Sunday, January 5, 2020

யாதும் ஊரே யாவரும் கேளிர்...

பழமையான பாடல் ஒன்று... இன்று 
உலகம் முழுவதும் தேடப்பட்டு, உச்சரிக்கப் படுகிறது.
அது கணியன் பூங்குன்றனார் எழுதிய
*யாதும் ஊரே யாவரும் கேளிர்....* எனத் தொடங்கும் பாடல். 

இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைக் சொல்கிறது.....
முழுப்பாடலும், அதன் பொருளும்
இதோ உங்களுக்கா.... 

*யாதும் ஊரே; யாவரும் கேளிர்;*
*தீதும் நன்றும் பிறர் தர வாரா;*
*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;*
*சாதலும் புதுவது அன்றே;*
*வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* 
*முனிவின் இன்னாது என்றலும் இலமே;* 
*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*
*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*
*நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர்*
*முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்*
*ஆதலின் மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும் இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*
– கணியன் பூங்குன்றனார்... 

பாடலின் வரிகளும், பொருளும்:

*யாதும் ஊரே யாவரும் கேளிர்*

எல்லா ஊரும் எனது ஊர். எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது, சுகமானது.

*தீதும் நன்றும் பிறர் தர வாரா*

தீமையும், நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை எனும் உண்மையை உணர்ந்தால், சக மனிதர்களிடம், விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை சார்ந்த வாழ்வு கிட்டும்.

*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன*

துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை. மனம் பக்குவப்பட்டால்,
அமைதி அங்கேயே கிட்டும்...

*சாதல் புதுமை யில்லை*

பிறந்த நாள் ஒன்று உண்டெனில், 
இறக்கும் நாளும் ஒன்று உண்டு.
இறப்பு புதியதல்ல. அது இயற்கையானது. எல்லோருக்கும் பொதுவானது. இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால், எதற்கும் அஞ்சாமல், வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.

*வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே*

இந்த வாழ்க்கையில் எது, எவர்க்கு, எப்போது, என்னவாகும் என்று எவர்க்கும் தெரியாது. இந்த வாழ்க்கை மிகவும்
நிலை அற்றது. அதனால், இன்பம் வந்தால் மிக்க மகிழ்வதும் வேண்டாம். துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்.
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்.

*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்*

இந்த வானம் நெருப்பாய், மின்னலையும் தருகிறது. நாம் வாழ மழையையும்
தருகிறது. இயற்கை வழியில் அது, அது
அதன் பணியை செய்கிறது. ஆற்று வெள்ளத்தில், கற்களோடு, அடித்து முட்டி செல்லும் படகு போல, வாழ்க்கையும், சங்கடங்களில் அவர், அவர் ஊழ் படி, அதன் வழியில் அடிபட்டு போய்கொண்டு
இருக்கும். இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்.

*ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே*

இந்த தெளிவு பெற்றால், பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம், சிறிய நிலையில் உள்ள சிறியவர்களைப் பார்த்து ஏளனம் செய்து இகழ்வதும் வேண்டாம். அவரவர் வாழ்வு
அவரவர்க்கு.  அவர், அவர்கள் அவற்றில்
பெரியவர்கள்.

*இதை விட வேறு யார் வாழ்க்கைப் பாடத்தை சொல்லித் தர முடியும்?*

எழுதியவர் ஊர்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுக்கா, மகிபாலன்பட்டி கிராமத்தில்....
அவர் பிறந்த இடத்தில் நம்மை ஒரு 
பாழடைந்த பலகை மட்டுமே நம்மை
வரவேற்கிறது.

No comments: