Sunday, March 10, 2019

கணவரின் வெற்றி எந்த வயதிலும் மனைவி கையில்...

மனைவிமார்களே...

உங்கள் கணவரின் வெற்றி எந்த வயதிலும்  உங்கள் கையில்.

இதை படியுங்கள்!!!!

ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்...

இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்.

அவனுக்கு அன்பும், அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்.

அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.

எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது.

நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது.
கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது.

வருமானம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்து விட்டது.

கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலும் கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடி கொண்டது.

சோகமே உருவாகி விட்டான்.
ஒரு நாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலை சாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது.

அதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள்.

"ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குறீங்க.. இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே. அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள்.

புது நம்பிக்கை, புது உற்சாகம் உள்ளத்தில், கொல்லன் விறகு வெட்டியாக ஆனான்,

அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது.

வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது.

ஒரு நாள் ஊடலும் ,சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்.

"மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே ! என்ன அது?".

விறகு வெட்டியான நம்ம கொல்லன் சொன்னான்.

"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக் கொழம்புமாய் இருக்கும். இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதானடி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு. இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலையே"
என்றவனுக்கு கண் கலங்கவும் தவித்துப் போனாள் அவள்.

"வேணாஞ்சாமி வேணாம், நீங்க ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீக, என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம். காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம். கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்" என்றாள்.

மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகு வெட்டியானவன் விறகுக்கடை முதலாளியாக ஆனான்.

வருமானம் பெருகியது,
அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான்.

ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன...

வந்தது கெட்ட நேரம்,
விறகு கடையில் தீ விபத்து!...
அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது.

தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி.

நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகு வெட்டி வாழ்க்கை நடத்து.

எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்.

மனைவி வந்தாள்...

கணவனின் கண்ணீரை துடைத்தாள்.

அவன் தலை சேர்த்து நெஞ்சோடு கட்டி அணைத்தாள்,

கண்ணீர் மல்க சொன்னாள்;

"இப்போ என்ன ஆயிடுச்சுனு எஞ்சாமி அழுதீக, விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு, கரியாத்தானே ஆகியிருக்கு, நாளையில் இருந்து கரி வியாவாரம் பண்ணுவோம்"
தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது.

ஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் ஆட்களிருந்தால் கோமா ஸ்டேஜ்ல இருக்கவன் கூட ஒலிம்பிக் ஓட்ட பந்தயத்தில் ஜெயிப்பான்.

ஊக்குவிக்கறவனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான்.

சதா உதாசினப் படுத்தி கொண்டிருந்தால்
ஆரோக்கியமா இருக்கறவனுக்கும் குளுகோஸ்தான் போடணும்.

புரிஞ்சிருந்தா ரொம்ப சந்தோஷம்,,,...!

மா.பொற்செல்வி பட்டிமன்ற பேச்சாளர்.

பிடித்திருந்தால் பகிருங்கள்👍

No comments: