Monday, April 13, 2020

சிந்தனையும் செயலும்...

"சிந்தனை தான்'' ஏன் எதற்கு எப்படி என்ற வினாவை எழுப்பி அறிவைப் பயன்படுத்தச் செய்யும்.

சிந்தனை இல்லா விட்டால் உலகத்தில் இயங்குகின்ற சக்தியே இருக்காது. சிந்தனையின் மூலமே முன்னேற்றம் காண முடியும்.

நாம் அனுபவிக்கும் இன்பங்கள் எல்லாம் மனிதர்களின் சிந்தனையிலிருந்து பிறந்தது தான். அவர்களுடைய சிந்தனையே செயலாக மாறிக் கண்டுபிடிப்புகளாகத் தோன்றின.

நாம் யாராக இருந்தாலும் எந்தத் தொழிலைச் செய்பவர்களாக இருந்தாலும் சிந்தனையை உயர்வாகக் கொண்டிருக்க வேண்டும். 

சிந்தித்துச் செயல்படுவதின் மூலமே சிறப்பாக வாழ முடியும். நம்முடைய சிந்தனை ஆக்கப்பூர்வமான அறிவு நிரம்பியதாக இருந்தால் அனைவருக்கும் பயன்படும். 

சிந்தனையில் தெளிவு இருந்தால் நமக்கு வரும் சோதனையைக் கூட சாதனையாக மாற்றி விட முடியும். நாம் நினைத்தால் மனதில் நல்ல சிந்தனையை மட்டுமே வளர்த்துக் கொள்ள முடியும்.

இன்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் சிந்தனை எவ்வளவு அவசியமாகத் தேவையோ, அவ்வளவுக்குச் செயலாற்றலும் தேவை என்கிறார் அறிஞர் ஹாஸ்லிட். 

இது இவர் கண்ட முடிவு மட்டுமே அல்ல! உலகத்தின் முடிவும் இது தான்.

சிந்தனையும் செயலும் இணைந்து இயங்குகின்ற போது தான் நாம் மேற்கொண்ட செயலில் வெற்றி பெற முடியும். 

குளோரோபாமைக் கண்டு பிடித்தவர் சிம்சன். இவர் மனிதர்கள் படும் நோயின் வேதனையைக் கண்டு கண் கலங்கினார். 

அவருடைய காலத்தில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் முதலில் உயில் எழுதி வைத்து விட வேண்டும். 

உயிருக்கு உத்திரவாதமற்ற சிகிச்சையாகக் கருதப்பட்டது அறுவை சிகிச்சை. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று சிம்சன் சிந்தனைச் செய்தார். 

பலவிதமான ஆராய்ச்சியில் மூழ்கினார். அறுவை சிகிச்சையின் போது வலி தெரியாமல் இருக்கும் வழியை கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்ற ஒரே முடிவை எடுத்து தீவிரமாக சிந்தனையில் ஆழ்ந்தார்.

நாட்கள் ஓடின. வருடங்கள் கடந்தன. தன்னுடைய சிந்தனையின் மூலமே ஆராய்ச்சியை விடாமல் செய்தார். அதன் பயன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட எவரும் உயிர் வாழ முடியும்.

அறுவையின் போது கூட வலி இல்லாமல் இருக்க இயலும் என்று நிரூபித்துக் காட்டினார். இந்த கண்டுபிடிப்புக்குக் காரணம் அவருடைய ஒரே சிந்தனை தான். 

ஒரு இலட்சியத்தை சிந்தனையிலே முளைக்க வைத்து விட்டு நன்றாக வேர் விட்டு வளரும் வகையில் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாலே போதும். அது தானாகவே வெற்றி பெற்று  விடும்.

சிந்தனையில் தொடர்ந்து ஈடுபடும் போது நம்முடைய அறிவு நாளுக்கு நாள் பெருகும். 

சிந்தனையே ஆழமான அறிவுக்கு வித்தாக அமையும்

அந்த அறிவின் தன்மை வாழ்க்கையை வளமுடன் வாழ வழி காட்டும்.

No comments: