Saturday, October 19, 2019

சிந்தித்து செயல்படுங்கள்...

இளவரசன் ஒருவன் ஆற்றில் குளிக்கப் போனான். போகும்போது தேவையில்லாமல் தன் பணியாளர்களைத் திட்டிக் கொண்டே போனான்.
அன்று ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்ததால், அது இளவரசனை அடித்துக் கொண்டு போயிற்று. அவனிடம் திட்டு வாங்கிய பணியாளர்களும், இளவரசனைக் காப்பாற்ற பெரிதாய் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அலறியபடி ஆற்றின் போக்கில் போய்க் கொண்டிருந்த இளவரசனுக்கு, பற்றிக்கொண்டு கரையேற ஒரு மரக்கிளை கிடைத்தது. அதை பற்றிக் கொண்டான். அக்கிளையில் ஒரு முயலும், எலியும், பூனையும் நனைந்தபடி இருந்தன. இவன் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இன்னொரு பக்கம் கிளையை இறுகப் பற்றிக் கொண்டான்.

அவ்வழிவே வந்த வேடன், அந்தக் கிளையில் கயிற்றை வீசி இழுத்து எல்லோரையும் காப்பாற்றினான். மயங்கிக் கிடந்த இளவரசனை தன் வீட்டுக்குத் தூக்கி வந்து, அவன் எழுந்ததும் உணவு கொடுத்தான். பசியால் உணவை வேக வேகமாக உண்டு முடித்த இளவரசன், பசியாறியதும் ஓவென்று அழுதான்.

வேடன் காரணம் கேட்டபோது, ‘‘கேவலம் இந்த முயல், பூனை, எலி ஆகியவற்றுடன் என்னையும் சரிக்கு சமமாக அமர வைத்து உணவு பரிமாறிவிட்டாயே. நான் யார் தெரியுமா?

இந்நாட்டின் இளவரசன். நானும் இந்த அற்ப உயிர்களும் சமமா?’’ என்று கோபத்தில் சீறினான்.
அதற்கு வேடன், ‘‘இளைஞனே! நீ மரக்கிளையைப் பற்றும்போது இம்மூன்று உயிர்களும் உனக்கு முன்னரே அக்கிளையில் அமர்ந்திருந்தார்கள். அப்போது நீ கௌரவம் பார்த்து கிளையைப் பிடிக்காமல் இருந்திருக்கலாமே.

நீ பசியுடன் கண் விழித்தபோதும் இந்த மூன்றும் உன்னருகேதான் இருந்தன. அப்போது நீ இதே காரணத்தைச் சொல்லி சாப்பிட மறுத்திருக்கலாமே.
உனக்குப் பிரச்னை வரும்போது மட்டும்
கௌரவத்தை ஒதுக்கி வைக்கிறாய்.

உன் பிரச்னை தீர்ந்து நிம்மதியாக இருக்கும்போது கௌரவம் பார்த்து பிறரை ஒதுக்குகிறாய். இது எவ்வளவு மோசமான குணம். வாழ்க்கையில் நீ எவ்வளவு திறமைகளை வளர்த்திருந்தாலும், எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், நல்ல நோக்கமும் எண்ணமும் இல்லையென்றால் அவையெல்லாம் வீண்’’ என்றான்.

தன் தவறை உணர்ந்த இளவரசன், மன்னிப்பு கேட்டு திருந்தினான்.

நல்ல நோக்கமில்லாத மனிதனுக்கு எவ்வளவு அதிகாரம் கிடைத்தாலும், திறமை இருந்தாலும் அது வீண்தான்!                       

👉🏻சிந்தித்து செயல்படுங்கள்...          💧நலம் உண்டாகட்டும்..
🌸💐🎊🙏🏻👆🏻👏🏻

No comments: