Thursday, May 9, 2019

தமிழர்களும் இஸ்லாமும்...

இன்பத்தமிழில் எம் நாயகரின் புகழ் பாடுவோம்... உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலை. அந்த இன்பமொழியாம் தாய்மொழி தமிழை பற்றி பிரசித்தி பெற்ற ஞானகுரு ஸூபி மகான் கீர்த்திமிகு கீழக்கரையில் மறைந்து வாழும் மௌலல் கவ்ம் கௌதனா ஷெய்கனா இமாம் கல்வத் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொல்லும்போது. 

“நான்காவது வானத்தில் மலக்குமார்கள் பேசும் மொழியும் தமிழ் தான்” என்று சொல்கிறார்கள்.

ஆச்சர்யப்பட வேண்டாம் சகோதரர்களே! நீங்கள் சிந்தனை செய்து பாருங்கள்.

ஆண்டவனின் முதல் மனிதப் படைப்பான திருத்தூதர் ஆதம் நபி பூமியில் எங்கே இறங்கினார்கள்? இலங்கை! ஆனால் அதுவும் ஒரு காலத்தில் இந்தியாவின் தென் எல்லையான தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. ஆதம் நபி மட்டுமா இறங்கினார்கள்? அவர்கள் முதுகுத்தண்டில் அத்தனை நபிமார்களும் அவர்களது ஸஹாபாக்களுமல்லவா இருந்தார்கள். ஆக புனிதம் அவர்கள் இறங்கிய இடத்திற்கு வந்து விட்டது என்பதில் சந்தேகம் கொள்ளமுடியாது. (திருத்தூதருடன்) நபியுடன் தொடர்புடையதல்லவா?

சரி அது போல் ஆதம் நபியின் மகனார் ஹாபில் அவர்கள் ஜியாரத் ராமேஸ்வரத்தில் உள்ளது (அதே பள்ளியில் தான் நமது ஸூபி மகான் பெரியமுத்துவாப்பா நாயகத்தின் தந்தை ஸெய்யிது இஸ்மாயீல் வலியுல்லாஹ் அவர்களும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்)

அது போல் நூஹு நபி அவர்களின் கப்பல் கட்டிய இடம்  சிதம்பரதிற்கு அருகாமையில் உள்ள பரங்கிப்பேட்டை எனும் போர்ட் நோவா என்ற இடம்.    இதனால், தோணியப்பர் என்று அழைக்கப்படுபவர்களும், அவர்களாக இருக்கலாம் என சரித்திர ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

அது போல் தமிழகத்தில் சேது என்ற புழங்கப்படுவதை காணலாம், சீது நபி அவர்களின் பெயர் தான் சேது என்று மாறிவிட்டது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அலைஹிமுஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா நபிய்யினா அஜ்மஈன்.

ஆக முதலில் வந்த நபிமார்கள் அலைஹிமுஸ்ஸலாம் பேசிய மொழி தமிழ் தான் என்று அடித்து சொல்லமுடியும். இத்தகைய இன்பத்தமிழை நான்காம் வானத்தில் உள்ள மலக்குகள் பேசுவது ஒரு விந்தையான விஷயமல்ல!

நம்முடைய  எஜமானர் சூபி மகான் துறவி  கல்வத் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தான் இதையும் சொல்கிறார்கள்.

அவர்களுக்கு, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிலிருந்து CHAIN OF REPORTERS எனும் ஸில்ஸிலா - சங்கிலித்தொடராக வந்த குருமார்கள் - ஷெய்குமார்கள் பட்டியல் இன்று வரை இருக்கிறது.  அவர்கள், சொன்னது போல், அந்த இன்பத்தமிழை வானத்தில் உள்ள மலக்குமார்களை, அல்லாஹ் தஆஅலா பேசவைத்திருப்பதில் முஃமின்கள் ஆச்சர்யப்படுவதில்லை.    

அடுத்து, நமது காயல்பட்டினம் காஸிம் புலவர் அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் சரித்திரம் உங்களுக்கு தெரியும். அருணகிரிநாதரின் திருப்புகழுக்கு மறுபுகழாக திருப்புகழை அவர்கள் கோர்வை செய்வதற்கு ஆரம்ப வார்த்தையான ‘பகரும்’ அதாவது ‘குல்’ என்ற அரபு வார்த்தையின் அழகிய தமிழ் மொழிபெயர்ப்பை சொல்லிக் கொடுத்ததும், அப்பா அவர்கள் மாநபி ‘மக்கப்பதிக்கும் தலைவர்...மக்கப்பதிக்கும் தலைவர்’ என்று வார்த்தை வராமல் தினறியபோது ‘உயர் சொர்க்கப்பதிக்கும்’ என்று எடுத்துக் கொடுத்ததும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்று சரித்திரத்தில் வருகிறது, நாம் நம்புகிறோம்.

இன்னும்,  மௌலிது அரபியில் ஓதி மத்ஹு செய்கிறோம். அதற்கு ஒரு குறிப்பிட்ட நன்மையென்றால்,   நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தரவுடன் தமிழில் மொழிபெயர்த்து தந்த இமாம் ஷாம் ஷிஹாபுத்தீன் அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் தமிழில் உள்ள ரஸூல்மாலை, முஹ்யித்தீன் மாலை, பெரிய ஹதீது மானிக்க மாலை போன்றவற்றை ஓதுவதில் அதிக நன்மைகள் இருக்கிறது, காரணம் அதன் அர்த்தம் புரிந்து இல்மும், அவர்கள் மேல் நேசமும் வளர உதவுவதினால் என்று நமது முன்னோர்கள் சொல்லித்தருகிறார்கள்.

ஜோதி நபியின் கருணையை நினைத்து, இன்பத்தமிழில் புகழ்ந்து பாடும் போது, இதய வேந்தரின் ஒளிவில் உள்ளம் உருகி  தோய்ந்து நிற்பதை  சொன்னால் புரியாது, சுவைத்தால் தான் புரியும்!

அந்த பாக்கியத்தை நம்மனைவருக்கும் அல்லாஹ் தஆலா அவர்களின் கருணை முகத்திற்காகவே தந்தருள்வானாக! ஆமீன்.

இவ்வுலகின் ஆதித்திருத்தூதர் பேசிய மொழியான தமிழ் இஸ்லாமிய நம்பிக்கையாக இருக்கும் ஏழு வானத்தில் நான்காம் வானத்தில் பேசப்படும் சிறப்புக்குரிய மொழியும் தமிழே!

No comments: