Saturday, March 17, 2018

இந்திய ரயில்வே பற்றி  சுவாரஸ்ய உண்மைகள்!

165 ஆண்டு பயணிகள் சேவை... இந்திய ரயில்வே பற்றி  சுவாரஸ்ய உண்மைகள்!
இந்தியாவில் பயணிகள் ரயில் ஓடத் துவங்கி 17/4/2018 அன்றுடன் 165 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
நாட்டின் போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதில் ரயில்வே துறை மிக முக்கிய பங்காற்றி வருகிறது. பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து என இரண்டிலும் இந்தியாவின் இன்றியமையாத போக்குவரத்து சாதனமாக விளங்கும் ரயில்வே துறை பற்றி பல சுவாரஸ்யத் தகவல்களை காணலாம்.
01. முதல் ரயில்
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முயற்சியில் 1853ம் ஆண்டு முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. மும்பை- தானே இடையே 1853ம் ஆண்டு ஏப்ரல் 16ந் தேதி பிற்பகல் 3.35 மணிக்கு 34 கிமீ தூரத்துக்கு முதல் ரயில் இயக்கப்பட்டது. மும்பை- தானே இடையிலான தூரத்தை 57 நிமிடங்களில் கடந்தது.  
02. சிறப்பு விருந்தினர்
இந்தியாவின் முதல் பயணிகள் ரயிலில் சிறப்பு அழைப்பின் பேரில் வந்த 400 பேர் பயணித்தனர். அந்த ரயில் 14 பெட்டிகளை கொண்டிருந்தது. அன்றைக்கு மும்பை நகரில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.  
03. காரணகர்த்தா
இந்தியாவின் இன்று மிக முக்கிய போக்குவரத்து சாதனமான ரயில் போக்குவரத்துக்கு வித்திட்டவர் இந்தியாவின் இளம் ஆங்கிலேய கவர்னர் ஜெனரலாக பொறுப்பு வகித்த டல்ஹவுசிதான். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய ரயில்வே திட்டத்தை வெற்றி பெறச் செய்தவர் இவர்தான். இந்தியர்கள் நலனுக்காக அல்ல. அவர்களது வியாபார நலனை கருத்தில்க்கொண்டே இந்திய ரயில்வே திட்டம் அனுமதி பெற்றது.
4. மெட்ராஸுக்கு சான்ஸ்...
இந்தியாவில் மெட்ராஸில்தான் முதல் ரயில் விட திட்டமிடப்பட்டது. மேலும், சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து செங்குன்றம் வரைதான் அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் சரக்கு ரயில் இந்த பாதையில்தான் சோதனை நடத்தப்பட்டது.  
05. தமிழகத்தில் முதல் ரயில் நிலையம்
துறைமுக நகரங்களை குறிவைத்தே ரயில் திட்டத்தை ஆங்கிலேயர்கள் நிறைவேற்றினர். கொல்கத்தா, மும்பை, மெட்ராஸ் ஆகியவற்றை குறிவைத்து திட்டங்களை செயல்படுத்தினர். அதன்படி, மெட்ராஸ் துறைமுகத்தை இணைக்கும் விதத்தில் ரயில்பாதை திட்டத்தை கையிலெடுத்தனர். 1845ம் ஆண்டு திட்டம் துவங்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டு, ஒருவழியாக தமிழகத்தின் முதலாவதாக ராயபுரத்தில் அமைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவில் ஆற்காடு நவாப் ஒரு சுவாரஸ்யத்தை நிகழ்த்தினார்.  
06. தங்க மண்வெட்டி
ராயபுரம் ரயில்நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில், ஆற்காடு நவாப் தங்க மண்வெட்டியை பயன்படுத்தி அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து, பணிகள் நிறைவுற்று 1856ம் ஆண்டு ஜூன் 28ந் தேதி ராயபுரம் ரயில் நிலையத்தை மெட்ராஸ் ஆளுநராக இருந்த ஹாரிஸ் பிரபு திறந்து வைத்தார்.  
07. தமிழகத்தில் முதல் ரயில்
தமிழகத்தில், கடந்த 1856ம் ஆண்டு ஜூலை 1ந் தேதி முதல் ரயில் ராயபுரத்திலிருந்து ஆற்காடு வரை நீராவி எஞ்சினுடன் இயக்கப்பட்டது. முதல் ரயிலில் 300 சிறப்பு விருந்தினர்கள் பயணித்தனர். முதல் ரயிலுக்கு  பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.  
08. வளர்ச்சிப் பாதை
சில நூறு கிலோமீட்டர்களுடன் துவங்கப்பட்ட ரயில் பாதை கட்டமைப்பை ஆங்கிலேயர்கள் விரிவுப்படுத்தினர். 1880ம் ஆண்டில் இந்தியாவில் 14,500 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட்டிருந்தது. இன்று உலகிலேயே அதிக நீளம் கொண்ட ரயில் பாதை வலையமைப்பை இந்திய ரயில்வே கொண்டிருக்கிறது.  
09. எஞ்சின் தயாரிப்பு
1895ம் ஆண்டு முதல் இந்தியாவிலேயே சொந்தமாக ரயில் எஞ்சின் தயாரிப்பு துவங்கியது. மேலும், உகாண்டா நாட்டிற்கான ரயில்பாதை அமைப்பதற்கான பணிகளுக்கு இந்தியாவிலிருந்து பொறியாளர்கள் மற்றும் எஞ்சின் அனுப்பிவைக்கப்பட்டது.  
10. ரயில்வே மண்டலங்கள்
இந்திய ரயில்வே அமைப்பு சுதந்திரத்திற்கு பின்னர் பல்வேறு சீரமைப்புகளை கண்டது. அதன்படி, இந்திய ரயில்வே நிர்வாக வசதிக்காக 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. அதில், முதலாவதாக தோற்றுவிக்கப்பட்ட மண்டலம் தென்னக ரயில்வே என்பது குறிப்பிடத்தக்கது. 
          
11. யுனெஸ்கோ கவுரவம்
நீலகிரி மலை ரயில், கல்கா- சிம்லா இடையிலான மலை ரயில், டார்ஜிலிங் மலை ரயில் மற்றும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் ஆகியவற்றிற்கு யுனெஸ்கோ அமைப்பு உலக புராதனச்சின்னங்கள் என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது. மும்பை சி.எஸ்.டி.,ரயில் நிலையத்திற்கு அந்த அந்தஸ்து கிடைக்க காரணம் என்ன தெரியுமா?  
12. சி.எஸ்.டி ரயில் முனையம்
1878ல் மும்பையின் முதல் ரயில் நிலையம் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன. இந்திய- இத்தாலிய கட்டக்கலை அமைப்பில் 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இந்த ரயில் நிலையத்தை அமைத்தனர். உலகின் அழகிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ரயில் நிலையத்தை ஆங்கிலேய கட்டடக்கலை வல்லுனர் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்பவரின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. இதற்காக, அவர் பல்வேறு மும்பையின் முதல் ரயில் நிலையம் முதலில் விக்டோரியா முனையம் என்று பெயரிடப்பட்டது. கடந்த 1996ம் ஆண்டு சத்ரபதி சிவாஜி முனையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  
13. பழமையான நீராவி எஞ்சின்
உலகின் பழமையான நீராவி எஞ்சின் நம் நாட்டில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஃபேரி குயின் என்ற பெயரிடப்பட்ட அந்த எஞ்ிசன் தற்போது புதுடெல்லியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் அல்வார் இடையே இயக்கப்படுகிறது. இன்றைக்கும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நீராவி எஞ்சின் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறது.  
14. முதல் மின்சார ரயில்
இந்தியாவின் முதல் மின்சார ரயில் மும்பை - குர்லா இடையில் 16 கிமீ தூரத்துக்கு மின்மயமாக்கப்பட்ட பாதையில் இயக்கப்பட்டது. முதல் மின்சார ரயிலை காண மும்பை ரயில் நிலையத்தில் பெரும் கூட்டணம் திரண்டது.  
15. முதல் டீசல் எஞ்சின்
இந்தியாவின் முதல் ரயில் டீசல் எஞ்சின் 1957ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 1964 முதல் வாரணாசியில் உள்ள டீசல் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் ஆலையில் ரயில் டீசல் எஞ்சின் தயாரிப்பு துவங்கியது.  
16. குறைந்த வேக ரயில்
இந்தியாவின் மிக குறைவான வேகத்தில் செல்லும் ரயில் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையில் இயக்கப்படும் நீலகிரி பயணிகள் ரயில். மணிக்கு சராசரியாக 10 கிமீ வேகத்தில் செல்கிறது.  
17. இந்தியாவின் அதிவேக ரயில்
டெல்லி- ஆக்ரா இடையிலான பாதையில் செல்லும் போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்தான் இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.  
18. இந்தியாவின் நீண்ட தூர ரயில்
இந்தியாவின் நீண்ட தூர ரயில் திப்ரூகர்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ். 4,273 கிமீ தூரத்தை இந்த ரயில் ஒவ்வொரு பயணத்திலும் கடக்கிறது.  
19. பயணிகள்
நாள் ஒன்றுக்கு 2.5 கோடி பயணிகள் ரயிலில் பிரயாணம் செய்கின்றனர். ஆண்டுதோறும் 500 கோடி பேர் பயணிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தினசரி 14,300 ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 650 மில்லியன் டன் சரக்குகளை ரயில்வே துறை கையாள்கிறது.  
20. பணியாளர்கள்
உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்ட 9வது பெரிய நிறுவனம் இந்திய ரயில்வேயாகும். இந்திய ரயில்வே துறையில் 15.5 லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.   
21. கழிவறைகள்
1909ம் ஆண்டு பயணி ஒருவர் பயணத்தின்போது இயற்கை உபாதை கழிக்க முடியாமல் அவதிப்பட்டதை குறிப்பிட்டு எழுதிய கடிதத்தின் விளைவாக 1909ம் ஆண்டு ரயில்களில் கழிவறை அமைக்கப்பட்டது.  
22. இந்தியாவின் "லேட் கம்மர்"!!
அஸ்ஸாம் மாநிலம், குவஹாட்டிக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கும் இடையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதத்திற்கு பெயர்போனது. ஒவ்வொரு பயணத்தின்போது 10 முதல் 12 மணி நேரம் தாமதமாக செல்கிறதாம்.  
23. நீளமான குகை
இந்திய ரயில்பாதைக்காக அமைக்கப்பட்ட மிக நீளமான குகை வழி ஜம்மு- காஷ்மீரில் இருக்கிறது. இந்த ரயில் வழித்தட குகை பாதை 11.215 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.  
24. இடைநில்லா ரயில்
திருவனந்தபுரம்- நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் இடைநில்லாமல் 528 கிமீ தூரத்துக்கு இயக்கப்படுகிறது. அதாவது, ஒரு ரயில் நிலையத்திற்கும், அடுத்த ரயில் நிலையத்திற்கும் இடையில் நிறுத்தப்படாமல் 528 கிமீ தூரம் இயக்கப்படுகிறது.  
25. ரொம்ப பிஸி...
இந்தியாவின் மிக பரபரப்பான ரயில் நிலையம் லக்ணோ. நாள் ஒன்றுக்கு 64 ரயில்கள் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.  
26. எல்லாமே ஹிட்டுதான்..
இந்திய ரயில்வே இணையதளம் நிமிடத்திற்கு 12 லட்சம் பார்வைகளை பெறுகிறதாம்.  
27. லோகோ பைலட்
லோகோ பைலட் என்றழைக்கப்படும் ரயில் எஞ்சின் டிரைவர்கள் மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் ஊதியமாக பெறுகின்றனர்.  
28. உலகின் உயரமான ரயில் பாலம்
உலகின் மிக உயரமான ரயில் பாலம் காஷ்மீரில் உள்ள சீனாப் நதியின் குறுக்கே அமைக்கப்படுகிறது. இந்த ரயில் பாலம் குதூப் மினாரைவிட 5 மடங்கு உயரமும், ஈபிள் டவரை விட உயரமானதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
29. மூன்றுவித டிராக்குகள்
சிலிகுரி ரயில் நிலையத்தில் மீட்டர்கேஜ், பிராட்கேஜ், நேரோகேஜ் என மூன்றுவிதமான ரயில்பாதைகளும் இருக்கின்றன.  
30. முதல் ஏசி ரயில்
1936ல் முதல்முறையாக குளு குளு வசதி செய்யப்பட்ட ஏசி ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.  
31. கணிணி மயம்
1986ம் ஆண்டு டெல்லி ரயில் நிலையத்தில் முதல்முறையாக கணிப்பொறி மூலம் முன்பதிவு வழங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.  
32. ரயில்பாதை நீளம்
65,000 கிமீ தூரத்துக்கு ரயில் பாதையை இந்திய ரயில்வே கொண்டுள்ளது. பூமத்திய ரேகையை வைத்து இந்திய ரயில் பாதையை கணக்கீடு செய்தால், பூமியை ஒன்றரை சுற்று வருமாம் இந்திய ரயில்பாதை.  
33. ரயில் நிலையங்கள்
இந்தியாவில் 7,500 ரயில் நிலையங்கள் உள்ளன.  
34. கடல் ரயில் பாலம்
இந்தியாவின் முதல் கடல் ரயில் பாலம் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் ரயில் பாலம்தான்.  
35. புல்லட் ரயில்
காலமாற்றம், தேவைகளுக்கு ஏற்ப ரயில்வே துறை மாற்றங்களை கண்டு வந்திருக்கிறது. நீராவி எஞ்சினில் மிக குறைவான வேகத்துடன் துவங்கிய இந்திய ரயில்வே இன்று புல்லட் ரயில் விடும் கனவுடன் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.

No comments: