Sunday, September 12, 2021

முன்னேற்றப் பாதை...

வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால், முன்னேற்றப் பாதையை முதலில் உங்களுடைய மனதில் இருந்து தொடங்குங்கள். 

கனவுகளோடு காத்திருந்தது போதும், செயல் வீதிகளில் உழைப்பைப் பதித்து உயருங்கள். 

முன்னேற்றப் பாதை அமைத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை என்னவென்றால்,

உங்களுடைய மனதைத் திறந்து,மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைப் பெறுங்கள்.

உங்களுடைய கருத்தை வெளியிடுவதற்கு முன்னர், மற்றவர்களின் கருத்துக்களை கூர்ந்து கவனியுங்கள்,

நல்ல வலுவான கருத்துக்கள் இருப்பின் அதை உள்ளத்தில் வாங்கிக் கொள்ளுங்கள்.

மாற்றுக் கருத்துகளை கேட்கும் போது அவை சிறந்ததாக இருக்குமாயின் அவற்றின் அடிப்படையில் உங்களுடைய கருத்துக்களை மாற்றி அமைத்துக் கொள்ளத் தயங்காதீர்கள்.

எப்போதும் உங்களுடைய கருத்துக்களே சரியானவே என வாதிடாதீர்கள்.

இதை விட சிறந்த கருத்துக்கள் இருந்தால் ஏற்றுக் கொள்வேன் என்ற முன்னறிவிப்புடன் உங்களுடைய கருத்துக்களை சொல்லத் தொடங்குங்கள்.

புதிய தளிர்கள் துளிர்ப்பதால் தான் மரம் வளர்கின்றது. 

அதுபோல புதிய எண்ணங்கள் மனதில் நுழைந்தால் தான் மனிதனால் வளர முடியும் என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்பச் 
செயல்படுங்கள்.

நீங்கள் எடுக்கும் முடிவுகளே உங்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கின்றன. 

ஒரு பாதையில் சென்று கொண்டு இருக்கும் வாகனம் ஒரு நிலையில், அப்பாதை பல பிரிவுகளாகப் பிரிகின்றது. 

அப்போது எந்தப் பிரிவில் செல்கின்றது என்பதைப் பொறுத்தே அது ஒரு இலக்கை அடைகின்றது.

பல பிரிவுகளில் எந்தப் பிரிவில் செல்வது என்பதை முடிவு செய்யும் முன்னர், ஒவ்வொரு பிரிவுப் பாதையும் எங்கு செல்கின்றது என்று அறிய வேண்டும்

அத்துடன், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லும் பாதை எது என்பதையும் பொறுத்தே நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய பிரிவுப் பாதையைத் தேர்வு செய்ய வேண்டும்.

அதாவது ஒன்றைத் தேர்வு செய்வதால் ஏற்படும் நன்மை தீமைகளை எண்ணிப் பார்த்துத் தெளிவு பெற வேண்டும்.

பிறகு உங்களுடைய இலட்சியத்துடன் அவற்றை ஒப்பீடு செய்து பார்த்து, உங்களுக்கும் உங்களுடைய இலட்சியத்திற்கும் ஏற்றவாறு பொருத்தமான முடிவை எடுங்கள்.

மாற்றுக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டாதீர்கள். மேலும் மாற்றுக் கருத்துக்களை உளவாங்கும் திறந்த மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். 

உங்களுடைய கருத்தை முற்றிலும் சரியல்ல என நிரூபணம் செய்யும் விதத்தில் கூட மாற்றுக் கருத்துக்கள் புயல் வேகத்தில் உங்களுடைய மனதை நோக்கி வீசலாம். அதற்காக முடங்கி விடாதீர்கள்.

ஏனென்றால், மாற்றம் என்பது வளர்ச்சியின் முதல்நிலை என்பதை புரிந்து கொண்டு மாற்றுக் கருத்தை திறந்த மனதுடன் ஆய்வு செய்து பாருங்கள்.

எதையும் முற்றிலும் மறுக்காமல் ” யோசித்துப் பார்க்கிறேன் ” ” முயற்சித்துப் பார்க்கிறேன் ” என்ற மனநிலையோடு எதனையும் அணுகக் கற்றுக் கொள்ளுங்கள். 

மேலும், உங்களுடைய கருத்தை மற்றவர்களிடம் தெரிவிக்கும் போதும் மென்மையாகவும், அன்பாகவும் எடுத்துக் கூறுங்கள்.

புதிய கருத்துக்களையும், புரட்சிக் 
கருத்துக்களையும், உருவாக்குவதுடன் அவற்றை செயலாக்குவது தான் மிகவும் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றப் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.

*மாற்றுக் கருத்துக்களுக்கு மனதை திறந்து வையுங்கள்*

*வெற்றியின் பாதை காண விழிப்போடு செயல்படுஙகள்..*

*வெற்றியின் விழுதுகள் உங்களுடைய வாழ்வில் நீளும்*

📣📣📣📣📣📣📣📣📣📣📣📣

No comments: