Friday, May 1, 2020

பணியாளர்களின் மகிழ்ச்சியே...

ஒரு நிறுவனத்தில் பணியாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போதுதான் நிறுவனம். நன்கு செயல்படும் மற்றும் உற்பத்தியும் பெருகும்..

தங்கள் கடமையில் கண்ணும் கருத்தாக இருக்க வேண்டும் என்று பணியாளர்களும்,கடமையை செய்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளும் புரிந்து கொண்டு செயலாற்றினால் பணிகள் வேகமாக நடக்கும்,உற்பத்தியும் பல மடங்கு பெருகும். 

ஒரு நிறுவனத்திற்குக் கீழ் வேலை செய்யும் அதிகாரி என்பவர் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் தன் கீழ் பணியாற்றும் பணியாளர்களிடம் வெறுப்பை காட்டுவதை தவிர்க்க வேண்டும்

மகிழ்ச்சியான பணியாளர்கள் எங்கு இருக்கிறார்களோ அந்த நிறுவனம் நன்றாக முன்னேறுகிறது என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. 

அப்படிப்பட்ட மகிழ்ச்சியான பணியிடங்களை உருவாக்க என்ன செய்ய வேண்டும்?

என்னதான் நிறுவனங்களில் நல்ல சம்பளம், காப்பீடு வசதி, போனஸ், ஊக்கத் தொகை என அனைத்தும் இருந்தாலும், ஒரு பணியாளரின் பணியிடச் சூழல் எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டிய அவசியமும் நிறுவனங்களுக்கு உள்ளது. 

அதற்குப் பணியாளர்களை அணுகும் முறையில் சில உத்திகளைக் கையாள வேண்டி இருக்கிறது.

பணியாளர்கள் நிதி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல்நல ரீதியாகவும் குறை இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 

வேலையைக் கொடுத்தோமா, அதைச் செய்து முடித்தார்களா, சம்பளத்தைக் கொடுத்தோமா என்பதோடு மட்டும் நின்றுவிடாமல் பணியாளர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். 

அவர்களது குடும்பச் சூழல், கடன், எதிர்பார்ப்புகள், தேவைகள் அனைத்தையும் கவனிக்க வேண்டும். இது தனிநபரின் விஷயங்களில் மூக்கை நுழைப்பதாகி விடுமே என்று கேட்கலாம். உண்மைதான். 

ஆனால், எதையும் தனிப்பட்ட முறையில் செய்தால் தான் அது மூக்கை நுழைப்பது. அதையே பொதுவாக்கினால் அது உத்தி.

ஒரு ஆய்வில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் பிரச்சினைகளை எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் என்று கேட்டபோது,
27 சதவீத நிறுவனங்கள் மட்டுமே தங்கள் பணியாளர்களின் மோசமான நிதி நிலை குறித்து கவலைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

61 சதவீத நிறுவனங்கள் பணியாளர்களின் நிதி நிலையை மேம்படுத்துவதில் ஏதோ ஒரு முயற்சியை எடுத்து உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

பணியாளர்களைப் புரிந்துகொள்வதே மிகவும் கடினமானதாக இருப்பதாகச் சொல்கின்றன பெரும்பாலான நிறுவனங்கள். புரிந்து கொண்டால் தானே அவர்களுக்கான தீர்வுகளைக் கொடுக்க முடியும் என்கின்றன. 

இதற்கு பணியாளர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
ஏனெனில் இன்றைய நுகர்வுப் பொருளாதார சூழலில் நிதி நிலைதான் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மூலகாரணம். 

பணியாளர்களின் நெருக்கடியான தருணங்களில் நிறுவனம் சார்பாக செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ள திட்டங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். 

நெருக்கடியான சமயங்களில் சம்பளத்தில் கடன் கொடுப்பது, பிஎப் தொகையைப் பெற உதவுவது போன்றவை உதாரணங்கள்.

அடுத்து மன ரீதியான பிரச்சினைகளைச் சரி செய்து கொள்ள நிறுவனங்கள் சார்பாக உளவியலாளரை நியமிக்கலாம்.

இதற்கெல்லாம் மேல் பணியாளர்கள் பிரச்சினை களைச் சுதந்திரமாகப் பேசும் வெளியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஆம்.,நண்பர்களே..,
பணியாளர்களை ஊக்குவித்தால், ஆரோக்கியமான உறவை பணி இடத்தில் உருவாக்கலாம்..

மற்றும் வேலையில் திருப்தி, மகிழ்ச்சி இருக்கும் பணியாளர்கள் மட்டுமே,அந்த நிறுவனத்திற்கு நன்கு உழைத்து நிறுவனத்தை இலாபம் அடையும் சிறந்த நிறுவனமாக, கொண்டு வருவார்கள்..!!!💐🙏

No comments: