Tuesday, March 12, 2019

இன்பம் - துன்பம் இவை இரண்டும்...

ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்,

"என்ன ஒரு மோசமான நிலை?" என்று பரிதாபமாக விசாரித்தனர். "இருக்கலாம்" என்று ஒரே வார்த்தையில் அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்து போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை உடன் அழைத்து வந்தது.

இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம் பக்கத்தினர்,
"நீ ரொம்ப கொடுத்து வைத்துவர் , இப்போ நாலு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு" என்றனர்.

தனக்குக் கிடைத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மறுபடியும் "இருக்கலாம்" என்று கூறி முடித்தார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான்.

என்னப்பா, உனக்கு ஒரு நல்லது நடந்தா, அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க ஆறு மாசத்துக்கும் மேல் ஆகும் போல, ரொம்ப துன்பமான நிலைமை" என்று கூறி ஆதங்கப்பட்டனர்.

விவசாயி பெரிதாக வருந்தாமல், "இருக்கலாம்" என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச்செல்ல வில்லை.

இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயின் நல் வாய்ப்பை கண்டு புகழ்ந்தனர்.

இப்போதும் அந்த விவசாயி, " இருக்கலாம்" என்று கூறினார். அவர் ஏன் எல்லா சூழ்நிலையிலும் ஒரே மாதிரியான சமமான மனநிலையில் இருந்தார்..?

அதற்கு காரணம் உண்டு. அந்த விவசாயி வாழ்வின் இயல்புகளைப் புரிந்து கொண்டவர். நாள்களில் நல்ல நாள் , கெட்ட நாள் என்று எதுவும் இல்லை.

ஒவ்வொரு நாளும் நமக்கு மறைமுகமாகப் பல பாடங்களை உணர்த்திக்கொண்டு இருக்கின்றது.

நல்லது கெட்டது இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்கள்.

ஆம்.,நண்பர்களே..,

துன்பமான சூழ்நிலைகளில், இது நிரந்தரம் அல்ல.. நாளை என்று ஒன்று இருப்பதை மறக்க வேண்டாம்.

மகிழ்ச்சியான சூழ்நிலையில் தலை கால் புரியாமல் ஆடக் கூடாது. யாருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

எதையும் தலைக்கு எடுத்துச் செல்லாமல், எதைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நலம்.

இன்பம் - துன்பம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது.

No comments: