Monday, November 2, 2020

ஐந்து வில்லன்கள்...

வாழ்க்கையில் நம் முன்னேறத்தை  தடுக்கக் கூடிய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள். அவைகளை மிகத் திறமையாக எதிர்கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்.சரி!, யார் ஐந்து வில்லன்கள்...? அந்த ஐந்து வில்லன்கள்: ஊக்கமின்மை, மாற்றம், சிக்கல்கள், பயம் மற்றும் தோல்வி...

இப்போது, திரைப்படங்களில் வருவது போல் இந்த வில்லன்களை ஒவ்வொருவராக எப்படி எதிர்த்துக் கையாளுவோம் என்பதைக் காண்போம். மற்றும் அவர்களை வெல்லக் கூடிய ஆயுதங்கள் என்னென்ன என்று காண்போம்...

"ஊக்கமின்மை"

ஊக்கமின்மை, மற்றும் உங்கள் உயர்வுக்கு உதவாத நட்பை உதறித் தள்ளுங்கள். உங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் நட்பு வட்டாரத்தில் இணைந்து கொள்ளுங்கள்...

நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாக பார்க்காதீர்கள். ஆழ்ந்து ஆலோசித்து அதன் உண்மையான நோக்கத்தை உள்ளே பதிய வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான சிந்தனையுடையவர்களைத் தவிர்த்து விடுங்கள்...

"மாற்றம்"

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும், அதைப் புரிந்து கொள்ளுங்கள்...

மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை!, இதை மனதில் வையுங்கள். மாற்றத்திற்குத் தகுந்தாற் போல் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். முரண்டு பிடிக்காதீர்கள்...

"சிக்கல்கள்"

சிக்கல்கள் நிகழ்ந்தே தீரும். தயாராக இருங்கள்!, அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்று முன்கூட்டியே ஆலோசித்துக் கொள்ளுங்கள்,..

ஒன்றல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்து வையுங்கள். அத்தனை சிக்கல்களுக்கு உள்ளும் ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்திருக்கும். தேடிப் பிடித்து பயன்படுத்துங்கள்...

''அச்சம்"

அச்சம் இல்லாதது போல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து அச்சமாக உள்ளது என்று ஒப்புக் கொள்கிறவன் கோழையல்ல...

அச்சத்தை ஏற்றுக் கொள்கிறவர்களால் தான் அந்த அச்சத்தை வெல்ல முடியும். உங்கள் பயத்தின் தொடக்கப் புள்ளி எதுவென்று ஆலோசியுங்கள், அங்கே அடியுங்கள்...

"தோல்வி"

சறுக்கல்கள் வரும் போது, மாற்றி ஆலோசியுங்கள். தோல்வியும் வெற்றியாக்கலாம், சில செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும்...

மற்ற பல செயல்கள் நம் கையில் இல்லை. நம்மால் இயன்றதை மட்டும் செய்யுங்கள், சரி செய்யுங்கள்...

ஆம் நண்பர்களே...!

 மேற்கண்ட ஐந்து வில்லன்களான, '’ஊக்கமின்மை, மாற்றம், சிக்கல்கள், அச்சம் மற்றும் தோல்வி,  ’’இவற்றை திறமையாகக் கையாண்டால் வாழ்க்கைப் பயணம் இனிதே நடைபெறும். வாழ்க்கையில் வெற்றியடையலாம்...!

No comments: