Saturday, July 3, 2021

கவலை, கவலை, கவலை...

மனிதர்கள் அனைவரையும் ஆட்கொண்டுள்ள நோய் “கவலை". இங்கு இருக்கக் கூடிய மனிதர்களில் கவலை இல்லாத மனிதர்கள் யாரேனும் உண்டா? 

எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு வகையில் கவலைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். தாயின் கருவறையில் இருந்து கல்லறைக்குச் செல்லும் வரை மனிதனின் கவலைகள் ஓய்ந்தபாடில்லை. 

உதாரணமாக: 

கருவில் இருக்கும் குழந்தைக்கு நல்ல முறையில் பிறப்போமா அல்லது கருவிலே நம்மை அழித்து விடுவார்களா? என்ற கவலை. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலும் தாயின் அரவணைப்பும் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலை. 

பள்ளி செல்லும் குழந்தைக்கு ஆசிரியரின் அரவணைப்பும், பெற்றோர்களின் பாசமும் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலை.
 
இளைஞர்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும், ஆயிரக்கணக்கான கவலைகள். 

நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். இப்படிப் பல. நன்கு படித்துத் தேர்விலே நல்ல மதிப்பெண் பெற்றவருக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலை. 

தேர்விலே தோல்வி அடைந்தவருக்கு ஏன் இந்த உலகத்தில் இருக்க வேண்டும், தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகும் என்ற கவலை..

கல்லூரியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்றவருக்கு நல்ல வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலை. 

வேலை கிடைத்தவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலை.
 
நல்ல ஊதியம் கிடைத்தவர்களுக்கு தன்னுடைய பணத்தை எப்படி பத்திரமாகச் சேமித்து வைப்பது என்ற கவலை.

திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலை. 

வயது முதிர்ந்தவர்களுக்கு தன்னுடைய பிள்ளைகள் தங்களை இந்த முதிர்ந்த வயதில் கவனித்துக் கொள்வார்களா? மாட்டார்களா? என்ற கவலை.

இப்படியாகக் கருவறை முதல் கல்லறை வரை மனிதனின் கவலை நீண்டு கொண்டே செல்கிறது. ஆக ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் கவலைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். 

ஆனால் இந்த கவலைகள் எல்லாமே நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மீது செலுத்தும் ஆதிக்கத்தினாலும், நம்மை சுற்றி இருப்பவர்களை நம்மோடு தொடர்புபடுத்தி பார்ப்பதனாலுமே ஏற்படுகிறது என்பதே உண்மை...

*ஆம், நண்பர்களே..,*

*ஒவ்வொரு விநாடியும் வாழ்க்கை நம்மை விட்டு நழுவிக் கொண்டு இருக்கின்றது. ஒரு நொடிப் பொழுதினில் முப்பது கிலோமீட்டர் வேகத்தில் அது பறந்து கொண்டு இருக்கின்றது.* 

*எதுவும் நம் கையில் நிற்பதுமில்லை. இன்றைக்கு என்பது மட்டும் தான் நமது பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது.* 

*அதைப் பயன்படுத்திக் கொண்டு கவலை இல்லாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.*

*கவலைப்படும்படி ஏதேனும் நடந்து விட்டால் உடனே அந்தக் கவலையை எதிர்த்து நின்று வெற்றி கொள்ள நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.*

*நடந்து விட்டதை முதலில் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அப்பொழுது தான் நடக்க வேண்டியதை தீர்மானித்துக் கொள்ளலாம்...

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

No comments: