தாய் வயலில் வேலை செய்துகொண்டிருந்தாள். அவள் குழந்தை பக்கத்தில் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தது.
வேலை மும்மரத்தில் தாய் சிறிதுநேரம் குழந்தையைக் கவனிக்கவில்லை. திடீரென ஞாபகம் வந்து பார்த்தபோது குழந்தை கைபிடியில்லாத ஒரு கிணற்றின் விளிம்பருகே நின்று கொண்டிருந்ததைக் கவனித்தாள்.
அடுத்து ஒரு அடி எடுத்து வைத்தாலும் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிடும். கூட இருந்தவர்கள் பதைபதைத்தார்கள்.
ஆனால் அந்தத் தாய் சிறிதுகூட யோசிக்காமல் கொஞ்ச தூரம் மெதுவாக நடந்துசென்று, குழந்தையைப் பார்த்து, ''பாப்பா, அம்மா வீட்டுக்குக் கிளம்பிவிட்டேன். நீ வருகிறாயா, இல்லையா?'' என்று சப்தம் போட்டுச் சொன்னாள். அடுத்த நிமிடம் குழந்தை திரும்பி தாயைப் பார்த்து ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டது. தாயன்பு அந்த இக்கட்டானநேரத்தில் சமயோசிதமாக சிந்திக்க வைத்தது.
தாய்க்கு தெரியும் பிள்ளையை எப்படிக் காப்பது என்று...
No comments:
Post a Comment