Tuesday, December 5, 2017

சிரிப்பே வராதவர்கள் முயற்சிக்கவும்

ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார். ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது.
நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை. இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.
பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.
அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி. வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.
கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..? என்ற குழப்பம் உண்டாகியது..
எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று... விஏஓவிற்கு ஒரு  கடிதம் எழுதினான்.
மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி  என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான்.
கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்தன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்..
நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு.. பேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து அனுப்பினார்.தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது. தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு..
மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி  கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.
கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது. கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே.. கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான்.
கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா  இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்.. நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.
அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ம அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..
ஆத்து  தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்.. அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறேன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார்.
கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார்.
அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்.. என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..
ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று.. மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து.. மாநில அமைச்சரிடம் இருந்து மாவட்ட கலெக்டருக்கு வந்து.. மாவட்ட கலெக்டரிடமிருந்து தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து விஏஓக்கு வந்து.. விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு  கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது...
இந்த கதை சிரிக்க மட்டுமல்ல....  சிந்திக்கவும்..........

No comments: