Tuesday, February 5, 2019

வேளாண்மை அறிவோம்...

வெறும் நிலமாக இருந்தால், முதலில் மண்ணை வளப்படுத்த வேண்டும். அதற்கு சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களை விதைத்து, அவை சிறிது துளிர்விடும்போது மண்வெட்டியால் கொத்தி மண்ணோடு கலந்து மடித்துவிடவும். பின், நீங்கள் வளர்க்க விரும்பும் மர, செடி விதைகளை விதைத்து வளர்க்கலாம்.
வேளாண்மைக்கு தேவையான மிக முக்கியமான இடுபொருட்கள்...

1. அமிரத கரைசல்
2. பஞ்சகாவ்யா

இவ்விரண்டையும் தயாரித்து வைத்து, 10 நாட்களுக்கு ஒருமுறை இரண்டையும் மாற்றி மாற்றி, 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி என்ற விகிதத்தில் சேர்த்து நீர் பாய்ச்சும் மடைகளில் கலந்து விடலாம்.
பஞ்சகாவ்யாவை பயிர்களின் மேல் துளிர்த்தல், பூத்தல், காய்த்தல் போன்ற பருவங்களில் நேரடியாகவும் தெளிக்கலாம்.
மரம், செடிகளின் மூட்டுகளில் சோற்றுக் கற்றாழைகளை வளர்த்தால், ஈரப்பதம் காக்கப்படும். மேலும், காய்ந்த இலைகளை வைத்து மூட்டுகளை மூடிவைப்பதால் சூரிய வெப்பம் நேரடியாக பட்டு காய்ந்து போகாமல் இருக்க உதவும். இதற்கு மூடாக்கு என்று பெயர். இப்படி செய்வதால் நீர் தேவை குறைக்கப்படலாம்.

*அமிர்த கரைசல்*

*தேவையான பொருட்கள் :*
1) நீர் - 10 லிட்டர்
2) நாட்டு மாட்டு கோமியம் - 1 லிட்டர்
3) நாட்டு மாட்டு சாணம் -  1 கிலோ
4) நாட்டு சர்க்கரை - 25 கிராம்

*செய்முறை :*
மேலே குறிப்புட்டுள்ள பொருட்களை ஒரு பக்கெட்டில் இட்டு, சுத்தமான குச்சியைக் கொண்டு, 50 முறை வலப்புறமும் 50 முறை இடப்புறமும், காலை, மதியம், மாலை என மூன்று முறை கலக்கி, பின் பக்கெட்டை மூடி ஒரு பகல் ஒரு இரவு விடவும். மறுநாள் அமிர்த கரைசல் தயாராகிவிடும்.

ஒவ்வொரு முறையும் கலக்கிவிட்டு, குச்சியை கழுவி உலர வைக்கவும். மறு முறை கலக்குவதற்கு முன், குச்சியை துடைத்துவிட்டு பயன்படுத்தவும். இல்லையென்றால், கரைசல் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.

*உபயோகிக்கும் முறை :*
1 லிட்டர் நீரில் 100 மில்லி அமிர்த கரைசல் கலந்து உபயோகப்படுத்தவும். தேவைக்கேற்ப அளவை கூட்டிக் கொள்ளலாம்.

*பஞ்சகாவ்யா*

*தேவையான பொருட்கள்*

1) நாட்டு மாட்டு சாணம் :  500 கிராம்
2) நாட்டு மாட்டு கோமியம் : 300 மில்லி
3) பால் : 200 மில்லி
4) தயிர் : 200 மில்லி
5) நெய் : 50 கிராம்
6) பழுத்த வாழைப்பழம் : 1
7) இளநீர் : 300 மில்லி
8) கரும்புச்சாறு : 300 மில்லி
9) கள்ளு அல்லது புளித்த இளநீர் : 300 மில்லி
10) நீர் : 500 மில்லி
11) 20 முதல் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பக்கெட்.
உலோக பாத்திரங்கள் உபயோகிக்க கூடாது.

*செய்முறை :*

*முதல் நாள் :* பக்கெட்டில் சாணத்துடன் நெய்யை கலந்து, கையால் பிசைந்து, 3 நாட்கள் வைத்து, ஒவ்வொரு நாளும் பிசைந்து விடவேண்டும்.

*நான்காம் நாள் :*
மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, கையால் நன்கு கரைத்து, ஈரத் துணி அல்லது சாக்கால் மூடி நிழலில் வைக்க வேண்டும். சுத்தமான குச்சியைக் கொண்டு 50 முறை வலப்புரமும் 50 முறை இடப்புறமுமாக, ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் கலக்கி வர, 21 நாட்களில் பஞ்சகாவ்யா தயாராகிவிடும்.

*உபயோகிக்கும் முறை :*
10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகாவ்யா சேர்த்து, வடிகட்டி தெளிக்கலாம்.
விதைக்குமுன், விதைகளை சில மணி நேரம் பஞ்சகாவயத்தில் ஊறவைத்து விதைத்தால், நல்ல பலன் கிடைக்கும். பஞ்சகாவ்யா வளர்ச்சியை தூண்டுவதோடு, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். காலை அல்லது மாலையில் தெளிப்பது நல்லது.

No comments: