Tuesday, April 21, 2020

மன உறுதி இருந்தால்தான்...

மன உறுதி என்பது உறுதியான முடிவான, வலுவான மன விருப்பம் என்கிற பண்பு நலனாகும். 

ஓர் அற்புதமான கருவில் இருந்துதான் ஒரு சிறந்த புத்தகம் உருவாகிறது. 

அதேபோல் மனிதனுக்கு மன உறுதி இருந்தால்தான் அவனுக்கு சிறந்த வாழ்க்கை அமையும்’ -என்று அமெரிக்க எழுத்தாளர் லூயி லேமுர் (Louis L'Amour) உதிர்த்த பொன்மொழி..

திடமான மன உறுதியினால் நெருக்கடியையும், பெருங்கேட்டையும், துன்பத்தையும் கண்டு பின் வாங்காமல் துணிச்சலுடனும், உறுதியுடனும், மனவலிமை உடனும் சமாளிக்க முடியும். 

நடைபெறுகிற நிகழ்ச்சிகளிலோ, சூழ்நிலைகளிலோ முடங்கிப் போய் விடாமலும், அழிந்து போய் விடாமலும் எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது. 

ஒருவர் தமது குறிக்கோளை வெற்றிகரமாக அடைவற்கு உதவுவது மனஉறுதி.

எதிர்பாராத பாதிப்புகள் தாக்குகிறபோது பொறுமை உடனும், மனவலிமை உடனும் அதனை எதிர் கொள்வதற்கு மனஉறுதி ஒருவரை பண் படுத்துகிறது.

மனசக்தியை வழங்குவது மனஉறுதிதான். எல்லா விதமான விளைவுகளையும் எப்படிப்பட்ட நெருக்கடி களையும் சந்திக்கின்ற உறுதியை உருவாக்குகிறது. 

நெருக்கடிகள் ஏற்படும்போது மனம் சோர்ந்து விடாமல் சமமாக எடை போட்டு அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

 துன்பம் ஏற்படுகிறபோது அதைப் பார்த்துப் புன்னகையை வீசுகிற கொடையையும், தனி நபருக்கு எதையும் தாங்கும் சக்தியையும் வழங்குவது மனஉறுதிதான். 

மனஉறுதி ஒருவர் உள்ளத்தைத் தன்னம்பிக்கையால் நிரப்புகிறது. வாழ்வில் சோதனைகளைச் சந்திக்கிற துணிச்சலைக் கொடுக்கிறது. 

தன்னம்பிக்கையினையும், மன முதிர்ச்சியையும், மனநிறைவையும் வளர்ப்பது மனஉறுதிப் பண்பு தான். இதனால் ஒருவர் துணிச்சல் மிக்கவராகி அமைதி பெறுகிறார்.

மனோதிடம் இருக்கும் மனிதனால் என்ன செய்ய முடியும்? 

எதையும் செய்ய முடியும்! ஒருவரின் லட்சியத்தை, கனவை நனவாக்க முதல் தேவை மனஉறுதி. இது இல்லை என்றால் எந்தச் சாதனையும் சாத்தியம் இல்லை. 

மன உறுதியோடு, முயற்சி, அர்ப்பணிப்போடு கூடிய உழைப்பு, ஒழுங்கு எல்லாம் சேர்ந்துகொள்ளும்போது கனவு நனவாகிறது; 

ஒருவர்தான் அடைய நினைக்கும் இலக்கை அடைந்து விடுகிறார். ஆக, எதுவும் சாத்தியம், சாத்தியமில்லை என்பது மனிதனின் மன உறுதியில்தான் அடங்கி இருக்கிறது. 

ஆம்.,நண்பர்களே..,

ஒரு செயலுக்காக உழைக்கிறோம் என்றால் தடைகள் தாண்டி வெற்றி பெற மனஉறுதி மிக அவசியம். 

மனஉறுதி இருந்தால்தான் இறுதிவரை போராடி வெற்றி பெறலாம்.

ஒவ்வொரு நாள் காலையிலும் மனஉறுதியுடன் தன்னம்பிக்கையுடன் எழுந்திருங்கள். 

No comments: