Monday, July 5, 2021

பாலகுமாரனின் சிந்தனைகள்...

*எதனால் மனிதருக்கு வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன என்று சொல்ல முடிவது இல்லை. வெற்றிக்கோ, முன்னேற்றத்திற்கோ சந்தர்ப்பங்கள் எவருக்கும் ஏற்படாமல் இராது.*

*அவை ஏற்படும் போது இது வெற்றிக்கான விஷயம் என்று தெரிவதே இல்லை. நல்ல வாய்ப்பு என்று ஒரு வேலையின் ஆரம்பம் காட்டுவதே இல்லை.*

*வாழ்க்கை என்பது பிறர் பேசுவதைக் கேட்டு, நடப்பதைப் பார்த்து தன் அனுபவத்தை ஒப்பிட்டு, தானாய் புரிந்து கொள்வது.*

*எல்லாம் தெரிந்து இங்கு பிறந்தவன் எவரும் இல்லை. அப்படிப் பிறப்பவனை கடவுள் என்று உலகம் கொண்டாடுகின்றது. அவன் யுகத்துக்கு யுகம் அவதரிப்பான் என்று உறுதி கூறுகிறது.*

*மற்றபடி, மனிதர்கள் அறிவுரை கேட்டு, அதை அனுபவத்தில் தோய்த்து மேற்கொண்டு நடப்பவர்கள்.*

*அறிவுரையை கேட்கமாட்டேன் என்று சொல்பவன் நிர்மூடன். சொல்லமாட்டேன் என்பவன் அகம்பாவி.*

*இங்கே நீ கற்றது அனைத்தும் பிறர் எச்சம். பிறர் வாழ்ந்து அனுபவித்ததின் மிச்சம்.*

*சொல்லிக் கொடுப்பதில் எந்த சிரமமும் இல்லை. ஆனால், சொல்லிக் கொடுத்ததை, சொல்லிக் கொடுத்த விதத்தில் புரிந்து கொள்ளத்தான் சிரமப் பட வேண்டி இருக்கிறது. சொல்லிக் கொடுப்பவன் மீது முழு கவனமாக கற்றுக் கொள்பவன் இருக்க வேண்டி இருக்கிறது.*

*அப்படி ஒரு கவனம் வர ஆர்வம் தேவையாய் இருக்கிறது. இந்த ஆர்வத்திற்கு அப்பால், சொல்லிக் கொடுப்பவனுக்கு விஷயம் தெரியும் என்ற நம்பிக்கை, கற்றுக் கொள்பவனுக்கு தேவைப்படுகிறது.*

*கற்றுக் கொள்ள ஒரு நல்ல சுழ்நிலை தேவையாய் இருக்கிறது. கற்றுக் கொள்ள நல்ல நேரம் தேவைப்படுகிறது .*

*உண்மையை உண்மையாகவே சொல்ல முடியாது. உண்மையை உவமையாகத்தான் சொல்ல முடியும். ஏனெனில் சத்தியத்தை விளக்குவது கடினமானது*

*ஞானம் மிக மிக முக்கியம். நல்ல குடும்ப வாழ்க்கைக்கு நிதானம்தான் ஆணிவேர்.*

*நிதானம் இல்லாத தன்மையால்தான் பல பேர் குடும்ப வாழ்க்கை சீரழிகின்றன.*

*ஒருவர் மீது ஒருவருக்கு காழ்ப்பு ஏற்படுகின்றது. காழ்ப்புதான் மிகப் பெரிய மன வேதனை. தெளிவுதான் மிகப் பெரிய சந்தோசம்*

*உதவி செய்தல்தான் உறவின் துவக்கம். அங்கே உண்மை இருப்பின் பலப்படும்*

*வெறுப்பில் பெண்ணுக்கு மனவலிவு மிகும். பொங்கும் காதலில் லேசாகும்.*

*வேதனை வந்தால் ஆணுக்குத் தொய்வு வரும். சோதனை எனில் தாங்கும் வெறி எழும். பிரிவில் பெண் பின்னமாவாள். ஆண் ஒன்றாவன். ஒருமுகப்படுவான்*

*திருமணம் என்கிற விஷயம் புனிதம் என்கிற வார்த்தையோடு எப்படி தொடர்பாயிற்று.*

*சடங்கு புனிதமா? சந்தித்தது புனிதமா? சம்மதம் புனிதமா?*

*யோசித்துப் பார்க்கையில் சந்தித்தது, சம்மதமாகி, சம்மதத்தை சடங்கு ஆக்கியதே திருமணம்.*

*சந்தித்ததும், சடங்கும் செயல்கள்.*

*சம்மதம் என்பது எண்ணம், ஓர் உணர்வு.*

*சம்மதம் எதற்கு, எதன் பொருட்டு. வாழ்வதற்கு.*

*திருமணச் சம்மதம் என்பது ஆணும், பெண்ணும் ஒரு கூரைக்குக் கீழ் உணர்வுகளைப் பரிமாறி வாழ்வது.*

*எந்த உணர்வுகளை?*

*காதல், காமம், தாபம், சோகம், மகிழ்வு, நல்லது, கெட்டது எல்லா உணர்வுகளையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி வாழ்வது*

*ஒரு வயதில் இருந்து நான்கு வயது வரை உள்ள மூன்று வருட காலம் மிக முக்கியமான காலம். ஒரு குழந்தையின் வளர்ச்சி அந்த வயதில்தான் தீர்மானிக்க படுகிறது.*

*அந்த வயதில் நேசத்தோடும், நெறியோடும் வளர்ந்த குழந்தைகள் வாழ்நாளில் மிக உயர்ந்த நிலைக்கு எளிதில் வருவார்கள். உலக விசயங்களில் தெளிவாகவும், திடமாகவும் இருப்பார்கள். அங்கே தகப்பனாலும், தாயாலும் பாதிக்கப் பட்ட குழந்தைகள், வறுமையால் வாடிய குழந்தைகள், அன்புக்கு ஏங்கிய குழந்தைகள் ஜெயிப்பது மிக கடினம்*

*என் முயற்சி ஒரு அளவிற்கே என்னை உயர்த்தும்.*

*கடவுள் என்கிற விஷயத்தின் கீழ் யார் சரணாகதி அடைகிறார்களோ, அவர்களது முயற்சி மட்டும் அல்லாமல், அவர்களது முயற்சி தொடர்ந்து வளர அந்த கடவுள் சக்தி காப்பாற்றும்*

*சிலருக்கு சில நேரம் மிக நல்ல வழிகாட்டி கிடைத்துவிடும். எந்த முயற்சியும் செய்யாமல், எந்த தேடலும் நடத்தாமல், தானாய் எதிரே உதவி செய்ய ஆள் கிடைத்துவிடும். அப்படி கிடைத்த உதவியை இழிவு ஆக்காமல் தக்க வைத்துக் கொள்ள சாமர்த்தியம் வேண்டும்.*

*உதவியா இது என்று சந்தேகம் கொள்ளாமல் உவப்பாய் உறவாட வேண்டும்*

*உலகின் மிகச் சிறந்த மொழி மனம்தான். அந்த மொழி பேசுபவர்களுக்குத்தான் அந்த மொழியின் இலக்கணங்கள் தெரிந்தவர்களுக்குத்தான் அந்த மொழியின் வளமை மிக்கவர்களுக்குத்தான் கடவுளோடு பேச முடியும். கடவுளோடு பேச மௌனம் ஒரு மொழி, அது ஒரு வழி - தோழன்.*

*எல்லாப் பிரிவும் அபத்தமானது. அற்பத் தனம் ஆனது.*

*இங்கு உள்ள மனிதர்களின் கோபமும், குரோதமும் வேர் இல்லாதவை. வெறுமே மேல் புத்தியில் தளும்பி நிற்பவை.*

*அண்ட பேரண்டத்தின் பிரமாண்டத்தை உணரும் பொழுது, இங்கு உள்ள மனிதர்கள் புழுக்களாக, புழுக்களின் புழுக்களாகத் தெரிகிறார்கள்.*

*அவர்களுக்கு கர்வம் இருப்பதும், காதல் இருப்பதும், காமம் இருப்பதும் சிரிப்பாய் இருக்கின்றன.*

*அந்த நிலை தெரிய வந்தால் எந்தப் பிரிவும் நிலை அற்றது என்று தெரியும். கற்பிதமானது என்று புரியும். அப்படிப் புரிய மறுபடி மறுபடி பிறக்க வேண்டும் - கர்ணனின் கதை.*

*காதல் என்பது ஆண், பெண் சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை.*

*ஒருவர் இடம் இருந்து, சகலரிடமும் பரவ வேண்டிய உன்னத உணர்வு.*

*அதில் ஆணுக்குப் பெண் ஓர் ஆரம்பம்.*

*ஈர்ப்பதில் ஈடுபட்டு மலர, ஈர்க்காத இடத்திலும் மலரின் வாசம் பரவும். சகலமும் நேசிக்கத் தகுந்தவையே என்பது புரியும்*

*மனதில் அமைதி இல்லாத ஆணுக்குள் அன்பு இருக்காது. அகந்தை மட்டுமே இருக்கும்.*

*அன்பு செய்யப்படாத, செய்யாத பெண்ணுக்கு உள்ளும் அவஸ்தைகள் வந்து விடும்.*

*தனிமை அவளைப் பித்தாக்கும். பயம் தரும். அது அடிப்படை விதி. இயற்கை விதி*

*நமது துக்கத்தை பிறரிடம் சொல்வதில் அர்த்தம் இல்லை. பாதி பேருக்கு அதில் சந்தோஷம். மீதி பேருக்கு அக்கறை இல்லை.*

*சூழ்நிலைக்கு ஓடுவது தோல்வி. சூழ்நிலையில் தன்னை இழப்பது மரணம். சூழ்நிலை தாக்கும் போதே யோசிப்பது யுத்தம்.*

*யார் கோபப்பட்டாலும் அதை தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது சந்தோசம்தான்.*

*கோபம் மிருகத்தனம் ஆனது.*

*ஒரு மனிதனில் இருந்து கோபம் வெளிப்படுகிற போது, அவனிடம் இருந்து பீறிடும் மிருகத் தனமான பார்வையும், சொல்லும், செயலும் வியப்புக்கு உரியன. மனிதர்களின் கோபத்தை விலகி பார்க்க வியப்பு தரும் - திருப்பூந்துருத்தி.*

*நல்ல நண்பன் மனைவியைப் போல. யாரிடம் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கிறதோ, அவர்கள் நெருக்கம் ஆனவர்கள்.*

*உலகில் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்க வேண்டிய முதல் இடம் மனைவி, அடுத்த இடம் நண்பன்.*

*நண்பனும் மனைவியும் மெல்லிய கோட்டில்தான் பிரிவுபடுகிறார்கள் - கண்ணன் குசேலரிடம் - குசேலர்.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*   

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*   

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

No comments: