Thursday, September 27, 2018

தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீர்...

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு  மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். - (யோவான் 4:13-14) .
.
தென் அமெரிக்காவில் (South America) உள்ள உலகத்தின் இரண்டாவது நீளமான அமேசான் (Amazon)  நதியில் பெருவைச் (Peru) சேர்ந்த ஒரு கப்பலில் பிரயாணம் செய்த கப்பல் ஊழியர்கள், ஒரு காட்சியைக் கண்டனர். அதில், ஸ்பெயினை சேர்ந்த ஒரு கப்பல், அங்கு நடு நதியில் நிறுத்தப்பட்டிருந்தது. அதைச் சேர்ந்தவர்கள் அருகேச் சென்று பார்த்தபோது, ஸ்பெயினைச் சேர்ந்த கப்பலில் பிரயாணம் செய்த ஊழியர்கள் மிகவும், மோசமான நிலையில், காணப்பட்டார்கள். அவர்கள் உதடுகள் காய்ந்து, வீங்கிப் போய்,  ‘தண்ணீர் தண்ணீர்’ என்று கதறிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட பெருவைச் சேர்ந்த மக்கள், ‘நாங்கள் உங்களுக்கு உதவலாமா?’ என்றுக் கேட்டார்கள். ‘ஆம், எங்களுக்கு சுத்தமான தண்ணீர் வேண்டும்’  என்று மீண்டும் கதறத் தொடங்கினார்கள்.
அதைக் கேட்ட பெருவின் மக்கள்,  ‘உங்களது தோண்டிகளை கீழே இறக்கி, தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றுக் கூறினர். அப்போது ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள்,  ‘எங்களுக்கு உப்புத் தண்ணீர் வேண்டாம், குடிக்க நல்லத் தண்ணீர் வேண்டும்’ என்று கெஞ்சினார்க்ள. மீண்டும் பெருவைச் சேர்ந்தவர்கள்,  ‘உங்கள் தோண்டிகளை இறக்கி தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்’  என்று மீண்டும் வலியுறுத்தினர். கடைசியில் வேண்டாவெறுப்பாக தண்ணீரை அவர்கள் மொண்டு கொண்டு அதைக் குடித்த போது அந்தத் தண்ணீர் நல்லத் தண்ணீராக இருப்பதைக் கண்டார்கள். அமேசான் நதியின் தண்ணீர் உப்பு அல்ல, நல்லத் தண்ணீர் என்பதை அப்போதுதான் அறிந்துக் கொண்டார்கள். அவர்கள் அத்தனை நாள் கரையை விட்டு தூரமாக இருந்தபோது, அவர்களுக்கு தண்ணீர் வாய்க்கருகே இருந்தபோதிலும், அறியாமையினால் அதை உபயோகிக்காமல் தண்ணீரின் தாகத்தினால் துவண்டுப் போய் வாடிக் கொண்டிருந்தார்கள்.
இந்நாட்களிலும், எத்தனைப்பேர் தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஆசீர்வாதங்களை அறியாமல், வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவை காலைதோறும் புதிதாயிருக்கிறது என்று வேதம் நமக்கு சொல்கிறது. ஒவ்வொரு நாளும் இனிமையான காலையைக் காணவும்,  நம் வேலைகளை திறம்படச் செய்யவும் கர்த்தர் கிருபையளித்திருக்கிறாரே, அது எத்தனைப் பெரிய ஆசீர்வாதம்! வியாதியில் விழுந்துவிடாதபடி, நம்மைக் காக்கிறாரே, நேரா நேரம் நாம் சாப்பிட உணவு கொடுத்திருக்கிறாரே அது எத்தனைப் பெரிய கிருபை! எத்தனையோப் பேர் உணவைக் காண முடியும், அதை சாப்பிட முடியாது வியாதியின் காரணமாக, அப்படி இல்லாதபடி நாம் எல்லா ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க கொடுத்திருக்கிறரே அது எத்தனைப் பெரிய கிருபை! அதையெல்லாம் மறந்துவிட்டு, எனக்கு அது இல்லை. இது இல்லை என்று முறுமுறுப்பதே மனிதனுடைய குணமாக மாறிவிட்டது. மட்டுமல்ல.
தேவன் இரட்சிப்பை மிகவும் எளிதாக நமக்கு கொடுத்திருக்க, அது நமது பக்கத்திலேயே இருக்க, அதை விட்டுவிட்டு மனிதன், கங்கை ஆற்றில் மூழ்கினால் தன் பாவம் போய்விடும் என்று அத்தனை தூரம் பயணிக்கிறானே என்ன ஒரு விந்தை! காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை மனிதன் தன் பாவத்தை தொலைக்க போகத் தயார், ஆனால் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள அவனால் முடியாது, ஏனெனில் கிறிஸ்து வேறு யாருக்காகவோ என்று அவனது அறியாமையினால், அவன் அவரை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறான். இவர்களை தேவனிடம் திருப்பிக் கொண்டு வருவது யார்? நாம் தானே! நாம் செய்யாவிட்டால், வேறு யார் செய்ய முடியும்? தேவதூதர்கள் செய்ய முடியாது, கிறிஸ்து திரும்ப பிறந்து வர முடியாது, நாம் தான் அதைச் செய்ய வேண்டும்.  நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்று இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகளை அவர்களும் விசுவாசித்து அந்த ஜீவ தண்ணீரை அவர்களும் பருகி, நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள நாம் ஜெபத்தில் போராடுவோம், அறிவிப்போம், அவர்களையும் இயேசுவிடம் கொண்டுவருவோம் ஆமென் அல்லேலூயா!

No comments: