Monday, January 21, 2019

பூலித்தேவர் மற்றும் காலாடியார் பற்றிய தகவல்...

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டும் வீரச்சாவடைந்தும் நடுகல் மரபாய்த்
தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும் வெண்ணிக் காலாடிக்கு வீரவணக்கம்.

அந்த வீரனை ஆங்கிலேயர் தூக்கிலிட்டனர். ஆனால் அவன் சாகவில்லை. மீண்டும் ஒருமுறை தூக்கிலிட்டார்கள். நீண்ட நேரம் தூக்குக் கயிற்றிலேயே தொங்கவிட்டார்கள். அப்போதும் அவன் சாகவில்லை. அதைக் கண்டு பரங்கியர் வியந்தனர். பயந்தனர். கோபம் கொண்டனர். மூன்றாம் முறையும் தூக்கிலிட்டனர். இம்முறை அவன் கால்களில் கனமான் வெடிகுண்டுகளைக் கட்டித் தொங்கவிட்டனர். நீண்ட நேரம் கழித்து வீரனின் உடல் தளர்ந்தது. உடல் அடங்கியது.

இவ்வளவிற்கும் அந்த வீரன் பரங்கியருக்கு விசுவாசியாக இருந்தவன்தான். ஆனால் வெள்ளையரின் நாடு பிடிக்கும் ஆசையை எதிர்த்தான். விளைவு? நன்றி மறந்தவர்களின் வஞ்சகத்திற்குப் பலியானான். அம்மாவீரன் பெயர் #கான்சாகிப்.

போர் என்று வந்துவிட்டால் கான்சாகிப்பை வெல்லவே முடியாது என்று இருந்த காலம். சொந்த மண்ணில் மண்ணின் மைந்தர்கள் பலரைத் தோற்கடித்து வெள்ளையருக்குக் கப்பம் கட்ட வைத்தான். கான்சாகிப் படையெடுத்து வருகிறான் என்றால் சிற்றரசர்கள் பலர் ஓடி ஒளிந்த நேரம்.

அந்த இறுமாப்பில், கும்பினிப் படைக்குத் தலைமை தாங்கி, வெள்ளையருக்குக் கப்பம் கட்ட மறுத்த மாவீரன் #பூலித்தேவன்மேல் படையெடுத்து வந்தான். இரவோடு இரவாக பூலித்தேவனின் நெற்கட்டான்செவல் கோட்டையை முற்றுகையிட்டான். ஆயிரக்கணக்கான படைவீரர்கள், பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கி ஏந்திய வீரர்கள் என்று பெரும் படையை #நெற்கட்டான் செவலுக்கு அருகிலுள்ள காட்டில் பதுங்கியிருக்க வைத்தான்.
ஒற்றர்கள் மூலம் இச்செய்தி வந்தது முதலில் பெரிய காலாடிக்குத்தான். வீறுகொண்டு எழுந்தான் #வெண்ணிக்காலாடி என்ற பெரியகாலாடி. பூலித்தேவனின் #வீரத்தளபதி அவன்.

கடந்த இரண்டு மாதமாக கும்பினியர் படை பூலித்தேவனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போர் தொடுப்பதும் பூலித்தேவனால் விரட்டியடிக்கப்படுவதுமாக போர் ஒரு முடிவுக்கு வராமல் இருந்தது.
நெற்கட்டும் செவலைச் சுற்றியுள்ள பாளையக்காரர்களை தந்திரமாக பேசி, விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தான் கான்சாகிப். அப்படித்தான் நடுவக்குறிச்சிப் பாளையக்காரரை விலை கொடுத்து அடிமையாக்கிவிட்டான். பின்னர் அவர்கள் மூலமாக பூலித்தேவனுக்கு தொந்தரவு தரத் தொடங்கினான். ஆனாலும் மாவீரன் பூலித்தேவன் அசைக்கமுடியவில்லை. வெள்ளையருக்குக் கப்பம் கட்டவும் மறுத்து வந்தான்.

கடைசியாக கான்சாகிப் செய்த தந்திரம், பூலித்தேவன் படையில் உள்ள வீரர்களையே விலை பேசியதுதான். வெள்ளையர்களின் வெகுமதிக்கும் பரிசுப் பொருள்களுக்கும் வீரர்கள் அடிமையாகிவிடுவார்கள் என்றுதான் முதலில் கான்சாகிப் நினைத்தான். ஆனால், அதற்கு நேர்மாறாக இருந்தது பூலித்தேவனின் படைவீரர்களின் செயல்.
பூலித்தேவனின் இராணுவத்தில் இருந்த வீரர்கள் நாட்டுக்காக தங்கள் செங்குருதியைச் சிந்தத் தயாராக இருந்தனர். விடுதலை வேங்கைகளை விலை கொடுத்து வாங்கமுடியாமல் கோபமுற்றார்கள் வெள்ளையர்கள்.
தலைமைப் பொறுப்பில் இருந்த #பெரிய காலாடிக்கு, கும்பினியரின் ஆள் பிடிக்கும் செயல் கோபத்தை ஊட்டியது. இதை முளையிலேயே கிள்ளியெறிய நினைத்தான். சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான்.

கடந்த இரண்டு மாதமாக போர் தொடுத்தும் பூலித்தேவனை வெல்ல முடியாமல் போன கான்சாகிப், இம்முறை இரவோடு இரவாக காடுகளில் பதுங்கியிருந்து, திடீர் தாக்குதல் நடத்த உத்தேசித்திருப்பதை அறிந்து மன்னரிடம் விடைபெற்றுக் கொண்டு புயலாய்க் கிளம்பினான் பெரிய காலாடி.
மறைந்திருந்த எதிரிகள் மேல் கெரில்லாத் தாக்குதல் நடத்தினான். பெரிய காலாடியின் இந்தத் திடீர் தாக்குதலை எதிரிகள் எதிர்பார்க்கவில்லை. அவனது வேகத்தையும் வீரத்தையும் கண்டு #கும்பினியர் படை அஞ்சியது.
வெடிமருந்துக் கிடங்கை அழித்தான். பீரங்கிகளை செயலிழக்கச் செய்தான். துப்பாக்கி வீரர்கள், பெரிய காலாடியின் படை வீரர்களை எதிர்க்கமுடியாமல் பின்வாங்கினார்கள். கான்சாகிப்பின் படைவீரர்களால் தாக்கிப் பிடிக்க முடியவில்லை. பெரிய காலாடி இருக்கும்வரை பூலித்தேவன் படையை எதிர்த்து நிற்கக்கூட முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். அதனால் மீண்டும் ஒரு #சூழ்ச்சி அரங்கேறியது.
கும்பினிப் படையைச் சேர்ந்த சில வீரர்கள் #மறைந்திருந்து, #பெரியகாலாடியை வெட்டினார்கள். அதில் ஒருவன் வெட்டியது பெரியகாலாடியின் வயிற்றில், வெட்டுப்பட்ட வயிற்றில் இருந்து குடல் வெளியே வந்தது. செத்தான் பெரியகாலாடி என்றே எதிர்கள் நினைத்தனர்.
ஆனால், கொஞ்சம்கூட தாமதிக்காமல், தான் கட்டியிருந்த #தலைப்பாகையை கழற்றி, வெறியில் வந்த குடல்களை வயிற்றுக்குள் தள்ளி, வயிற்றைச் சுற்றி கட்டினான். வெட்டிய வலி, கொட்டும் ரத்தம் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை #பெரியகாலாடி.

புதிதாய்ப் புறப்பட்ட வீரன்போல், மீண்டும் வாளைச் சுழற்றினான். எதிரிகளின் தலைகளை சீவி எறிந்தான். இம்முறை அவனது மூர்க்கத்தனத்தைக் கண்டு கான்சாகிப்பின் கும்பினிப் படை வீரர்கள் புறமுதுகிட்டு ழுடினர். #வெற்றிவாகை சூடினான் பெரிய காலாடி.
#எவராலும்_வெல்லமுடியாது என்று இறுமாப்புக் கொண்டிருந்த #கான்சாகிப்பை முதன்முதலாக தோற்றோட வைத்தான் பெரிய காலாடி. கும்பினியர் முகாமை முற்றிலும் அழித்து நாசம் செய்தான். அந்த வெற்றிச் செய்தியை மன்னர் பூலித்தேவனிடம் கூறி, குதிரையேறி விரைந்து வந்தான்.
வெற்றிச் செய்தியை மாவீரன் பூலித்தேவனிடம் வந்து கூறிக்கொண்டிருந்தான் அவன் வயிற்றில் இருந்து செங்குருதி வழிந்து வந்ததை கண்டு துணுக்குற்றான் மன்னன். அவனை அப்படியே #வாரி அணைத்துக்கொண்டான். தன் கடைசி சொட்டுக் குருதியையும் வடித்து, அந்த மண்ணை செந்நிறமாக்கி வீரமரணம் அடைந்தான் பெரிய காலாடி.
அவனது வீரத்தைப் பாராட்டி, அவனுக்கு வீரக்கல் நட்டு பெருமைப்படுத்தினான் மன்னன் பூலித்தேவன்.

அவன் போரிட்டு வென்ற இடத்தை "#காலாடி மேடு' என்று பெயரிட்டு, சரித்திரத்தில் இடம்பெறச் செய்தான்.
தாய் நாட்டிற்காக தன் உயிரை துச்சமாக நினைத்து, இந்த பூமிக்காக குருதி சிந்தி, இந்த பூமியையே செம்மண்ணாக்கி வீரமரணம் எய்திய பெரிய காலாடியை,

கடமை வீரனப்பா காலாடி வீரனப்பா
சூராதி சூரனப்பா..சூழ்ச்சியில் வல்லவனப்பா
தாயகம் காத்தே தரணி புகழடைந்தானப்பா
தார்வேந்தன் பூலி பட்டயம் பெற்றானப்பா."
பார்துலங்க பூலிமன்னன் பேர்துலங்க -வெண்ணி
பாய்ந்தோடிச் சண்டைகள் போட்டானே
பரங்கியர் தலைகளை வெட்டியே காலாடி
பாங்காய் குவித்திட்டான் மலைபோலே…
எத்தனை பட்டாளம் வெட்டினானடா- வெண்ணியை
எதிர்க்கவும் ஒரு ஆள்கூட இல்லையடா
செங்குருதி நனைத்து பூலித்தேவன் வண்ணச்
சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க…
காலாடி உயிருக்கோர் காலன் வந்திட்டான்
கால் நொடியில் காற்றாய் பறந்தானே…
பழிகள் பாவங்கள் வந்ததென்றெனக்கூறி
பார்வேந்தன் பூலித்தேவன் கதறியழ …

எனப் பாடிச் செல்கிறது பூலித்தேவன் சிந்து.

நன்றி:
தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம்

நண்பர்களே; தோழர்களாக கைகோர்த்து நம் மண்காக்க போராடிய #பூலித்தேவர் #காலாடியார் வாரிசுகள் மோதிக் கொள்வதால்தான் நாடு நாசமாக  போய்க்கொண்டிருக்கிறது. நாம் இக்காலத்தில் முதன்மையாக பரப்பவேண்டியதும், நினைவுகூற வேண்டியதும் இந்தமாதிரி தகவல்களைத்தான்...

Subash Natarajan

No comments: