தேடிப் பார்த்தாலும் கிடைக்காது. பிரம்ம சூத்திரத்தை படிப்பதை விட திருக்குறளைப்படி என்றார். அவர் "கற்ககசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" எனும் குறளுக்கு விளக்கவுரை எழுதிவிட்டு பின் வருமாறு குறிப்பிட்டார்; "எத்தனையோ யோகீஸ்வரர்கள், எத்தனையோ ரிஷீஸ்வரர்கள், எத்தனையோ மகான்கள் எண்ணற்ற சாஸ்திரங்களையும் பரோபகார்த்தமாக எழுதி இருக்கின்றனர். எல்லாப் பாஷைகளிலும் எல்லாத் தேசங்களிலும் எத்தனையோ சாஸ்திரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆயினும் தேன்மொழி போன்ற நமது தென்மொழியில் திருவள்ளுவர் இயற்றியருளிய திருக்குறளைப் போன்றதோர் நூல் எத்தேசத்திலும் எப்பாஷையிலும் எவராலும் இயற்றப்படவில்லை என்று நாம் கூறத் துணிகிறோம். தமிழ்ப்பாஷைக்கு என்றும் அழியாத் தன்மையை ஏற்படுத்தியவர் திருவள்ளுவர் என்று மேல்நாட்டாரும் ஒப்புக் கொள்கின்றனர். இவர்  பாஷா ஞானிமாத்திரம் அன்று; ஆத்ம ஞானதீரர்" என்று திருவள்ளுவரை உயர்த்தி பிடித்தார். தனக்கு தண்டனை தந்த நீதிமன்றத்திலும் திருக்குறளை எடுத்துரைத்து வாதிட்டார்.

1916 இல் அவர் எழுப்பிய தமிழ் முழக்கம் வருமாறு:

தமிழ்ப்பண்டிதர்களே! தமிழ் மகா ஜனங்களே! ஜாக்கிரதை! ஜாக்கிரதை! உங்களுடைய பாஷையை காப்பாற்றுங்கள். ஒரு ஜன சமூகத்திற்கு உயிர் அதன் பாஷை தான். தமிழ் பாஷை அழிந்து விட்டால் தமிழர்களின் சிறப்பும் சீரும் அழிந்து விடும்! உங்கள் நா தமிழே பேசுக! நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக! உங்களுடைய இருதயம் தமிழையே நாடுக!

சுப்பிரமணிய சிவா தன் வாழ்நாளின் இறுதியில் தொழு நோய் கொண்டு மடிந்ததைப் போல அவன் நேசித்த தமிழும் ஆங்கிலத் தொழுநோயால் இன்று பீடிக்கப்பட்டுள்ளது. அவர் பிறந்த நாளில் ஒரு போதும் தமிழை மடிய விட சம்மதியோம் என்று சூளுரைப்போம்!

No comments: