(இன்றைய கலந்தாய்வில் TNPSC அலுவலகத்தினை கலக்கிய சீத்தாம்மா)
தட்டச்சருக்கான இன்றைய கலந்தாய்வில் கலந்து கொண்ட புளியங்குடியைச் சேர்ந்த எனது குழந்தை முத்துலட்சுமி தனது சொந்த மாவட்டமான திருநெல்வேலி நீதிமன்றத்தில் தட்டச்சர் பணி கிடைக்கப் பெற்றாள்.
"அண்ணா, எனக்கு பஸ்க்கு நேரம் ஆச்சு, நீங்கள் இருக்கும் இடத்திற்கு என்னால் வர இயலாது. இனிமே நான் சென்னை எப்போது வர போறேன்னு தெரியல. நானும், அண்ணாவும் இருக்கோம், உங்களை பார்க்கணும் அண்ணா" என்று சொன்னவுடன், நான் அடுத்த பத்து நிமிடத்தில் தங்கை+தம்பியை சந்தித்து அவர்களின் மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டேன்.
அப்பொழுது அவள் கூறியதாவது, "அண்ணா, இன்னைக்கு 51-வயசு அம்மா ஒருத்தங்க ஜாப் வாங்கினாங்க. பார்க்க ரொம்ப சந்தோசமா இருந்துச்சு, நம்ம அம்மா வயசுன்னா அவங்களுக்கு" என்று சொல்ல எனக்கும் பெரு மகிழ்ச்சி.
"அந்த அம்மா இருக்காங்களான்னு" நான் கேட்க, தெரியல அண்ணா , வாங்க எதுக்கும் தேடிப் பார்ப்போம் என்று தேடினோம்.
அந்த அம்மா, தனது கணவருடன் கிளம்புவதற்கு தயார் ஆக்கிக் கொண்டு இருந்தார். நான் அவர்களிடம் சென்று கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தேன். அப்புறம் நான் மேலும் பேசிய போது, அவர் கூறியதாவது:
** எனது பெயர் சீதா. சொந்த ஊர் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள பேரையூர்.
** எனக்கு திருமண வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
** நானும் எனது கணவரும் எங்கள் சொந்த ஊரிலேயே டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் வைத்து நடத்தி வருகிறோம்.
**எங்களிடம், தட்டச்சு பயின்ற பலர் இன்று அரசுப் பணியில் தாசில்தார் அளவிற்கு உயர் பதவிகளில் உள்ளனர்.
** அவர்கள் எல்லாம், என்னிடம் வெற்றி பெற்ற செய்திகளைக் கூறி சுவீட் தருவார்கள். அதனை எல்லாம் பார்த்து பார்த்து எனக்கும் அரசு அலுவலராக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
** நான் அரசு அலுவலராக வேண்டும் என்று முடிவு செய்து அதற் பின்னர் தான் தட்டச்சு பயின்றேன். அப்பொழுது எனக்கு வயது 40. வருடம் 2008.
** என்னுடைய 41 வயதில் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் தட்டச்சு முதுநிலை முடித்தேன்.
** பின்னர் TNPSC-க்கு என்று படிக்கத் தொடங்கிய பொழுது வருடம் 2011. எனக்கும் 43 வயது ஆகி இருந்தது.
** அப்பொழுது TNPSC கேள்வித்தாளின் தரம் தற்போது போன்று சற்று கடினமாக இல்லை. 2012-ம் ஆண்டில் இருந்து தற்போது உள்ள பேட்டர்ன் மாற்றினார்கள்.
** நான் அந்த பழைய முறையில் எளிதாக தேர்ச்சி அடைந்து விடலாம் என்று நினைத்து படிக்கத் தொடங்கினேன். தோல்விதான் கிடைத்தது, வெற்றி கிடைக்க வில்லை.
** பின்னர் 2012-ம் ஆண்டு கொஸ்டின் பேட்டர்ன் அடுத்த லெவெலுக்கு மாறியது. அப்பொழுது என்னைச் சந்தித்தவர்கள் எல்லாம், கொஸ்டின் பேட்டர்ன் ரொம்ப கஷ்டமா ஆகிடுச்சு. நீங்கள் பழைய இதுலயே பாஸ் பண்ணி இருக்கணும். இனிமே பாஸ் பண்றது ரொம்ப கஷ்டம் என்று கூறினார்கள்.
** நான் எனது கனவினை விட்டு விடவில்லை, முன் வைத்த காலை பின் வைக்கவும் விரும்பவில்லை. எப்படியும், நானும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் மனம் தளராமல் யார் கூறியதற்கும் செவி மடுக்காமல் தொடர்ந்து படித்தேன்.
** பள்ளி செல்லும் மூன்று குழந்தைகள், குடும்பம், இன்ஸ்டிடியூட் என அனைத்தையும் கவனித்துக் கொண்டு கிடைக்கும் நேரத்தில் ஆர்வமாகப் படித்தேன்.
** ஒவ்வொரு முறை தேர்வு எழுதி விட்டு வரும் பொழுதும், அதில் தெரியாத விஷயங்கள் என்ன, நாம் இன்னும் படிக்க வேண்டியது என்ன என்பதனை அலசி எட்டு வருடங்களாக முயற்சியை கைவிடாமல் படித்து வந்தேன்.
** எனது முயற்சிக்கு எனது கணவர் மிகப் பெரும் ஆதரவாக இருந்தார்.
** நான் 140-கொஸ்டின் சரியாக போட்டால் கட் ஆஃப் 160-ஆக வரும். நான் 160-எடுத்தால் கட் ஆஃப் 180-ஆக வரும். இப்படி சென்ற இந்த எட்டு வருட போராட்டத்திற்கு இன்று தான் விடை கிடைத்தது.
** இதற்க்கு காரணமாக அமைந்த என் கணவருக்கும், குடும்பத்திற்கும் மிக்க நன்றி என்று கூறி முடித்தார்.
** நான் அவரிடம், "அம்மா, உங்களை பாராட்ட எனக்கு வயதும் இல்லை, வார்த்தையும் இல்லை" என்று கூறிக் கொண்டு உங்களுடன் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டவுடன் கணவன் மனைவி இருவரும் சம்மதித்து போட்டோ எடுத்தோம்.
** மேலும், அவர் என்னிடம் "ஐயா, எல்லாரும் இந்த TNPSC சுவத்துக்கிட்ட நின்னு போட்டோ எடுத்தாங்க, நான் எடுக்கணும்ன்னு நினைக்கிறேன். ஆனா எப்போவும் ஒரே கூட்டமாக இருக்கிறது என்று கூற, நான் அங்கு கூடி இருந்தவர்களை வேண்டி சற்று விலகி நிற்க சொல்லி சீதாம்மா ஆசை பட்டவாறு போட்டோ எடுத்துக் கொடுத்தேன்.
** மேலும், சீதாம்மாவிடம், உங்களின் புகைப்படம் மற்றும் நீங்கள் என்னிடம் கூறியவற்றை நான் முகநூலில் பதிவிடலாமா? உங்கள் அனுமதி வேண்டும் என்றேன். "போடுயா, நீ போடுறதப் பார்த்து இன்றைய இளம் தலைமுறைகள்ல ஒண்ணு ரெண்டு பேர் படிச்சு வேலைக்கு போனாலும் சந்தோசம்தான்" என்று தம்பதிகள் இருவரும் கூறினார்கள். இந்த நல்ல மனது தான் சீத்தம்மாவிற்கு இந்த வயதிலும் வெற்றியை தந்து உள்ளது.
"நான் படிக்க ஆரம்பிக்கும் பொழுது என் குழந்தைகள் ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தாங்க, இப்போ எல்லாம் காலேஜ் முடிச்சுட்டாங்க" என்று சிரிக்கிறார்.
திருமணமானால் படிக்க முடியாது, வயது ஆகிவிட்டால் படிக்க முடியாது, குடும்பத்தினை பார்த்துக் கொண்டு படிக்க முடியாது, வயது வந்த பிள்ளைகளை வைத்துக் கொண்டு படிக்க முடியாது என்ற மன நிலையில் இருப்பவர்களுக்கு சீதாம்மாவின் வெற்றியே விடை.
பின்னர் எனது ஊர் மற்றும் பணியினைக் கேட்டு அறிந்தவர் "நானும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தான் ஐயா வேலை எடுத்து இருக்கேன்" என்றார்.
"அப்படியா அம்மா" என்று இருவரும் அலைபேசி எண்களைப் பகிர்ந்து கொண்டு, "சென்னையில் ஏதும் உதவி என்றால் அழையுங்கள் அம்மா", என்று கூறி விடை பெற்றேன். "கண்டிப்பாக ஐயா" என்று அவரும் கணவருடன் கிளம்பினார்.
படம் ஒண்ணு: சீதாம்மாவுடன் எடுத்த போட்டோ.
இறுதியாக இன்றைய கலந்தாவில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் தட்டச்சராக வேலை கிடைக்கப் பெற்ற எனது தங்கையும் மகளுமான முத்துலட்சுமிக்கும் வாழ்த்துக்கள்.
முடியும் என்று நினைத்தால் ஆயிரம் வழிகள் உண்டு.
முடியாது என்று நினைத்தால் ஆயிரம் காரணங்கள் உண்டு.
சீத்தாம்மாவிற்கு தெரிந்தது வழிகளே அன்றி காரணங்கள் அல்ல.
நன்றி.
No comments:
Post a Comment