Sunday, July 28, 2019

மாறிவிட்ட மனித பண்புகள், எல்லாம் காலத்தின் கோலம்...

முன்னெல்லாம் ஒரு சொந்தகாரங்க வீட்டுக்கு போனா...

"ராசு... வா வா வா கண்ணு. பாத்து எவ்ளோ நாளாச்சு. அம்மா நல்லாருக்கா ? அப்பா நல்லாருக்கா ? என்ன சாமீ இப்டி எளச்சுட்டே ?"

"எல்லா நல்லா இருக்காங்க்கா. உங்கவீட்ல எல்லா நல்லாருக்காங்களா ?"

"எல்லா நல்லா இருக்காங்க சாமீ. கைய கழுவிட்டு வா. ரெண்டே ரெண்டு தோசை ஊத்தி தாரே. பாப்பா... மாமாக்கு கைதுடைக்க துண்டெடுத்து குடுத்துட்டு, சூடா தோசை ஊத்து சாமீ"

"க்கோவ்... வரும் போதுதா சாப்ட்டுட்டு வந்தே. என்னால சாப்டவெல்லாம் முடியாது. தண்ணிமட்டும் குடுங்க, போதும்"

"இந்த தண்ணிய குடிக்கவா இவ்ளோதூரம் வந்தே ? பாப்பா... அப்டியே தோசைய தட்டத்துல போட்டு, இங்கயே கொண்டாந்து குடுசாமீ. மாமா இப்பிடியே உக்காந்து, பேசிட்டே சாப்டட்டும்" (எந்திரிச்சு சமையக்கட்டு வரைக்கும் நடக்க சங்கடப்பட்டு, சோறு வேணாம்னு சொல்ற சோம்பேறின்னு நினச்சுட்டாங்க போல)

அப்டி இப்டி பேசியே... ஒரு நாலஞ்சு தோசைய அமுக்கி விட்ருவாங்க. அடுத்து, வந்த விஷயத்த சொல்லிட்டு கிளம்பும்போது...

"ஏஞ்சாமீ... இருந்து சாயங்காலம் போ கண்ணு. மத்தியானத்துக்கு மாமன நாட்டுகோழி புடிச்சுட்டு வரச்சொல்றே"

"இல்லக்கா... வேலையிருக்கு. அவசரமா போகனும்"

"எப்ப வந்தாலும் உனக்கு அவசரந்தா... பாத்து மெதுவா போ சாமீ. அம்மாவ கேட்டேன்னு சொல்லு. ஒரு நாலுநாளைக்கு அம்மாவ கொண்டாந்து விடு சாமீ, இங்க எங்கூட இருக்கட்டும். பேசிட்டே மறந்துட்டம் பாரு, இரு வாரே... (போய்... ஒரு கட்டப்பையில கத்திரிக்கா, தக்காளி, வெங்காயம் ன்னு போட்டு கொண்டாந்து, வண்டில வெச்சுட்டு...) நேத்து சந்தைக்கு போன. நாங்க மூணுபேரு. இத்தனைய வெச்சுகிட்டு, என்ன பண்ணப் போறேன். கொண்டுபோய் அம்மாட்ட குடு. பாத்துபத்தரமா போ சாமீ. எனக்கும் அம்மா நெனப்பாவே இருக்கு. முடிஞ்சா அடுத்தவாரம் வாரேன்னு சொல்லு"

..............................................

இப்பெல்லாம் ஒரு சொந்தகாரங்க வீட்டுக்கு போனா...

"ஹாய்... வா. ஐஞ்சு நிமிஷம் லேட் பண்ணி இருந்தாலும், நாங்க வெளிய கிளம்பி இருப்போம். காபி, டீ என்ன சாப்பிடுற ? (கேட்டுட்டு உடனே...) எங்கவீட்ல நாங்க யாரும் டீ காபி சாப்பிடுறதில்ல" (இதுக்கும் மேல, 'இல்லைங்க... நாங்க தினம் ஆறுவேளையும் குடும்பத்தோட ஊர்வலமா போய் டீ குடிச்சுட்டு வந்தாத்தான் எங்களுக்கு தூக்கம் வரும்' ன்னா சொல்ல முடியும் ? நாமளும்...)

"ஐயையோ... நா இன்னேரத்துல டீ காபி சாப்பிட மாட்டேங்க"

"அப்புறம்... என்ன விஷயம் ? (வந்த விஷயத்த சொன்னதும்)  இதுக்காகவா இவ்ளோ தூரம் வந்தே ? போன்லயே சொல்லி இருக்கலாமே..."

"இல்லைங்க... பார்த்து ரொம்ப நாளாச்சு. அதான் நேர்ல பாத்துட்டு போலாம்னு வந்தேன்"

"அதான் தினம் நாலுதடவ, வாட்ஸ் ஆப் டிபில... போட்டோ அப்டேட் பண்றனே..."

(கண்ணங்கண்ணமா செருப்பாலயே அடிச்ச மாதிரி இருக்கும். இதுக்கிடைல, அவங்க பையனும் பொண்ணும் காதுல இயர்போன மாட்டிட்டு குறுக்க மறுக்க போய்வந்துகிட்டு இருப்பாங்க. ஆனா நம்மள ஒருமனுஷ ஜந்துவாக்கூட மதிக்க மாட்டாங்க. இந்தம்மா செருப்பால அடிச்சது பத்தாதுன்னு, தன்னோட குட்டிங்க கைல வௌக்குமாத்த குடுக்குற மாதிரி...)

"ப்ரீத்தி... இந்த அங்கிள் யாருன்னு தெரிதா ?"

(அது சின்னவயசுல, நம்ம பாக்கெட்ல கையவிட்டு காச எடுத்து, ஏழு கடலமிட்டாய வாங்கி ஒரே வாய்ல ஒன்னா அமுக்குனத மறந்துட்டு... சந்தைல எருமைமாட்ட ஏறஇறங்க பாக்குறமாதிரி ஒரு பார்வைய பாத்துட்டு...)

"நோ மம்மி... நா பாத்ததே இல்ல. யாரிது ?" ன்னு, வௌக்கு மாத்துலயே போடும். உடனே அம்மாகாரி ஒரு சமாளிப்பு சிரிப்ப சிரிச்சுட்டு...

"அப்புறம் ?" (இன்னுமாடா கிளம்பல)

"சரிங்க... டைமாச்சு நா கிளம்பறேன்"

"ஆமா... வந்து ரொம்ப நேரமாச்சு. நானும் வெளிய கிளம்பனும். இனிமே வரும்போது ஒரு ரிங்பண்ணிட்டு வா. எங்க வீட்டுக்கு வர்ற கெஸ்ட்... எப்பவுமே பர்மிஸன் கேட்டுட்டுதான் வருவாங்க. இப்ப போம்போது அந்த கேட்ட லாக் பண்ணிட்டு போயிடு. தெருநாய் உள்ள வந்துடும்" !!!

*மாறிவிட்ட மனித பண்புகள் ,எல்லாம் காலத்தின் கோலம்*

No comments: