Friday, November 15, 2019

பண்பு - சிறுகதை...

அப்பா, அம்மா, மகன், மகள் நால்வரும் காரில் வெளியூர் சென்றார்கள். அனைவரும் சந்தோஷமாக பேசி சிரித்தபடி போகும்போது கார் திடீரென்று பஞ்சர் ஆகிவிட்டது.

நல்லவேளையாக அப்பாவுக்கு பஞ்சர் ஒட்டத்தெரியும். அவர் பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தார். குழந்தைகளான மகனும் மகளும் அக்கறையுடன் அப்பாவின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வையில் அப்பா தங்களுக்காக அப்படி சிரமப்படுவதில் உள்ள கவலை தெரிந்தது.

ஆனால் அம்மாவோ அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து, பென்சிலும் கையுமாக குறுக்கெழுத்துப் புதிரை விடுவித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த மகனுக்கும் மகளுக்கும் அம்மாமீது கோபம் வந்தது. அப்பாவும் தன் மனைவியை அதிருப்தியுடன் பார்த்தார். அம்மா அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.

டயரை மாற்றிய பிறகு பயணம் தொடர்ந்தது. அம்மாவிடம் குழந்தைகள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

‘‘அம்மா, நீங்க ஏன் அப்பா கார் ரிப்பேர் பண்ணும்போது மரத்தடில இருந்து கிராஸ்வேர்ட் போட்டீங்க. அப்பா பக்கத்துல வந்து நின்னுருக்கலாம்ல!’’

‘‘அம்மாவுக்கு எப்படி கார் டயரை மாத்துறதுன்னு தெரியாதே!’’

‘‘எங்களுக்கு மட்டும் தெரியுமா அம்மா? இருந்தாலும் நமக்காக அப்பா கார் ரிப்பேர் பண்ணும்போது ஒரு பண்புக்காக ‘என்ன பண்றீங்க’ அப்படின்னு கேட்டிருக்கலாமே?’’

‘‘ஆமா, அப்படி ஒரு பண்பு இருக்கு இல்ல!’’

‘‘என்னம்மா, எங்களுக்கு பண்பு சொல்லித் தந்ததே நீங்கதான். ஆனா நீங்களே இப்படி பண்பில்லாம நடத்துக்கிறீங்களே?’’

‘‘சரி, அம்மா ஒரு கேள்வி கேட்கிறேன். நான் ஆபீஸ் வேலைக்கும் போயிட்டு வீட்ல வந்து சமைக்கும்போதும், துணி துவைக்கும்போதும், பாத்திரம் கழுவும்போதும், வீடு துடைக்கும்போதும் நீங்களும் அப்பாவும் அதே பண்போட என் பக்கத்துல வந்து நின்னுருக்கீங்களா?’’

‘‘எங்களுக்கு அந்த வேலை தெரியாதும்மா!’’

‘‘அது மாதிரிதான் எனக்கும் டயர் மாத்துறது தெரியாது. நான் போய் மரத்தடில உக்காந்துக்கிட்டேன்.’’

இப்போதுதான் அப்பாவுக்கும் குழந்தைகளுக்கும், எப்படி அம்மாவின் மனதை கஷ்டப்படுத்தியிருக்கிறோம் என்று புரிந்தது.

அம்மா தொடர்ந்தார். ‘‘இன்னைக்கு நாம வெளிய கிளம்பினது காலைல ஏழு மணிக்கு. நான் காலையில் மூன்று மணிக்கு எழுந்தேன்.

உங்கப்பாவுக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காது. காலை டிபன், மதியம் சாப்பாடு, நடுவில் தின்பதற்கு பணியாரம், சுழியன் எல்லாம் செய்தேன். அப்போது நீங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டும், டி.வி பார்த்துக் கொண்டும் அரட்டையடித்துக் கொண்டும்தானே இருந்தீர்கள். அப்போது நான் ஏதாவது கேட்டேனா?

இப்போது உங்கள் அப்பாவுக்காக இரக்கப்பட்டு என்னிடம் கேள்வி கேட்டது மாதிரி, எனக்காக இரக்கப்பட்டு உங்கப்பாவிடம் கேள்வி கேட்டீர்களா? அல்லது நீங்கள்தான் உதவி செய்தீர்களா?’’

இதைக் கேட்டதும் மூவருக்கும் கண்ணில் நீர் பெருகியது. தங்கள் தவறை உணர்ந்து அம்மாவிடம் மன்னிப்பு கேட்டனர்.

அம்மா மனம் நிறைந்து, தன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல், ‘‘இந்தாங்க தேங்காய்ப்பால் முறுக்கு, சாப்பிடுங்க’’ என்று கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்தார்.

நான் ரசித்த கதை

No comments: