Friday, November 16, 2018

அவல் கொண்டு செய்யும் உணவு வகைகள்...

*இனிப்பு அவல்*

முளைவிட்ட கைகுத்தல் அவல் கையளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போடவும். பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை தூள் செய்து சேர்க்கவும். அவல் மூழ்கும் அளவிற்கு நீர் விட்டு ஊறவைக்கவும். உண்ணும் நேரத்தில் துருவிய தேங்காய்ப்பூ தூவி பரிமாறவும்.

*சிறப்பு இனிப்பு அவல்*

தேங்காய் பாலில் அவலை ஊறவைத்து அதில் உலர் கொடிமுந்திரி, பேரீச்சம் பழத்துண்டுகள், கற்பழவிதை, முந்திரிப்பருப்பு துண்டுகள் கலந்து வைத்து உண்ணவும். சுவையோ சுவை மிக அருமையாய் இருக்கும். சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.விருந்தினர்கள் பாராட்டி உண்பார்கள்.

*பால் அவல்*

தேங்காய் பாலில் அவலை ஊறவைத்து உண்ணலாம். சர்க்கரை பிணியாலர்களுக்கு மிகவும் நல்லது. ஊறின உடனே உண்ணலாம். சர்க்கரை கலவாத ஏனைய முறைகளை நீரிழிவு பிணியாளர்கள் பயன்படுத்தலாம்.

*எள் அவல்*

ஊறவைத்த அவலுடன் வெள்ளை எள், தேங்காய் பூத் துருவல்,சிறிதளவு வெல்லம் கலந்து உண்ணவும். இதன் மணம் நம்மைக் கவரும், கை, கால வலிகள் இருந்தால் உடனே நீங்கிவிடும்.

*நெல்லி அவல்*

ஊறவைத்த அவலுடன் முன் கூறியவாறு எள்ளுக்கு மாற்றாக நெல்லியைத் துருவிக் கொட்டி கலந்து உண்ணலாம்.

*காய்கறி அவல்*

ஊறவைத்த அவலுடன் பச்சைக் காய்கறிக் கலவை மிளகு, சீரகத்தூள் கலந்து உண்ணலாம்.

*அவல் கன்னல்*

தேங்காய் பாலில் அவலை ஊறவைத்து அதில் உலர் கொடிமுந்திரி,சிறிதாய் நறுக்கிய வாழைப் பழத் துண்டுகள்,சிறு மணகம் ஆகியவற்றை போதுமான அளவு கலந்து நன்கு ஊறிய பின் சாப்பிடவும்.

*புடலங்காய் அவல்*

புடலங்காயை வெட்டி உள்ளே உள்ள சடை மற்றும் விதைகளை நீக்கிவிட்டு தூய்மை செய்து அவ்விடத்தில் கார அல்லது இனிப்பு அவலைத் திணித்து அடைக்கவும், அப்படியே சாப்பிடத் தரலாம். ஆவியில் வேகவைத்தும் தரலாம். செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்.

*அவல் இன்னுருண்டை*

வெல்லம், சர்க்கரை கலவாத முழுமையான இனிப்பு உருண்டை. எள், வேர்க்கடலை உலர் கொடிமுந்திரி, பேரீச்சம்பழம் அனைத்தையும் உரலில் இடித்து, உருண்டையாய்ப் பிடித்து வைக்கவும். குழந்தைகள் விரும்பிச் சுவைப்பார்கள். சக்கரைப் பிணி உள்ளவர்களும் இதனைச் சாப்பிடலாம்.

*அவல் உப்புமா*

ஊறவைத்த அவலுடன் எலுமிச்சம் பழச்சாறு அளவாய் கலந்து மிளகு, சீரகம் சேர்த்து உண்ணவும். வேகவைத்த குறுநொய் உப்புமாவை விடச் சுவையாய் இருக்கும். மாலை நேரங்களில் சிற்றுண்டியாய் செய்து சாப்பிடலாம்.

*உலர் அவல் கலவை*

தூய்மை செய்த அவலுடன், பொட்டுக்கடலை, வேர்க்கடலை,நாட்டுச் சக்கரை தேங்காய்ப்பூ கலந்து சாப்பிடலாம். எதேனும் கொறிக்க நினைப்பவர்க்கு இது ஏற்ற திண்பண்டம். மலச்சிக்கலுக்கு கைகண்ட மருந்து.

*சுண்டல் அவல்*

ஊறவைத்த அவலுடன் முளைவிட்ட பச்சைப்பயறு, வேர்கடலை அல்லது கொண்டைக்கடலை திட்டமான அளவில் கலந்து சாப்பிடச் சுவையாக இருக்கும். இடைவேளை உணவாக பயன்படுத்தலாம். ஊட்டமான உணவாக விளங்கும். காரச் சுவைக்கு மிளகு, சீரகத்தூள், இனிப்புச் சுவைக்கு வெல்லம் கலந்து கொள்ளவும்.

*பழச்சாறு அவல்*

பல்லணிப் பழம்(மாதுளை),கொடிமுந்திரி, சாற்றுக்கனி(சாத்துக்குடி) இவற்றில் ஏதேனும் ஒரு சாறு அவலில் ஓர் அங்குலம் மேலாக நிற்கும் அளவிற்கு தளும்ப ஊற்றி அரை மணி நேரம் ஊற விடவ்ம். சுவைக்கு தேவைப்படின் வெல்லம் சேர்க்கலாம். மற்றபடி எதுவும் கலக்காமல் உண்பது நலம்..அவலைச் சாப்பிடும்போது அதில் ததும்பி நிற்கும் சாற்றையும் ஒரு கரண்டியால் குடித்துக் கொண்டு சாப்பிட சுவை மிகும்.

*மாம்பழ அவல்*

மாம்பழம் கிடைக்கும் காலங்களில் ஊறவைத்த அவலுடன் மாம்பழத்தை சின்னச் சின்னதாய், செதில் செதிலாய் நறுக்கிப் போட்டு கலந்து சாப்பிடுங்கள். சுவையைப் பற்றி கூற வேண்டியதூ இல்லை.. பிள்ளைகள் விட மாட்டார்கள்.

*செங்கொழுப்பை(பப்பாளி) அவல்*

ஊறவைத்த அவலுடன் செங்கொழும்பைப் பழத்தை சிறு துண்டுகளாய் நறுக்கி போட்டு கலந்து உண்ணலாம். அல்லது பழத்தை நெடுக்காக பாதியாக வெட்டி அதனுள்ளிருக்கும் விதை மற்றும் வித்தினை அகற்றி அதில் ஊறின அவலைப் போட்டு ஒரு கரண்டி கொண்டு அவலையும் பழத்தையும் சுரண்டி கலந்து சாப்பிடலாம்.

*கற்பழப் பருப்புப்(பாதாம் பருப்பு) பால் அவல்*

கற்பழப் பருப்பை நான்கு எடுத்து சிறிது நீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறிய பின் அந்நீரை அப்புறப் படுத்திவிட்டு பருப்பை மட்டும் மைய அரைக்கவும். அதனுடன் நீர் சேர்த்தால் பாலாகிவிடும். பாலை அவலில் ஊற்றி வெல்லம் கலந்து ஊறியபின் சாப்பிட அருமையாய் இருக்கும்.

*மிளகு நீர் அவல்*

வீட்டில் உணவுக்காக செய்யும் மிளகு நீர் அல்லது தக்காளி நீர் தூய்மை செய்த அவலில் தளும்ப ஊற்றி ஊறவைத்து அரைமணி கழித்து சாப்பிடலாம்.

No comments: