Friday, October 13, 2017

இரண்டு தத்துவங்கள்

கடவுளுக்கு உருவம் உண்டா?
ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த ஒரு பக்தர், கடவுளுக்கு உருவம் உண்டா? என்று கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணர், இறைவன் உருவம் உடையவர், உருவம் அற்றவர்-இந்த இரண்டும் அவரே! அதாவது பனிக்கட்டியையும், தண்ணீரையும் போல என்று பதில் கூறினார்.
இறைவன் என்பவன் முடிவில்லாமல் பரந்து கிடக்கும் மகா சமுத்திரத்தைப் போன்றவன். சமுத்திரம் அதீத குளிர்ச்சியின் காரணமாக சில இடங்களில் உறைந்திருக்கும். அவ்விதம் உறைந்த பனிக் கட்டிகள் பலவித வடிவங்களில் இருக்கும். ஆனால் சிறிது வெப்பம் அதிகரித்ததும் பனி உருகி நீரோடு நீராகக் கலந்து விடும்.
பனிக்கட்டியும் நீரும் ஒரே சமுத்திரத்தைச் சேர்ந்தவைதான். இறைவனும் அப்படித்தான். பக்தியின் குளிர்ச்சியால் அவன் பக்தர்களுக்கு தகுந்தாற்போல பலவேறு வடிவங்களில் தோன்றுகிறான்.
ஞானம் என்ற வெம்மை செயல்பட ஆரம்பித்ததும், அவனும் வடிவமற்றவானாகி விடுகிறான். இவ்வாறாக, சாதாரண பக்தனுக்கு வடிவம் தேவைப்படுகிறது. ஆனால் அனைத்தும் அறிந்த ஞானிக்கு வடிவம் தேவைப்படுவதில்லை.
ஞானத்தில் சிறந்த ஞானம் எது?
ஒரு ஞானியைப் பார்த்து ஒருவர், "ஞானத்தில் சிறந்த ஞானம் எது?" என்று கேட்டார்.
"இன்பத்தில் மகிழ்ச்சி அடையாமலும், துன்பத்தில் சோர்வடையாமலும் இருப்பதுதான் ஞானம்" என்றார் ஞானி.
"விளக்கமாக கூறுங்கள்" என்று கேட்டார் வந்தவர்.
அதற்கு ஞானி அருகில் மேய்ந்து கொண்டிருந்த வண்ணான் ஒருவனின் கழுதையை காட்டி
"இதை காலையிலும் மாலையிலும் பார்த்தால் உமக்கு புரியும்" என்றார்.
ஞானி கூறிய படியே அவர் காலையும், மாலையும் கழுதையை கவனித்தார்.
அவருக்கு ஒன்றும் புரியாமல் போகவே ஞானியிடம் கேட்டார்.
ஞானி விளக்கினார்,
"இந்தக்கழுதைக்கு, "காலையில் தன் முதுகில் அழுக்கு மூட்டையை சுமந்து செல்கிறோமே என்ற வருத்தம் இல்லை, மாலையில் சுத்தம் செய்த துணிகளை சுமந்து செல்கிறோமே என்ற மகிழ்ச்சியும் இல்லை. இதை பார்த்து தான் நான் அத்தகைய ஞானம் பெற்றேன்" என்றார்
துன்பத்திலும், இன்பத்திலும் துவளாமல் இருப்பதே சிறந்த ஞானம் என்பதை உணர்ந்தார் அந்த நபர்.

No comments: