Friday, February 1, 2019

குரு தான் முதல்ல அப்புறம் தான் மாதாவும் பிதாவும்...

முனுசாமிக்கு சென்னையில் உள்ள என்ஜினியரிங் காலேஜில் 4 வது ஆண்டு படிக்கும் அவர் மகன் ராஜாவிடம் இருந்து போன்...

என்னப்பா இப்பிடி பண்ணிட்டிங்க... என்று கோபத்துடன் கேட்டான் ராஜா....

முனுசாமி பதறியபடி, ஏம்பா... என்னாச்சு என்றார்...

நம்ம ஊர் ஸ்கூல் வாத்தியாரெல்லாம் ஸ்டிரைக் பண்ணிணப்போ , "இந்த வாத்தியாருங்கல்லாம் ஆயிரக்கணக்குல சம்பளம் வாங்கிட்டு சம்பளம் பத்தலனு ஸ்டிரைக் பண்றாங்க... இதே வேளையா போச்சு... இவிங்களுக்குனு டிவில பேட்டி கொடுத்துருக்கீங்க...." என்று கோபமாக பேசினான் ராஜா.

அதற்கு முனுசாமியும் கோபமா , " ஆமாம்பா.... நான் பேட்டி கொடுத்ததுல என்னப்பா தப்பு. இந்த வாத்தியாருங்கல்லாம் காலாண்டு லீவு, அரையாண்டு லீவு, முழு பரீட்சை லீவுனு பாதி நாள் லீவுலேயே இருந்துகிட்டு ஆயிரக்கணக்குல சம்பளத்தை யும் வாங்கிகிட்டு ஸ்டிரைக் பண்ணா புள்ளங்க படிப்பு என்னாகும்.. ஏம்பா உன் தம்பியும் அந்த பள்ளிக்கூடத்துல தானே படிக்கிறான்... அவனுக்காகத்தான்பா அப்படி பேசினேன்.. இதுல என்ன தப்புங்கிற நீ .... என்றார் முனுசாமி..

புரியாம பேசாதப்பா...

+2 வுல  நம்ம ஸ்கூல்லயே நான்தான் பர்ஸ்ட் மார்க். சென்னைல இன்ஜினியரிங் காலேஜ்ல சீட் கிடைச்சப்போ உன்னால பீஸ் கட்ட முடியாது னு தெரிஞ்சி நான் நம்ம ஸ்கூல் கஸ்தூரி ரங்கன் வாத்தியார்ட போய் சொல்லி அழுதேன். உடனே அவர் யார் யாருக்கோ போன் போட்டு மறுநாளே எனக்கு பீஸ் கட்டுறதுக்கு பணத்தை கொடுத்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா...

நீ ஒன்னும் கவலைப்படாம படி ராஜா... உனக்கு நாலு வருசமும் நான் பீஸ் காட்டுறேன்... உங்க அப்பாவை தொந்தரவு பண்ணாதே..
டேய் ராஜா, இந்த உதவியை யார்டயும் சொல்லக் கூடாது னு சத்தியம் வாங்கிட்டாருப்பா... 

அது மட்டுமில்ல, நீ சொன்னியே காலாண்டு லீவு அரையாண்டு லீவு முழு பரீட்சை லீவு...
இந்த எல்லா லீவுலயும் எங்களுக்கு ஸ்பெசல் கிளாஸ் நடத்தி எங்க ஸ்கூல் வாத்தியாருங்க எல்லாரையும் பாஸ் பண்ண வச்சாங்க... பரீட்சை சமயத்தில நம்ம தங்கராஜ் வாத்தியாருக்கு புள்ள பொறந்து இருந்துச்சு...

லீவு போட்டா பசங்க படிப்பு வீணாகும்னு நைட்டோட நைட்டா போய் புள்ளய பாத்துட்டு மறுநாள் காலைல ஸ்கூலுக்கு வந்துட்டாரு. அது மட்டுமல்ல...

நம்ம ஸ்கூல்ல நல்லா படிக்கிற ஏழை பசங்க காலேஜ்ல படிக்கிறதுக்கு பீஸ் கட்டுறதுக்குனே எங்க ஸ்கூல் வாத்தியாருங்கல்லாம் மாசாமாசம் ஆயிரம் ரூபாய் சேத்து கிட்டு வர்ராங்க...
நீ இவ்வளவு பேசுறியே... நம்ம ஊரு ஸ்கூலுக்கு இதுவரையும் ஒரு ரூபாய்க்கு சாக்பீஸ் வாங்கி கொடுத்துருப்பியா...

ஆனா எங்க ஸ்கூல் வாத்தியாருங்கல்லாம் சேர்ந்து எங்க ஸ்கூல்ல கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்துருக்காங்க..
போன செமஸ்டர் லீவுல ஊருக்கு வந்தப்ப கூட நம்ம ஸ்கூல் ஹெட்மாஸ்டர் எட்வர்டு சார், டேய் ராஜா, உன் தம்பியும்  உன்ன மாதிரியே நல்லா படிக்கிறான்டா...
அவன் என்ன படிக்க விருப்ப படுறானோ அத நாங்க படிக்க வச்சிக்கிறோம்..
அத பத்தியெல்லாம் கவலைப் படாம
நீ நல்லா படிக்கனும் ராஜா ... நல்ல வேலைக்கு போய் உங்க அப்பா அம்மாவை நல்லா வைச்சுக்கனும்டா....னு சொன்னாரு....
அவங்கள போய் தப்பா பேச உனக்கு எப்புடிப்பா மனசு  வந்துச்சு.... 
என்ன பொறுத்தவரையும்  குரு தான் முதல்ல....
அப்புறம் தான் மாதாவும் பிதாவும்....

மறுமுனையில் முனுசாமி அழுது கொண்டிருந்தார்.

No comments: