Tuesday, December 5, 2017

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து

லஞ்சத்தால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை விளக்கும் ஒய்வு பெற்ற துணைப்பதிவாளர்!
ஒய்வு பெற்ற துணைப்பதிவாளர் முகநூலில் எழுதியது.
என் பெயர் சாமுவேல். ஒரு காலத்தில் சென்னை மற்றும் வேலூரில் என் பெயர் தெரியாத அரசு அதிகாரிகளே கிடையாது.
இன்று நான் முகவரி கூட இல்லாமல் வாழ்கிறேன். தற்போது கோயம்பத்தூரில் ஓரு கிராமத்தில் ஓரு ஓட்டு வீட்டில் நானும் என் மனைவியும் அனாதைகளாக வாழ்ந்து வருகிறோம்.
நான் என் வாழ்வில் உணர்ந்த விசயத்தை உங்களிடம் பரிமாற்றம் செய்கிறேன்.
நான் அரசு பணியில் பல துறையில் பணியாற்றி உள்ளேன். சம்பளத்தை விட கிம்பளம் (லஞ்சம்) நிறையவே பெற்று சந்தோஷமாக இருந்தேன்.
ஆண்டவர் நம்மை நல்லா வச்சிருக்கார் என்று சந்தோஷமாக வாராவாரம் சர்ச்சுக்கு சென்று கொண்டு வந்தேன்.
எனக்கு ஓரே மகன். நல்லா எம்.பி.ஏ. வரை படிக்க வச்சேன். ஒரு கிரவுன்ட் இடம் வாங்கி கார் பார்கிங், வீடு, கார், தோட்டம் என நாங்கள் சந்தோஷமாக இருந்தோம்.
நானும் ஓய்வு பெற்றேன். என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சென்னையில் ரூ.40,00,000-தில் பிளாட் வாங்கி குடியேறினேன்.
மருமகளும் கர்ப்பமாக இருந்தாள். 7ம் மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு போன் வந்து என்னை தூக்கி போட்டது. போனில், அவர் சொன்ன விசயம்...
"உங்கள் மகன் பைக் விபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ளார் வந்து பாருங்க..." என்று.
விழுந்தடித்து சென்று பார்த்தேன். என் மகன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டான். என் மருமகளுக்கு ஆண் பிள்ளை பிறந்தது. ஆனால் என் மகனுக்கு இரண்டு மாதத்தில் உயிர் பிரிந்து விட்டது .
என் மருமகள் அவர்கள் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டாள். பின்னர் அவளுக்கு ஜீவனாம்சம் மற்றும் பேரன் வாழ்க்கை செலவு என வழக்கு தொடர்ந்து எங்கள் சொத்துக்களை எல்லாம் வாங்கி கொண்டாள்.
இப்போது எனக்கு கிடைக்கும் பென்சனை வச்சுத்தான் காலம் போகுது. சாப்பாடு செலவுகள், வீட்டுக்கு வாடகை போக முட்டி வலி மற்றும் வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட சர்க்கரை போன்ற நோய்கள் பற்றிக்கொண்டதால் மருந்து செலவு வேறு...
அப்போது தான் யோசித்தேன், 'ஏன் நம் வாழ்க்கை இப்படி ஆனது என்று...'
என் மனம் சொன்னது, 'நீ வாங்கிய லஞ்சம் தான் உன் வாழ்வை சீர்ழித்தது...' என்று.
'சரி... லஞ்சம் வாங்காமல், என்னுடன் சம காலத்தில் பணிபுரிந்த என் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன்.'
அவர் என் நிலை கண்டு மனம் சங்கடப்பட்டார்.
'சரிப்பா நீ எப்படி இருக்க..?' என கேட்டேன்.
அவர் சொன்னார், "நிம்மதியாக இருக்கேன்... உண்ண உணவு, உடுக்க உடை, பேரன் பேத்தி, ஓய்வு பணத்தில் சிறியதாக ஒரு வீடு, பையன், பொண்ணு தனியார் கம்பெனி வேலை...
நானும் என் மனைவியும் நிம்மதியாக இருக்கோம்.." என்று சொன்னார்.
என்னை யாரோ செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன்.
நானும் சர்ச்சுக்கு போய் பிரசங்கம் கேட்டேன், ஜெபம் பண்ணினேன், காணிக்கை எல்லாம் கரேக்டா கொடுத்திட்டு வந்தேன் ஆனா, எனக்கு மட்டும் ஏன் இப்படி..?
அப்போது தான், "ஒரு சிலருடைய பாவம் அவர்களைப் பின் தொடரும்" என்று எப்போதோ படித்த வேத வசனம் என் சிந்தையில் வந்து விழுந்தது.
"நீ எதை விதைக்கிறாயோ, அதையே அறுப்பாய்,..." என்பதை உணர்ந்தேன். நல்லா இருக்கும் போது உண்மையை உணரவில்லையே. உயிரற்ற பொருள் வாங்கி குவித்தேன். என் உயிர் உள்ளே உள்ள பொருளை (மகிமையை) இழந்தேன்.
இன்று...
வாழ்க்கையை இழந்து நிற்கிறேன்.
- ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரியின் ஒப்புதல் புலம்பல் இது. லஞ்சம் வாங்கும் அனைவருக்கும் நல்ல பாடம்...
எனவே அனைவரும் லஞ்சத்தை தவிர்த்து நெஞ்சத்தை நிமிர்த்தி சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியாக வாழுங்கள்.
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
வாழ்க வளமுடன்

No comments: