Wednesday, April 11, 2018

முதன்முதலில் 'மகாத்மா'என்று அழைக்கப்பட்ட ஜோதிராவ் பூலே...

இந்தியாவில் முதன்முதலில் 'மகாத்மா'என்று அழைக்கப்பட்ட ஜோதிராவ் பூலே(Jyotirao Phule)யின் பிறந்த நாள் இன்று (11 ஏப்ரல் 1827)
ஜோதிராவ் பூலே அவர்கள் 1827 ஆம் ஆண்டில் மகாராட்டிரத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் உள்ள லால்கன் என்னும் கிராமத்தில் பிறந்தவர்.
மராட்டிரத்தின் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவுகளில் ஒன்றான மாலி என்ற பிரிவைச் சேர்ந்தவர்.இளமைப் பருவம்தொட்டே சீர்திருத்த எண்ணங்கள் முளைவிடத் தொடங்கியது.அதற்குக் காரணம், சிறுவயதில் அவர் இருந்தபோது ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளால் அவர் குடும்பமும், அவரும்பட்ட இன்னல்கள் பின்னாளில் அவரை ஓர் சமூகப் புரட்சியாளராக மாற்றியது.
பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் எனப்பட்டோர் கல்வி பெறுவதன் மூலமே சமூகத்தில் உயர்நிலை எய்த முடியும் என உறுதியாக நம்பினார். எனவே, மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை 1848 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலாகத் தொடங்கினார்.
அப்பள்ளியில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட மகார்,மாங் போன்ற பிரிவுப் பெண்களுக்கு முன்னுரிமை தந்தார். எனினும், உயர்சாதியினரின் மிரட்டல்களால் அப்பள்ளிக்கு ஆசிரியர்கள் கிடைக்காதநிலை ஏற்பட்டபோது தன் மனைவி சாவித்திரிக்குக் கல்வி புகட்டி அவரை அப்பள்ளியின் ஆசிரியராக்கினார்.
அதுமட்டுமின்றி, தன்வீட்டுக் குடிநீர்க் கிணற்றை, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் திறந்துவிட்டார்.
பெண் கல்வியை ஆதரித்த பூலே அவர்கள் 1851ஆம் ஆண்டில் அனைத்து சாதிப் பெண்களுக்குமான பள்ளியைத் தொடங்கினார்.1855 இல் மாலை நேரப் பள்ளி ஒன்றையும் தொடங்கினார்.
பெண் விடுதலை என்று குறிப்பிடாத பூலே ஆண்-பெண் இருவருக்குமான சமமான மனித உரிமைகள் வேண்டுமென்று வலியுறுத்தினார்.
விதவைகள் மறுமணத்தை ஆதரித்த பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்க்கவும் தயங்கவில்லை.
பூலேவின் செயல்பாடுகளும்,புரட்சிகர நடவடிக்கைகளும் உயர்சாதியினர் எனப்பட்டோருக்கு ஆத்திரத்தைக் கிளப்பவே, பூலேயின் தலைக்கு விலை பேசப்பட்டது.
1856இல் அவரைக் கொலை செய்ய நடந்த முயற்சி மத வெறியின் உச்சம் என்பதைத் தவிர வேறென்ன?
ஒருவகையில், பூலே அவர்கள் தந்தை பெரியாருக்கும் முன்னோடியாகவும் திகழ்ந்தார் எனக் கூறமுடியும்.ஏனெனில், பெரியார் அவர்களின் கண்ணோட்டத்தில் திருமணம் என்பது புனிதத் தன்மை வாய்ந்த சடங்கு அல்ல,மனம் ஒத்த ஆண்,பெண் இருவரிடையேயான ஓர் ஒப்பந்தம் மட்டுமே.
பூலே இளம் பெண்கள்,திருமணம் செய்து போகும் குடும்பத்தின் ஒப்பந்த ஊழியராகச் செல்கின்றனர் என்ற கருத்தினை நோக்கி தனது வாதத்தைக் கொண்டு சென்றார்.
அதேபோன்று, திருமணச் சடங்கு முறைகளை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பெண்கள்,ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் நலன் காக்கவும்,அவர்களின் நிலை உயரவும் பள்ளிகளைத் தொடங்கி அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பூலே 1873 செப்டம்பர் 24 அன்று சத்ய சோதக் சமாஜ் (உண்மை தேடுவோர் சங்கம்) என்னும் சங்கத்தைத் தொடங்கினார்.
இச்சங்கம் தொடங்கப்பட்டதற்குப் பிறகு, கல்வியைப் பரப்பல், விதவைத் திருமணத்தை ஊக்குவித்தல், புரோகித ஒழிப்புத் திருமணங்களை நடத்தல், சமூக ஏற்றத் தாழ்வுகளைப் போக்கல், உழவுத் தொழிலை மேம்படுத்தல் ஆகிய சமூகப் பொருளியல் காரணங்களுக்காகப் பாடுபட்ட இவ்வமைப்பே இந்திய மண்ணில் சமூக நீதிக்கான போராட்டத்தைத் தொடங்கி முன்னெடுத்துச் சென்றது.
அதோடன்றி, 1888 மே 11ஆம் நாளில் பூனேயில் நடந்த பொதுக்கூட்டத்தில், பூலேயின் கொள்கைச் செயல்பாட்டையும், சீர்திருத்த நடவடிக்கைகளையும் பாராட்டி அவருக்கு, மகாத்மா என்ற பட்டம் சூட்டப்பட்டது. அன்றுமுதல் மகாத்மா ஜோதிராவ் பூலே என்றே மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார்.
காந்தியடிகள் மகாத்மா என்று அழைக்கப்பட்டது பின்னர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மராட்டிய மண்ணில் கொள்கை முழக்கம் செய்தும், அறிவுபுகட்டியும் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட மகாத்மா பூலே 1890ஆம் ஆண்டு மறைந்தார்.
அதற்கு அடுத்த ஆண்டான 1891இல் அண்ணல் அம்பேத்கர் பிறந்தார். பூலேயை வழிகாட்டியாய்க் கொண்டு கொள்கை முழக்கம் செய்தவர் தான் அம்பேத்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாறு பல சமயங்களில் உன்னதப் பதிவுகளைத் தவறவிட்டிருப்பதற்கு மகாத்மா ஜோதிராவ் பூலே ஒரு சிறந்த உதாரணம். பூலே அவர்களின் பெயர்கூட இன்று நம்மில் பலருக்குத் தெரியாது என்பதை வேதனையுடன் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் பூலே போன்ற சமூக நீதிப் போராளிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
பூலே போன்ற சமூக நீதிப் போராளிகளையும், அவர்தம் கொள்கைகளையும், வளரும் இளைய சமூகத்திற்குத் தெரியப்படுத்தாமல் சமூக நீதியை வென்றெடுக்க முடியாது.
சமூக ஏற்றத் தாழ்வுகளற்ற சமுதாயம் அமைய,அந்த ஏற்றத் தாழ்வுகள் நீங்கப் போராடியவர்களின் வரலாற்றை நாம் முதலில் அறிந்திருக்க வேண்டும்.அல்லாமல், சமூக ஒருமைப்பாடு, சமத்துவ சமுதாயம் என்பவைகளெல்லாம் வெறும் பகற்கனவாகவே இருக்கும்.
#JaiPhule

No comments: