Sunday, April 12, 2020

உழைப்பு என்ற பேராயுதம்...

என்னால் முடியாது என்று அடிக்கடி சொல்லவே சொல்லாதீர்கள் !

அது ஆழ் மனசில் பதிந்து, அது முடியாது என்று நீங்கள் சொன்ன தன் வேலையை செய்து விடும் !

நீங்கள் எந்த வேலையில் ஈடு பட்டாலும், நம்மால் முடியாது என்று நினைத்தால் அது உங்களை தொடர்ந்து பலவீனப் படுத்திக் கொண்டே இருக்கும் !

அதற்குப் பதிலாக என்னால் முடியும் என்று அடிக்கடி சொல்லிப் பாருங்கள்.

அது அடி மனதில் பதிந்து, நீங்கள் செயல் படும் பொழுது ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கும்.

விடியும் ஒவ்வொரு நாட்களையும் உற்சாகத்தோடு வரவேற்க பழகிக் கொள்ளுங்கள்.

அப்போதுதான் அன்றாடம் நீங்கள் செயல் படுவதற்கு தேவையான  சுறுசுறுப்பு தெம்பாக கிடைக்கும்!

வாழ்க்கையில் எதிர்படும் தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள்.

பணத்தை பார்த்துப் பார்த்து செலவு செய்யத் தெரிந்த பலர், நேரத்தை வீணாக கண்ட படி செலவு செய்கிறார்கள் !

அதனால்தான் அவர்களின் முன்னேற்றம் தடை படுகிறது.

நமக்கு வேண்டிய சக்தி நமக்கு உள்ளேயேதான் இருக்கிறது.
அது வேறு எங்கும் இல்லை.

நாம் அதை பயன்படுத்தும் அளவைப் பொறுத்தே நமது முன்னேற்றம் இருக்கிறது!

நம்மால் முடியும் என்று நம்பினால் நிச்சயம் அந்தக் காரியம் நினைத்த படி எண்ண அலைகளால் நிறைவேறி விடும்!

நம் மனசுக்குள் தளராத நம்பிக்கை என்ற ஒரு ஜெனரேட்டர் இருக்கிறது!

அதை ‘ஆன்’ பண்ணினால் வேண்டிய மட்டும் நமக்கு சக்தியை உருவாக்கிக் கொடுக்கும்.

வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புபவர்கள் தங்கள் ஆழ் மனதில்  நல்ல சிந்தனைகளை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

எப்பொழுதும் நல்ல சிந்தனைகள் நல்ல பலன்களையும், தீய சிந்தனைகள் தீய பலன்களையும் தரும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நம் சிந்தனைகள் எப்பொழுதும் நேர்மையான பாதையில் இருக்கும் பட்சத்தில், யார் என்ன நினைப்பார்கள் என்று ஒரு நிமிடம் கூட கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லை.

நிஜ வெற்றி பெற்றவர்களைக் கவனித்தால் நமக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாகப் புரியும்.

ஒன்று அவர்கள் எப்பொழுதும் நேர்மையான வழியிலேயே சென்று இருப்பார்கள்.

இரண்டு அவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் தன்னம்பிக்கையை இழந்திருக்கவே மாட்டார்கள்.

நமது இலட்சியம் மட்டும் மிக உயர்வாக இருந்தால் போதாது.
அதை அடையும் வழியும் உயர்வாகவே இருக்க வேண்டும்.

ஒரு காரியத்தைத் தொடங்கும் போது இருக்கும் வேகம் அதை முடிக்கும் வரை இருக்க வேண்டும்.
ஓவ்வொரு அனுபவமும் நமக்கு ஒரு பாடமாக இருக்கும்.

எதிர் படும் ஓவ்வொரு தடையுமே நமக்கு ஒரு புதிய வழியை யோசிக்க வைக்கும்.

நம் கடமைகளை ஒழுங்காக நாம் செய்யும் போது, தீய வழிகளில் நாம் செல்வதை அதுவே நம்மை அறியாமல் கூட தடுத்து விடும்.

நேரத்தை வீணாக்குவதும், நம்பிக்கையை இழப்பதும் கிட்டத்தட்ட தற்கொலை முயற்சிதான்.

நேர்மையும், நாணயமும் இல்லாதவர்கள் தேடிக் கொள்ளும் புகழும், வெற்றியும் நிச்சயம் நிரந்தரமானது அல்ல.
விரைவில் படு குழியில் தள்ளி விடும்.

நல்ல புத்தகங்கள் படிப்பது நல்ல அறிவாளிகளுடன் பேசுவதற்கு சமம்.

யாரிடம் பேசினாலும் அளவோடு பேசுங்கள்.
இனிமையாகப் பேசுங்கள்.

நல்ல ஒழுக்கத்தை விட மேலான ஒன்றை நீங்கள் உங்கள் குழந்தைக்கு கற்றுத் தந்து விடவே முடியாது.

எப்படி ஒருவன் சாக்கிய பௌத்த மொட்டை அடிப்பதால் மட்டும் துறவி ஆகி விட முடியாதோ, அதே போல் கற்பனையில் ஆசைப் பட்டால் மட்டும் வாழ்க்கையில் முன்னேறி விட முடியாது.

நம்பிக்கையோடு உழைப்பு என்ற பேராயுதத்தை கைகளில் எடுங்கள்.

அது வறுமை, சோம்பேறித்தனம், தீய குணம் அனைத்தையும் பொசுக்கி, உங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்று விடும்.

பொறுமையை விட மேலான தவம் இல்லை.
திருப்தியை விட மேலான இன்பம் இல்லை.
இரக்கத்தை விட உயர்ந்த அறம் இல்லை.
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும் இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள்.

முடியும் வரை அல்ல.
உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

No comments: