Saturday, March 17, 2018

பக்குவம் : கவியரசர் கண்ணதாசன்

*பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!!!!*
*கவியரசு கண்ணதாசன்.*
*கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.*
*கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது,* *ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும்* *வேதனை*
*இருப்பது அவனுக்குப் புரிகிறது.*
*இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து  வருகிறது.*
*ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.*
*இளம் பருவத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.*
*வாழ்வில் அடி பட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.*
*பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.*
*பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறு பரிசீலனைக்கு வரும்.*
*நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.*
*இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.*
*நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.*
*கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.*
*காதலித்துத் தோற்றபின் தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.*
*விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.*
*எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு `அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும்.*
*எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.*
*பக்குவமற்ற நிலை என்பது இரண்டு `எக்ஸ்ட்ரீம்’ நிலை.*
*ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.*
*பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.*
*மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.*
*`இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி; முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!’.*
*இதுதான் அந்தப் பழமொழி.*
*பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.*
*ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.*
*இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை.*
*பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.*
*ஏன், உடம்பு கூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.*
*நாற்பதிற்கு மேலேதானே `இது வாய்வு’, `இது பித்தம்’, என்கிற புத்தி வருகிறது.*
*`டென்ஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.*
*`முறுக்கான நிலை’ என்று அதைக் கூறலாம்.*
*அந்த நிலையில் `எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்’ என்கிற `திமிர்’ வருகிறது.*
*அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, `இதைத்தான் செய்யலாம்’, `இப்படித்தான் செய்யலாம்’ என்ற புத்தி வருகிறது.*
*இனி விஷயத்திற்கு வருகிறேன்.*
*`ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்’ என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.*
*உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.*
*தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது.*
*அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமே கூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.*
*இன்றைய பக்குவம் இருபதாண்டுகளுக்கு முன் எனக்கு இருந்திருந்தால், எனது அரசியலில் கூட முரண்பாடு தோன்றியிருக்காது.*
*வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.*
*ஆரம்பத்தில் `இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.*
*சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.*
*முதற் கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து.*
*இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.*
*மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும்,* *நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு நம்பிக்கை கொண்ட ஞானநிலை.*
*இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு.*
*சுவாமி விவேகானந்தரைப் போல, வளைந்து கொண்டே வளர்ந்த மரங்கள் உண்டு.*
*அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.*
*மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே பக்குவ நிலையை அடைய வேண்டியிருக்கிறது!.*
*எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’ என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.*
*ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும்* *நம்முடைய நாட்டிலே உண்டு.*
*தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும் மனிதர்கள் நம்முடைய நாட்டிலே மிக அதிகம்.*
*ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும்.*
*விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.*
*தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும் கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.*
*`மனப்பக்குவம்’ என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை.*
*அந்த நிலையில் எதையுமே `இல்லை’ என்று மறுக்கின்ற எண்ணம் வராது.*
*`இருக்கக் கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.*
*எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான தோழர் நெடுஞ்செழியன் அவர்கள்,* *ஒரு கட்டுரையில்*
*“நாஸ்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே இருக்கிறான்”* *என்றும், “ஆஸ்திகன் தான் தடுமாறுகிறான்”* *என்றும், “கடவுள் இல்லை என்பதை நாஸ்திகன் உறுதியாகச் சொல்லுகிறான்”* *என்றும்,* *"உண்டு என்பதற்கு ஆஸ்திகன் ஒழுங்காக விளக்கம்* *தர முடியவில்லை” என்றும் எழுதியிருக்கிறார்.*
*நல்லது.*
*`இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை.*
*எதைக் கேட்டாலும் `இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.*
*ஆனால் `உண்டு’ என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.*
*“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும்.*
*ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.*
*பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.*
*நாஸ்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்.*
*காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் `இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.*
*நன்றாகத் தலையாட்டத் தெரிந்த அழகர் கோயில் மாட்டை* *விடவா அவன் உயர்ந்து விட்டான்.*
*ஆனால், ஆஸ்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு காரணம் சொல்லியாக வேண்டும்.*
*சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.*
*ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட் கீற்றுகளை விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.*
*ஆஸ்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான்.*
*ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.*
*அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.*
*வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.*
*ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ் ஞானமும் அறியாமல்,* *அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாஸ்திகனுக்கு,* *எல்லாம் இயற்கையாக நடக்கின்றன’* *என்று சொல்லத் தெரிகிறதே தவிர,* *அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.*
*பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.*
*“கோயிலுக்குப் போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?”.*
*“அப்படிக் கோயிலிலே என்ன இருக்கிறது?” என்று நாஸ்திகன் கேட்கிறான்.*
*அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில்,* *`அந்தத் தேங்காய்க்குள் என்ன இருக்கிறது?’ என்பது* *அவனுக்குத் தெரியுமா?.*
*அதில் வழுக்கையும் இருக்கலாம், முற்றிய காயும் இருக்கலாம்.*
*ஆகவே, உடைத்த பின்பே காயைக் கண்டு கொள்ளும் மனிதன், உணர்ந்த பின்பு தெய்வத்தைக் காண முடியும் என்பது உறுதி.*
*`கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் `எனக்கு மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே!*
*`மரணம்’ என்று உணரப்படும் போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது.*
*எனக்குத் தெரிந்த மிகப் பெரிய நாஸ்திகர் கூட தமது அந்திம காலத்தில் யார் கொடுத்த விபூதிகளையும் பூசிக் கொண்டார்கள்.*
*மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம் என்று நிச்சயமாகத் தெரியும் வரை ஈசுவரன் ஒருவன் இருப்பது உறுதி.*
*நன்கு பக்குவப்பட்டவர்கள், தம் வாழ்நாளிலேயே காணமுடிகிறது.*
*இப்போதெல்லாம், `போலித்தனம் எது? பொய் எது?’ என்பதைக் கண்டு கொள்ளக் கூடிய தெளிவு எனக்கு வந்து விட்டது.*
*காரணம், வயது மட்டுமல்ல, பக்குவம்.*
*செருப்புப் போடாத காலத்தில், மலத்தை மிதித்திருக்கிறேன். அதனால், இப்போது செருப்புப் போடுகிறேன்.*
*கடலை மாவில் செய்த பலகாரத்தைச் சிறுவயதில் விரும்பிச் சாப்பிட்டேன். இப்போது அது தவறு என்பதை உணருகிறேன்.*
*என் முன்னால் ஒரு வாதியையும், பிரதி வாதியையும் கொண்டு வந்து நிறுத்தி,* *'யார் நிரபராதி’ என்று சொல்லச் சொன்னால் அவர்களது வாக்கு மூலங்கள் இல்லாமலேயே,* *நான் அவர்களைக்* *கண்டு பிடிப்பேன்.*
*என்னுடைய தீர்க்க தரிசனத்துக்கு முதல் அடிப்படை அறிவல்ல; அனுபவம்.*
*தலைப்பை மீண்டும் நினைவுபடுத்தினால், அதன் பெயரே `பக்குவம்’.*
*பக்குவமாய் வாழுங்கள்;* *வாழ்வதன் பயனை உணருங்கள்;* *வாழ்வின் பலனை அனுபவியுங்கள்.*

No comments: