Friday, January 17, 2020

தயக்கம்...

வெற்றிக்கு இரண்டு எதிரிகள் உண்டு. அது தயக்கமும், முயற்சி இன்மையும்தான். துணிச்சலை தோழனாக்கிக் கொண்டால் தயக்கம் எனும் எதிரியை விரட்டி அடித்து தன்னம்பிக்கையை வளர்க்க முடியும். 

தயக்கத்தை விட்டொழித்தாலே வெற்றி விரைந்து ஓடி வரும். தயக்கத்தை விரட்டும் முதல் யுத்தி நேர்மறை எண்ணங்கள்தான்

என்னால் முடியும் என்ற எண்ணம் தரும் நம்பிக்கை தயக்கத்தைவிரட்டி அடிக்கும். வெற்றியைத் தேடித் தரும். என்னால் முடியுமா? என்ற தயக்கம் தோல்வி எனும் படுகுழியில் தள்ளி விடும். 

யாரும் என் பேச்சை கேட்க மாட்டார்கள், எனக்கு யாரும் உதவ மாட்டார்கள், நமக்கு இது சரிப் பட்டு வராது என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களை குறைத்தாலே அனைத்தும் நலமாக நடப்பதை உணரலாம். 

மனஉறுதியால் தேடியதை கண்டு அடைந்தவர்கள் உண்டு. மனஉறுதி யின்மையால் பின்னடைவே வரும்.

அடுத்ததாக தயக்கத்தை விட்டொழிக்கவும் முயற்சி அவசியம். 

எழுத்தாளராக வேண்டுமானால் எழுதி எழுதிப் பழக வேண்டும், 

பேச்சாளராக பேசிப் பேசி பழக வேண்டும், வெற்றியை நோக்கி செயல் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 

எனவே நீங்கள் எதற்காகத் தயங்குகிறீர்கள், எதைக் கண்டு நடுங்குகிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்டு அதைப் போக்க முயற்சி செய்யுங்கள். 

அதற்கான தயாரிப்புகளுடன் அடுத்தடுத்த செயல்களை செய்யுங்கள். மன அமைதியுடன் ஒருமுகத்தன்மையுடன் செயல்பட்டு தயக்கத்தை வெற்றி காணுங்கள்.

சோர்வாக இருப்பது, தயங்குவது, பின்வாங்குவது, ஆர்வம் குறைவாக இருப்பது, முடியுமா? என சந்தேகிப்பது, முடிவெடுக்க முடியாமல் தயங்குவது, தன்னம்பிக்கையின்றி பேசுவது, செயல்படுவது எல்லாம் துணிவு இன்மையின் அடையாளங்கள். 

இதைத் தருவதும் தயக்கம்தான். தயக்கத்தை விட்டொழிக்கும்போது துணிச்சல் தானே வரும்.

துணிச்சல் வந்தால் தன்னம்பிக்கையும் கூடவே வந்து விடும்.

நெப்போலியன் ஒரு நாட்டை பிடிப்பதற்காக, தன் படை வீரர்களை ஆற்றைக் கடந்து படகில் அழைத்துச் சென்றானாம். 

ஆற்றைக் கடந்ததும், படகுகளை எரிக்கச் சொல்வாராம்..
வெற்றி பெறாமல் புறமுதுகு காட்டி வந்தால் நாடு திரும்ப முடியாது என்ற வீர மனப் பான்மையை வீரர்களின் மனதில் பதிய வைக்கத்தான் அவர் இப்படி செயல்படுவாராம். 

இது நிச்சயமாக எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்ற வைராக்கியத்தை வீரர்களுக்குத் தந்ததாம். இது நெப்போலியனின் வெற்றி ரகசியங்களில் ஒன்றாகும். 

ஆம், நீங்கள் உங்களை பூனையாக நினைத்துக் கொண்டால் பூனைதான். சிங்கமாக எண்ணிக் கொண்டால் சிங்கம்தான்.

அதாவது மனம் எவ்வளவு துணிச்சலை கொண்டுள்ளதோ அந்த அளவில் உங்கள் வெற்றி உறுதி.

ஆம்.,நண்பர்களே..

நெப்போலியன், மட்டுமல்ல தயக்கம் தவிர்த்து துணிச்சலுடன் செயல் பட்டவர்கள் எல்லாம் இன்று வெற்றியாளர்களாகவும், வரலாற்றில் இடம் பெற்றவர் களாகவும் இருக்கிறார்கள்.

தயக்கத்தை தாங்கும் மனநிலையை அழித்தால், மகிழ்வாய் வாழலாம்..💐💐💐🙏🏻

No comments: