Tuesday, May 21, 2019

பெற்றோர்களை மதிக்காவிட்டாலும்,மனம் நோகச் செய்யாதீர்கள்...!

கிட்டத்தட்ட 70 வயதிருக்கும் அவருக்கு....
*
என்னோடு  உள்ளாகரம் குமரன் தியேட்டர்  பேருந்து நிறுத்தத்தில் ஏறி, எனதருகே அமர்ந்தார்.
*
பளிரென நரைத்தும், கொஞ்சம் கூட கொட்டாத தலைமயிர்கள்.
*
உழைப்பின் மூலம் உறுதியடைந்த தேகக்கட்டு, பழைய வார் செருப்பு.
*
அங்கொன்றும் இங்கொன்றுமாக அழுக்கு தெளித்த வேட்டி, சட்டையுடன், கையில் சுருட்டி வைத்திருந்த தஞ்சை மஹாராஜா துணிக்கடையின் மஞ்சப்பை.
*
கோயம்பேடு போகும்லய்யா என்றார் என்னிடம். போகும் தஞ்சாவூருங்களா? என்றேன். ஆமாய்யா, பயவூட்டுக்கு வந்துட்டு போறேன் என்றார்.
*
நீயும் தஞ்சாவூராய்யா என்றவரிடம் தலையாட்டிவிட்டு, பையன் என்ன பண்றாப்ல என்றேன்.
*
இங்க தான் ஏதோ மார்பில்ஸ் கம்பேனி வச்சுருக்குறான். ஊர் பக்கமே வரமாட்டங்கிறான்.ஏதோ பாக்கனும்போல இருந்துச்சு. ஆதான் ரெண்டு நாளைக்கு முந்தி வந்தேன்.
*
பேரன், பேத்திகள கண்ணாற பாத்துட்டு,இப்போ போறேன் என்றவரிடம் ஒரு ஏக்கம் தெரிந்தது.
*
ரெண்டு பொம்பளபுள்ளய, ஒரு பய எல்லோருக்கும் கல்யாணம் செஞ்சு வச்ச, ரெண்டு வருசத்துல அவ போயிட்டா.
*
அதுக்கப்பறம் நான் மட்டும்தான். மொதல்ல எப்பயாச்சாவதும்,எம் பெரிய பொண்ணாவது வந்து பாக்கும். இப்பெல்லாம் யாரும் வர்றது இல்ல என்றார் நான் கேட்காமலேயே.
*
இப்போது ,எனக்கேதோ அவரிடம் கேட்க வேண்டும்போல் இருந்தது.
*
பையன் நல்லா பாத்துக்கிறாப்லள? என்றதும், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சைரன் ஒலி எழுப்பிக்கொண்டிருந்த அவசர ஊர்தி வாகனத்தையே உத்து் கவனித்துக்கொண்டிருந்தார். *
காதில் விழவில்லையோ என்ற எண்ணத்தில், நான் மீண்டும் பையன் உங்கள பாத்துக்குறாருல்ல என்றேன்.
*
தயக்கத்துடன், ம்ம்ம்ம் என்றவர், சிறிது நேர அமைதிக்கு பிறகு...பாத்துக்கிட்டுதான் இருந்தான். நெலத்தெல்லாம் எம் மருமவ பேருக்கு மாத்துர வரைக்கும்.
*
அதுக்கப்பறம், அவன் ஊருக்கும் வர்றதுல்ல! செலவுக்கும் பணம் கொடுக்கிறதுமில்லா. இருக்கிற ரெண்டு பசுமாடு தான், எனக்கிப்ப கஞ்சியூத்துது என்றபோது, அவர் கண்களில் கண்ணீர் கட்டியிருந்தது.
*
அவன் என்ன பண்ணுவான்! பாவம், அவ ஆட்ன படி ஆடுறான். இப்பக்கூட அவன் வர்றதுக்குல்ல சொல்லாம கெளம்பிவந்துட்டேன்.
*
ஏதோ சாட மாடையா,அவ கெளம்பித்தொலன்னு பேசறப்பையே, கெளம்பிடனும்னு தான் வந்துட்டேன்.
*
இந்த மாதிரி இழுத்துக்கிட்டு கெடக்காமா, படுத்திருக்கும்போதே உசுரு போயிடனும்னு தான் வேண்டிகிட்டிருக்கேன் என்று, இப்போது தூரத்தில் கேட்கும் ஆம்புலன்சு ஒலியை கவனித்தப்படியே பேசியவரிடம், மேற்கொண்டு பேசி எதையும் கிளற வேண்டாமென்று தோன்றியது.
*
நான் இறங்கவேண்டிய, ஈக்காட்டுதாங்கல் நிறுத்தம் வந்தும், ஏனோ இறங்கவில்லை. இவரை கோயம்பேடு அழைத்துசென்று, பேருந்து ஏற்றிவிடவேண்டும் போல் தோன்றியது .அப்படியே அவருடனேயே அமர்ந்துவிட்டேன்.
*
ஏனென்று தெரியவில்லை! அவரருகில் அமர்ந்திருப்பது எனக்கு பிடித்திருந்தது. அவர் மீது வீசிய வியர்வை நாற்றம் இப்போது வா(பா)சமாக மாறிப்போயிருந்தது.
*
கோயம்பேடு வந்தறங்கியதும்,பேருந்து நிலையத்தினுள் உள்ள உணவகத்தை காட்டி, சாப்பிடலாமா என்றேன். வீட்லேயே சாப்ட்டுதான் பஸ் ஏறினேன் என்று, அவர் சொன்ன பதில், பொய்யென்று அவர் முகம் காட்டிக்கொடுத்தது.
*
வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று, என்ன வேணுமோ வாங்கிக்க என்ற என்னை, வெறிக்க பார்த்துவிட்டு,ஒரு தோச மட்டும் போதும் என்றார்.
*
இருவரும் வாங்கி சாப்பிட்டோம். அவர் சாப்பிடும் வரை பேசவே இல்லை.
*
பின்னர், அரசு குடிநீர் ஒன்றை வாங்கிக்கொடுத்து, தஞ்சை செல்லும் பேருந்து ஒன்றின் இருக்கையில் அந்த தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு, கிழே இறங்கி நடத்துநரிடம் டிக்கெட் எடுக்க எனது பர்சை எடுத்தபோது,
*
என் கையை பிடித்து அவர் கசங்கிய பையில் இருந்த, கசங்காத ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து, தஞ்சாவூர் ஒன்னு என்றார்.
*
டிக்கெட் போக, மீதம் கொடுத்த ரூபாயில் இருந்து, ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து என் கையில் திணித்தார். தயவுசெஞ்சு வாங்கிக்கய்யா! நான் இன்னும் அந்த நெலமைக்கு வரல என்றதும்,
*
கண்முட்டிய கண்ணீருடனும், உயிர் வீங்க வைக்கும் வலியுடனும்,விருவிருவென நடந்து, வெளியில் வந்து பேருந்து பிடித்து என்னுடைய அறையில் நுழைந்தேன்.
*
என் கையில் திணித்துக் கசங்கிய அந்த 50 ரூபாய் நோட்டை , வெறித்து பார்த்தபடியும், அவரை பற்றி எண்ணிப்பார்த்தப்படியுமே, படுக்கையில் நெடுநேரமாக கிடக்கிறேன்,அனைத்தையும் மறந்து.
*
பெற்றோர்களை மதிக்காவிட்டாலும்,மனம் நோகச்  செய்யாதீர்கள்...!
*

No comments: