Sunday, September 9, 2018

லைஃப்ஸ்டைல் டிசீஸ் எச்சரிக்கை...



``இந்தியர்களே... சம்பாத்தியத்தை எல்லாம் மருத்துவத்துக்கே செலவழிக்காதீர்கள்!" லைஃப்ஸ்டைல் எச்சரிக்கை #LifestyleDisease

இந்தியர்களின் வாழ்க்கைமுறையும் உணவுமுறையும் மாறிவருவதால் அவர்கள் நடைப்பிணங்களாக மாறிவருகிறார்கள். பணத்துக்காகவும் வசதிக்காகவும் தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றியவர்கள், சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் மருத்துவத்துக்கே செலவழிக்கப் போகிறார்கள்’’ என எச்சரித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO). இதற்குப் பெயர்தான் லைஃப்ஸ்டைல் டிசீஸ்.

எந்தப் பிரச்னையுமே நமக்கு நடக்கும் வரை அல்லது அது தீவிரமாக வெடிக்கும் வரை அதை நாம் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு விஷயத்திலும் தவறு நடந்த பிறகுதான் அதற்கான தீர்வைப் பற்றி யோசிக்கவே ஆரம்பிக்கிறோம்! இப்போது நம் கண்முன் ஒரு பிரச்னை முற்றி நிற்கிறது. நம் உயிர்களைக் குடிக்கப்போகும் பிரச்னை அது...

உலகச் சுகாதார நிறுவனமும், உலகப் பொருளாதார மன்றமும் இணைந்து 2015-ம் ஆண்டில் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை அறிக்கைவிடுத்தது. அது, இந்திய மக்களின் உடல்நிலை மோசமடைவதால் ஏற்படும் வருமான இழப்பை முன்னிறுத்திய அறிக்கை. அதில், `இந்தியர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்களால் நாள்பட்ட நோய்களான இதய நோய், சர்க்கரைநோய், புற்றுநோய், சுவாசத்தொற்று, ஆண்மைக்குறைவு போன்ற நீண்டகால மற்றும் மெதுவாக வளரும் வியாதிகள் அதிகரிக்கும். இதனால், மக்களின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்படும். உதாரணத்துக்கு, 2005-ம் ஆண்டில் இந்த நோய்களால் இந்தியர்களின் வருமான இழப்பு ரூ.57 ஆயிரம் கோடி. இதுவே 2015-ம் ஆண்டில் இந்த நோய்களால் இந்தியர்களின் வருமான இழப்பு 3.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது! உடல்நலனைக் குறித்த அறிக்கைகளில்கூட, அதனால் ஏற்படும் வருமான இழப்பு என்பதே முதன்மையாகக் காட்டப்பட்டது. இப்படிச் சொன்னாலாவது திருந்துவார்களா என்பதற்காகத்தான் செய்தார்களோ என்னவோ... இன்னும் நாம் திருந்தியபாடில்லை.

மேலும், அந்த ஆய்வறிக்கையில், இந்த வாழ்க்கைமுறையும்  உணவுப்பழக்கங்களும் மாற்றப்படவில்லையென்றால், மரணங்கள் அதிகமாக நிகழும் என்றும், அதுவும் கிருமிகளால் பரவக்கூடிய தொற்றுநோய்களைவிட(communicable disease), ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையால் உடலில் ஏற்படும் தொற்றில்லாத நோய்களால்தான் அதிக மரணங்கள் நிகழும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது!

`பணம்’, `பொருளாதாரம்' எனும் சொற்களுக்குள் சிக்கிக்கொண்டு சீரழிந்துகொண்டிருக்கின்றன நம் மகிழ்ச்சியும் உடல்நலமும். சரி, சீரழிந்தாலும் பரவாயில்லை, பணமும் பொருளாதாரமும் கிடைக்குமா என்றால், அதுவும் இல்லை என்பதுதான் உண்மை. `இந்த கார்ப்பரேட் உலகம் பணம் என்பதைக் கொடுப்பதுபோல கொடுத்து, பிடிங்கிக்கொள்ளும்! அது ஒரு மாய மானை நிற்கவைத்து, நம்மை ஓடச்செய்கிறது’ - இதை யாரோ சொல்லவில்லை. ஆய்வறிக்கைகள் சொல்கின்றன.

எப்படி என்கிறீர்களா? ஒரு நிறுவனத்தில் உங்கள் வாழ்க்கைமுறையையும், உணவுப் பழக்கங்களையும் மாற்றிக்கொண்டு வேலைக்குச் செல்கிறீர்கள். அதனால் ஏற்படும் மனஅழுத்தம், உடல் தொல்லைகளுக்காக மருத்துவத்தை நாடுவீர்கள். அப்போது நீங்கள் சம்பாதித்ததில் முக்கால்வாசிப் பணம் மருத்துவத்துக்கே செலவிடப்படும். உங்களிடம் எஞ்சி இருப்பது ஏமாற்றம் மட்டுமே..!

`சரி, நமக்குத்தான் இன்னும் எந்த நோயும் வரவில்லையே... வந்தால் பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைக்கிறீர்களா? முன்னரே சொன்னது போல அவை யாவும் `நீண்டகால மற்றும் மெதுவாக வளரும் நோய்கள்.’ அவை வந்ததே உங்களுக்குத் தெரியாது. இதைவிடக் கொடுமையான, ஆனால், வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இது போன்ற நோய்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் `லைஃப்ஸ்டைல் டிசீசஸ்.’ அதாவது, வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள்! அந்த நோய்களுக்கான காரணங்களாக அவர்கள் ஆய்வில் தெரிவித்த பட்டியலைப் பார்த்தால், தவறான வாழ்க்கைமுறை என்றால் என்னவென்று உங்களுக்குப் புரியும்.

Arteriosclerosis, Swimmer's ear, Chronic obstructive pulmonary disease, Nephritis, depression, Chronic backache, diabetes and hypertension,Type II diabetes, Obesity... இன்னும் பல அழகான ஆங்கிலப் பெயர்கள்...

தமிழில் சொல்வதென்றால்...

* காற்று மாசுபாடு மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளின் காற்றை மட்டும் சுவாசிப்பதால் ஏற்படும் நுரையீரல் மற்றும் சுவாசப் பிரச்னைகள்.

* கம்ப்யூட்டர், செல்போன் போன்ற மின்னணுச் சாதனங்களைத் தொடர்ந்து பார்ப்பதால் கண்களின் நரம்புகளில் ஏற்படும் கோளாறுகள்.

* செல்போன்களின் கதிர்வீச்சு மற்றும் ஹெட்ஃப்போன், இயர்போன் ஆகியவற்றின் பயன்பாட்டால் காதுகளில் ஏற்படும் குடைச்சல், வலி மற்றும் அடிக்கடி ரிங் அடிப்பது போன்ற உணர்வு.

* சூரிய ஒளியே உடலில் படாததாக மாறிய பணிச்சூழலால் ஏற்படும் தோல் வியாதிகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்திக் குறைபாடுகள்.

* உடலுழைப்பே இல்லாமல் அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் 'குரோனிக் பேக்ஏச்' (Chronic backache).

* குளிரூட்டப்பட்ட அறைகளிலேயே அதிக நேரம் இருப்பதால் உடலுக்குள் ஏற்படும் பருவநிலை மாற்றம்.

* தவறான உணவுப் பழக்கங்களால் ஏற்படும் செரிமானம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்னைகள், தொப்பை.

* இரவு நேரப் பணியால் ஏற்படும் தூக்கமின்மை மற்றும் உடல்நிலை மாற்றங்கள்.

* பணிச்சுமை மற்றும் ஒரேவிதமான சூழலால் ஏற்படும் மனஅழுத்தம் மற்றும் மனம் தொடர்பான கோளாறுகள்.

* ஆண்மைக்குறைபாடு... இன்னும் இன்னும்... 

ஜப்பானின் தோஹா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் மசயுக்கி (Masayuki) நடத்திய ஓர் ஆய்வில், `கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் போன்ற மின்னணுச் சாதனங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதுதான் இருப்பதிலேயே மிக ஆபத்தான சீர்கேடு. உட்கார்ந்துகொண்டே அவற்றைப் பயன்படுத்துவதால், நம் உணர்வுகளை இழந்து, கண்கள் பாதிக்கப்பட்டு அவற்றின் கதிர் வீச்சால் செல்களின் நிலை திரிந்து, கழுத்து மற்றும் முதுகுத் தசைகள் வலிமையிழக்கும்’ என்றும் தெரியவந்திருக்கிறது. இதை நிரூபிப்பதற்காக, செல்போன் கதிர்வீச்சை விலங்குகளிடம் பரிசோதித்ததில், அவற்றுக்கு இனவிருத்தி செய்யும் திறன் குறைவது, எதிர்வினை நேரம் அதிகரிப்பது, கவனமின்மை, நினைவின்மை, தூக்கமின்மை போன்றவை ஏற்படுவதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உங்கள் குழந்தைகள்தான் பலியாடுகளா?

இந்த டிஜிட்டல் மின்னணு உலகத்தின் அதீத வளர்ச்சி என்பது கடந்த 15 வருடங்களில் நடந்ததுதான். 22 வயதைக் கடந்தவர்கள்தான் இப்போது டிஜிட்டல் வலையில் சிக்கிக்கொண்டவர்கள். இவர்களின் குழந்தைப் பருவத்தில் ஒரு பகுதியாவது விளையாட்டோடும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையோடும் இருந்திருக்கும். அதுதான் அவர்களை இப்போது காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், 15 வயதுக்குட்பட்ட மற்றும் இனி பிறக்கப்போகும் குழந்தைகள் முழுக்க முழுக்க வாழ்வதற்குத் தகுதியற்ற வாழ்க்கைமுறையிலும், மின்னணுச் சாதனங்களின் அரவணைப்பிலும்தான் வளரப்போகிறார்கள்! எந்த விளையாட்டும், உரையாடல்களும், உணர்வுகளும் இல்லாமல் இயந்திரங்களுடன் வளரப்போகும் அவர்கள், உணர்வுகளற்ற நடைப்பிணங்களாகத்தான் மாறிப்போவார்கள்.

சந்தோஷத்தையும், வாழ்வையும், உணர்வுகளையும் விரும்புவோர் என்னென்ன செய்ய வேண்டும்?

உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கியம்!

பசிக்கும்போது மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். அதாவது காலியாக இருக்கும்போது மட்டுமே வயிற்றுக்கு உணவு கொடுக்க வேண்டும். பசியில்லாதபோது, ஏற்கெனவே வயிற்றில் உணவிருக்கும்போது மேலும் உணவைத் திணித்தால், அது செரிமானம் ஆகாமல் கழிவாகத்தான் உடலில் சேரும். அது பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தும்!

இதிலேயே நம்மில் பாதிப் பேர் அவுட்! நமக்குப் பசியென்றால் என்னவென்றே தெரியாமல், நேரத்துக்கு உணவு என்ற பெயரில், பசி இருந்தாலும் இல்லையென்றாலும் வயிற்றை நிரப்பிக்கொண்டே இருக்கிறோம்! 
அடுத்து ஒரு நிலத்தில் வாழும் மக்களுக்கு அந்த நிலத்தில் விளையும் உணவுகள்தான் ஏற்றவை. நிலத்தின் பருவநிலைக்கு ஏற்றவாறுதான் உணவு விளையும், நிலத்தின் பருவநிலைக்கு ஏற்பதான் உடல் வளரும். அப்படிப்பட்ட உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களையும் பானங்களும் வேண்டாமே!

உடலுழைப்பும் உடலும்!

மேலேயிருந்து வருவோம். பசிக்க வேண்டுமென்றால், ஏற்கெனவே சாப்பிட்ட உணவு செரிக்க வேண்டும்! அதற்கு உடல் உழைப்பு வேண்டும். ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு நேரம் நம் உடலுக்கு வேலை கொடுக்கிறோம்? மாடிப்படி ஏறுவதையே மிகப்பெரிய உடலுழைப்பாக கருத்திக்கொண்டல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்..! உடலுழைப்பு என்பது அடைத்துவைக்கப்பட்டு, குளிரூட்டப்பட்ட ஜிம்முக்குச் சென்று வியர்க்க விறுவிறுக்க, யாருக்கும் பயனில்லாமல் வெறும் இரும்புக் குண்டுகளை தூக்குவதல்ல. திறந்தவெளியில் நல்ல காற்றைச் சுவாசித்து, ஏதோ ஒருவிதத்தில் பயனுள்ள வகையில் உழைப்பது.

மாற்றப்பட்ட உடல் சுழற்சி!

உடலுக்கென்று ஒரு தனிக் கடிகாரமிருக்கிறது. (Biological clock). அது பெரிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை... `இரவில் தூங்குங்கள், பகலில் வேலை செய்யுங்கள்’ என்கிறது. இந்த நவீன உலகில் இரவு எது, பகல் எது என்றே தெரியாமல் போய்விடுகிறது! இரவு நேரத்தில் பணி செய்பவர்கள் அதிக உடல் பாதிப்புக்கு உள்ளாவார்கள். சம்பளம் குறைவென்றாலும், பகல் வேலைக்கு மாறுங்கள். இரவு கண்விழித்துச் சம்பாதிக்கும் பணத்தை மருத்துவத்துக்குச் செலவழித்து மனமுடைந்து போகாமல், இருப்பதை வைத்து சிறப்பாக வாழுங்கள்!

குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்!

குழந்தைகளிடமிருந்து செல்போன்களையும் மின்னணுச் சாதனங்களையும் தயவு காட்டாமல் பிடுங்கிவிட்டு, வெளியில் விளையாடக் கற்றுக்கொடுங்கள்! ஏனென்றால், நம் கண்கள், செவிகள், நரம்புகளைவிட குழந்தைகளுடையவை மிகவும் மெல்லியவை. இந்த மின்னணுச் சாதனங்கள் அவர்களை நேரடியாகப் பாதிக்கும். உங்கள் சம்பாத்தியத்தைவிட, உங்கள் வேலைகளைவிட, ஏன் உங்கள் பாசத்தைவிட அவர்களின் உயிர் முக்கியமானது. உங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள். அவர்களுடன் நேரத்தைச் செலவழியுங்கள். நீங்கள் சிறு வயதில் விளையாடியதையெல்லாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.

No comments: