Thursday, November 8, 2018

பிரசவத்துக்குப் பிறகான பீரியட்ஸின்போது கருத்தரிக்க வாய்ப்புண்டு!!!

குழந்தை பிறந்த பிறகு, மாதவிடாய் எவ்வளவு நாள்கள் வரை ஆகும் என்கிற சந்தேகம், மருத்துவம் நன்கு வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் இருக்கிறது தெரியுமா? இந்தச் சந்தேகத்தை தீர்த்துவைக்கிறார், மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜ்.

''பிரசவத்துக்குப் பிறகு வருகிற பீரியட்ஸ் என்பது, கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுமே வாழ்க்கையில் ஒரு தடவையாவது கடந்துவரும் விஷயம்தான். ஆனால், அதில்தான் எத்தனை நாள் வரை ஆகும், எந்த அளவு ரத்தம் வெளியேறலாம்? இப்படி ரத்தம் வெளியேறும்போது உறவுகொண்டால் கருத்தரித்துவிடுவோமா? ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், அதை எப்படி அளவிட்டுக் கண்டுபிடிப்பது என ஏகப்பட்ட சந்தேகங்களும் குழப்பங்களும் இருக்கின்றன. டெலிவரியான பிறகு, ஒரு பெண்ணுக்கு ஆறு வாரங்கள் வரைக்கும் பீரியட்ஸ் ஆகும். சிலருக்கு ஐந்து வாரங்களோடு நின்றுவிடலாம். இது நார்மாலான விஷயம்தான். இப்படி பீரியட்ஸ் ஆகும்போது, சிசேரியன் ஆனவர்களைவிடச் சுகப்பிரசவமானவர்களுக்கு ரத்தப்போக்கு அதிகம் ஏற்படும். ஏனென்றால், சிசேரியன் செய்யும்போது மருத்துவர்கள், கருப்பையையும் நன்கு சுத்தப்படுத்திவிடுவதால், ரத்தப்போக்கு குறைவாகவே இருக்கும். சுகப்பிரசவப் பெண்களுக்கு இந்த வாய்ப்பு குறைவு என்பதால், ரத்தப்போக்கு ஆறு வாரங்கள் நீடிக்கலாம். இதுவும் நார்மல்தான்.

பிரசவத்துக்குப் பிறகான பீரியட்ஸின்போது, முதல் வாரம் அதிகமான ரத்தப்போக்கும், அடுத்த வாரம் ரத்தப்போக்கே சுத்தமாக இல்லாமலும் இருக்கும். அதற்கடுத்த வாரம், மறுபடியும் ரத்தப்போக்கு ஏற்படும். பிறகு குறையும். இதற்கான காரணம், கருப்பைச் சுருங்கி சுருங்கி விரிவதுதான். குழந்தைக்குப் பாலூட்டும்போது கருப்பை மெல்ல மெல்லச் சுருங்கும். இந்தச் சமயத்தில் பீரியட்ஸ் அதிகமாக வரும். சில நேரங்களில் கருப்பை விரிவடைந்து இருக்கும். இந்தச் சமயத்தில் பிரியட்ஸ் வராது. ஸோ, மேலே சொன்ன அத்தனையும் உதிரப்போக்கில் நார்மலான விஷயமே.

பிரசவத்துக்குப் பிறகான பீரியட்ஸில், முந்தைய பீரியட்ஸைவிட மூன்றிலிருந்து நான்கு மடங்கு வரை அதிகமாக ரத்தப்போக்கு இருக்க வேண்டும். ஒருவேளை இதைவிட அதிகமாக இருந்தால், உடனடியாக பிரசவம் பார்த்த மருத்துவரை அணுகுங்கள். காரணம், கருப்பையில் நஞ்சுக்கொடியின் சிறு துண்டு ஒட்டிக்கொண்டிருந்தாலோ, கருப்பையினுள் இன்பெக்‌ஷன் வந்திருந்தாலோ இப்படி ரத்தப்போக்கு அதிகமாக வரும். பிரசவத்துக்குப் பிறகு பீரியட்ஸ் வரைக்கும் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று பல பெண்கள் நம்புகிறார்கள். இது உண்மையில்லை பெண்களே... முதல் மூன்று வாரங்கள் வரைதான் பாதுகாப்பு. பிறகு, பீரியட்ஸ் இருந்தாலும் கருமுட்டை உருவாகலாம் என்பதால், கருத்தரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஸோ, இந்தச் சமயத்தில் தாம்பத்திய உறவுகொள்ளும்போது கவனமாக இருங்கள். தாம்பத்திய உறவு கொள்ளும்போது கவனமாக இருங்கள் பெண்களே.

குழந்தைக்குப் பாலூட்டும்போது, கருத்தரிக்க மாட்டார்கள் என்பதும் உண்மையில்லை. அந்தச் சமயம் கருமுட்டை வெளியேறினால், கரு உருவாகிவிடும். பிரசவத்துக்குப் பிறகு, பெண்களுக்குப் பாலூட்டுதல், ரத்தப்போக்கு என்று உடம்பில் இருக்கிற சத்துக்கள் வெளியேறிவிடுவதால், குழந்தைக்கு ஒரு வயது வரை பாலூட்டுகிறீர்கள் என்றாலும், அதுவரைக்கும் அயர்ன் மற்றும் கால்சியம் மாத்திரைகளை அவசியம் சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த முருங்கைக்கீரை, கேழ்வரகு போன்றவற்றையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.'' என்கிறார் ஜெயஶ்ரீ கஜராஜ்.

No comments: