Friday, July 6, 2018

உணர்வுகள்...

முகத்தில் புன்னகையோடு
வலம்வந்தேன்
" கள்ளச்சிரிப்பு "என்றார்கள்
கோபக்காரனானேன்
" உம்மணாம் மூஞ்சி" என்றார்கள்
அதிகம் பேசாமலிருந்தேன்
" ஊமையன்" என்றார்கள்
சளசளவென்று பேசினேன்
" வாயாடி " என்றார்கள்
புதிய தகவல்களை பரிமாறினேன்
" கருத்து கந்தசாமி " என்றார்கள்
அவர்கள் வார்த்தைகளுக்கு செவிசாய்த்தேன்
" ஜால்ரா " என்றார்கள்
எல்லா செயல்களிலும்
முன்நின்று செய்தேன்
" முந்திரிக்கொட்டை" என்றார்கள்
அவர்களைப் பின் தொடர்ந்தேன்
" பச்சப்புள்ள" என்றார்கள்
யாரைப்பார்த்தாலும் வணங்கினேன்
" கும்பிடு கள்ளன் "என்றார்கள்
வணங்குவதை நிறுதினேன்
  "தலைக்கனம்" என்றார்கள்
ஆலோசனை வழங்கினேன்
" படிச்ச திமிர்" என்றார்கள்
சுயமாக முடிவெடுத்தேன்
" அதிபுத்திசாலி "
என்றார்கள்
நான் அடிக்கடி அழுததால்
"இவனிடம் கவனம்" என்றார்கள்
நான் சிரித்தபோதெல்லாம்
"மறை கழண்டுப்போச்சி" என்றார்கள்
எதிர்கேள்வி கேட்டால்
"வில்லங்கம்"என்றார்கள்
ஒதுங்கி இருந்தால்
"பயந்தாங்கொள்ளி "என்றார்கள்
உரிமைக்குப் போராடினால்
"கலகக்காரன் "என்றார்கள்
எதற்கும் கலங்காமல் இருந்தால்
"கல் நெஞ்சன்" என்றார்கள்
"நாலுபேர் என்ன நினைப்பார்கள்?
நாலுபேர் என்ன பேசுவார்கள்?"
யாரோ நாலுபேருக்காக வாழ்ந்தேன்
தொலைவில் கிடந்தது வாழ்க்கை
அந்த நாலுபேரை கழற்றிவிட்டு
என்னை அணிந்துக்கொண்டேன்
துலங்கத் துவங்கியது
எனக்கான வாழ்வின் துளிர்...
படித்ததில் பிடித்தது...

No comments: